Friday, June 28, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 24

24. கெடா உடைகