Friday, October 31, 2003

Penang - 1

பினாங்கு மாநிலம் அழகான குட்டியான ஒரு மாநிலம். இந்த மாநிலத்திற்கு இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று பினாங்குத் தீவு, மற்றொன்று பட்டர்வொர்த் என்று அழைக்கப்படும் தீபகற்ப மலேசியாவின் ஒரு பகுதி. இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயர் Georgetown. இந்த மாநிலத்தின் சிறப்பே இதன் சுற்றுலா தலங்கள் தான். இந்த மாநிலத்தில் தான் அனைத்துலகப் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் ஒன்றான Universiti Sains Malaysia அறிவியல் பல்கலைக் கழகம் இருக்கின்றது.

பினாங்கில் வார ஓய்வு நாட்களைக் கழிப்பதற்கு இனிமையான பல இடங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் நான் எனது நண்பர்களோடு எப்போதும் வெளியே கிளம்பி விடுவதுண்டு. ஒவ்வொரு நாளும் இங்கே திருநாள் தான். மனதிற்குப் பிடித்த அத்தனை விஷயங்களும் இங்கே கிடைக்கும்.


பினாங்குத் தீவையும் பட்டர்வொர்த் பகுதியையும் இணைக்கும் பாலம் ஒன்று 1988ல் கட்டப்பட்டது. இதன் நீளம் 13.5 km. ஒவ்வொரு முறை இந்தப்பாலத்தைக் கடக்கும் போதும் காரிலிருந்து இறங்கி தீவின் அழகை ரசிப்பதற்கு எனக்குப் பிடிக்கும். அதிலும் காலை நேரத்தில் பாலத்தில் பிரயாணம் செய்யும் போது பாதி பனி மூடியும் மூடாமலும் இருக்கும் காட்சி கொள்ளை அழகு.


பினாங்கு தீவிற்கு வருவதற்கு Ferry கப்பல் எடுத்தும் பிரயாணம் செய்யலாம். 30 நிமிடம் நீடிக்கும் இந்தப் பிரயாணம் சுவாரசியமாக இருக்கும். கடலில் நீந்தும் Jelly மீன்களை கண்டு ரசித்துக் கொண்டு பயணிக்கலாம்.

மலேசியா பொதுவாக பச்சை பசேலென்று இருக்கும் ஒரு நாடு. இங்கு வருடம் முழுதுமே (ஏப்ரல் மே தவிர்த்து) மழை பெய்து கொண்டே இருக்கும். ஆக பினாங்கில் இயற்கை ஆழகு நிறைந்த பல பூங்காக்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று Botanical Garden. இந்தப் பகுதியை தண்னீர் மலை என்று சொல்வதும் உண்டு. இந்தப் பகுதியில் மலேசியாவில் மிகப் பிரசித்தி பெற்ற 3 ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றன. தண்ணீர்மலை முருகன் கோயில் (மலைக்கோயில்), நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயில், அதோடு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மீனாட்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும் மலேசியாவின் மிகப் பிரசித்தி பெற்றவை. மலேசியாவைச் சுற்றிப் பார்க்க நினைத்தால் தைப்பூசம் நடக்கும் நாளை நாட்குறிப்பில் பார்த்து விட்டு வர மறக்க வேண்டும். (மலேசியாவின் சிறப்புக்களில் தைப்புசத் திருவிழாவும் ஒன்று) சரி Botanical Garden-க்கு வருவோம்.


இந்த Botanical Gardenக்கு வந்தவுடனே நம்மை வரவேற்க குரங்குகள் ஓடிவரும். அவ்வளவு குரங்குகள் இங்கே உண்டு. இங்கே செல்லும் போதெல்லாம் பழங்களும் கடலைகளும் வாங்கிக் கொண்டுதான் செல்வேன். நடக்கும் போது கைகளில் வந்து பிடிங்கிச் செல்லும் அளவிற்கு இந்தக் குரங்குகளுக்கு அவ்வளவு தைரியம் உண்டு. Botanical Garden வாசலிலேயே இளநீர் கடைகள் மற்றும் குளிர்பான சிற்றுண்டி கடைகளும் இருக்கும். Botanical Garden உள்ளே சென்றால் அருவி ஒன்று இருக்கும். இங்கே குளித்து மகிழலாம். மலை உச்சியிலிருந்து கொட்டும் அருவி சில்லென்ற அருவியாகியிருக்கின்றது.


மலேசியாவிற்கு வரவேண்டுமென்று இப்பவே ஆசை வந்துவிட்டதல்லவா..:-)

Thursday, October 30, 2003

People's Hero

இன்னைக்கு ஒரு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன்...

வீரபாண்டிய கட்டபொம்மனை எப்படி தமிழ் நாட்டிலே எல்லோரும் மகாவீரராக நினைக்கின்றனரோ அதேமாதிரி எங்க மலேசியாவிற்கும் ஒரு சில மகா வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் மலாக்கா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒரவர் இருந்தார். அவர் பெயர் ஹங் துவா. இவர் வாழ்ந்த காலம் 16ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அப்போது மலேசியா இஸ்லாமிய நாடாக மாறியிருந்தது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மலாக்காவை ஆண்ட அரசன் பரமேஸ்வரன் இஸ்லாமிய பெண்ணை மணந்து தானும் மதம் மாறி மலேசிய நாட்டையே இஸ்லாமிய நாடாகவும் மாற்றி விட்டிருந்தான். அவனது பரம்பரையில் வந்த ஒரு ராஜாவின் அரண்மனையில் மிக முக்கிய பொருப்பில் இருந்தான் வீரன் ஹங் துவா.

இவனுக்கு 4 நண்பர்கள்; ஹங் ஜெபாட், ஹங் கஸ்தூரி, ஹங் லெக்கியூ, ஹங் லெக்கீர். இதில் ஹங் ஜெபாட் இவனது மிக மிக நெருங்கிய நண்பன். இருவரும் நகமும் சதையும் போல அவ்வளவு நெருக்கம். ஹங் துவா கத்திச் சண்டையில் வல்லவன்.

இந்த வகைக் கத்தியை 'கெரிஸ்' என்று சொல்வார்கள். இந்த கெரிஸ் சண்டையில் ஹங் துவா வல்லவன். இவனது வீரத்தை நாடே புகழ்ந்தது.

ஒரு முறை மன்னருக்கு சில அமைச்சர்கள் ஹங் துவாவைப்பற்றிய தவறான தகவல்களைத் தரவே, அரசன் ஹங் துவாவை தேடிக் கண்டுபிடித்து கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்து விட்டார். இதைக் கேட்ட ஹங் துவா தலைமறைவாகி விட்டான். அரச கட்டளையைக் கேட்ட நண்பர்கள் நால்வரும் மிகுந்த கோபம் அடைந்தனர். ஹங் துவா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்த ஹங் ஜெபாட் இந்த கட்டளையைக் கேட்டு கொதித்து எழுந்தான். நாட்டிற்காக உயிரையே கொடுக்கவும் தயங்காத ஹங் துவாவின் மேல் ஏற்பட்ட பழிக்காக அரசரைக் கொல்ல முடிவெடுத்தான். அரசரின் அரண்மனைக்குச் சென்று அனைவரையும் பயமுறுத்தி விரட்டினான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசர் செய்வது அறியாது திகைத்தார். அமைச்சர்கள் உடனே, இந்த ஆபத்திலிருந்து அரசர் தப்பிக்க ஹங் துவா ஒருவனால் தான் முடியும் எனக் கூறவே அரசனும் ஹங் துவாவைத் தேட ஆட்களை அனுப்பினான். அரசர் ஆபத்தில் மாட்டிக் கொண்டதை அறிந்த ஹங் துவா உடனே நாட்டுப் பற்றின் காரணமாக அரசரைக் காப்பாற்ற விரைந்தான்.

அரசரை எதிர்ப்பவன் தனது உயிர் தோழன் ஹங் ஜெபாட் தான் என்பதை அறிந்ததும் திகைத்தான். நண்பனா அரசரா என்ற குழப்பத்தில் செய்வதறியாது திகைத்தான். இறுதியில் நாட்டின் நண்மைக்காக தனது நண்பனையே தனது கூரிய கெரிஸ் கத்தியால் குத்திக் கொன்று அரசரைக் காப்பாற்றினான். இந்த குழப்பம் மிகுந்த சண்டை 3 பகல் 3 இரவுகள் நடந்ததாம். பக்கத்தில் இருப்பதுதான் மலாக்காவில் இன்றளவும் இருக்கும் ஹங் ஜெபாட்டின் கல்லறை.
அரசர் இந்த நிகழ்வுக்குப் பின் ஹங் துவாவை (மன்னித்து??) ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றளவும் இந்த நிகழ்வு ஒரு சர்ச்சையை கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் அரசர் செய்தது தவறு தானே! ஹங் ஜெபாட் தனது நண்பனுக்காகத் தானே போராடினான். ஆனால் ஹங் துவா செய்தது சரியா..? எனப் பல விவாதங்கள் இன்றளவும் மலேசியாவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. [கற்பில் சிறந்தவள் கண்ணகியா மதாவியா என தமிழகத்தில் விவாதம் நடப்பது போல..:-) ]

Wednesday, October 29, 2003

Malaysian states & Flag



இப்போது பல தமிழ் சினிமா படங்களில் மலேசியாவின் பல அழகிய இடங்களைப் பாடல் காட்சிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிலும் முக்கியமாக, உலகின் மிக உயர்ந்த கட்டிடமான இரட்டைக் கோபுரங்களை இப்போது பல தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் காண முடிகின்றது. மலேசியாவிற்குச் செல்பவர்களும் எப்போதும் மலேசிய தலைநகரான குவாலாலும்பூர் (Kuala Lumpur) செல்வது தான் வழக்கம். அதற்கு அடுத்ததாக மலேசியாவில் பிரசித்தி பெற்ற மாநிலமாகத் திகழ்வது பினாங்கு மாநிலமாகும். நானும் பினாங்கில் தான் பிறந்தேன்..:-)

சிலர் தவறாக சிங்கப்பூரையும் மலேசியாவின் ஒரு பகுதியாக நினைத்துக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு; சிங்கப்பூர் ஒரு தனி நாடு. மலேசியா ஒரு தனி நாடு.

மலேசியாவில் மொத்தம் 13 மாநிலங்கள் இருக்கின்றன. அவை வடக்கிலிருந்து பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், த்ரெங்கானு, பஹாங், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், சபா, சரவாக் ஆகும். இந்த பதின்மூன்றோடு மேலும் ஒரு மாநிலமாகக் கூட்டரசு பிரதேசங்கள் குவாலாலும்பூர் மற்றும் லாபுவான் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

மலேசியக் கொடியில் 14 (சிவப்பு + வெள்ளை) கோடுகள் இருக்கும். இவை பதினான்கு மாநிலங்களைக் குறிப்பவை.



நீல வர்ணம் பல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் குறிக்கின்றது; பிறை நிலா, மலேசிய நாட்டின் மதம் இஸ்லாம் என்பதையும், மஞ்சள் வர்ணம் உயரிய தன்மையையும் குறிக்கின்றது. இந்த மஞ்சள் நிறம் மலேசியா அரசாட்சி செய்யப்படும் ஒரு நாடு என்பதைக் குறிப்பதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

Monday, October 27, 2003

Population Statistics



2001ன் கணக்கின் படி மலேசிய நாட்டின் மக்கள் தொகை 23.27 மில்லியன் ஆகும். மலேசியாவின் 13 மாநிலங்களில் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிலாங்கூர். 18.0 சதவிகித மக்கள் இந்த மாநிலத்தில் தான் உள்ளனர். இதற்கு அடுத்ததாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஜொகூரும் சபா மாநிலமும் ஆகும்.


மலேசிய நாடு பல இனமக்கள் கூடி வாழும் ஒரு நாடு. பல தேசத்தவர்கள் இங்கு வந்து குடியேறிவிட்டாலும், பொதுவாக மலாய், சீன இந்திய இனத்தவர் தான் எண்ணிக்கையில் அதிகமாக இங்குள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 65.1 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 26.0 விழுக்காட்டினர் சீனர்கள், 7.7 விழுக்காட்டினர் இந்தியர்கள். மீத 1.2 விழுக்காட்டினர் பிற தேசத்தவர்கள்.

மலேசியா பிரித்தானிய காலனித்துவ அரசிடம் இருந்து 1957ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.மூன்று இன மக்களும் எந்த பாகுபாடுமின்றி சுதந்திரமாக தமது மொழி மற்றும் சமய வழிபாட்டு முறைகளைப் பேணும் வகையில் மலேசிய சட்டங்கள் அமைந்திருக்கின்றன. மலேசியாவின் தேசிய மொழி மலாய். நாட்டின் சமயம் இஸ்லாம். இருப்பினும் தமிழர்கள் தமிழைப் படிக்கவும் இந்துக்கள் கோயில்களைக் கட்டி பராமரிக்கவும் சமய வழிபாடுகளை மேற்கொள்ளவும் இங்கு எந்த தடைகளும் இல்லை.

Posted at 11:32 pm by subaillamMake a comment
Welcome Aboard
மலேசியா ஒரு அழகிய நாடு. இங்கு மாலாய்காரர்கள், சீனர்களோடு, தமிழர்களும் வாழ்கின்றனர். எனது தாயகமான மலேசியாவைப் பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்த வலைப்பூவை உருவாக்கியிருக்கின்றேன். உங்கள் கருத்துக்களை தாராளமாக எழுதுங்கள். - சுபா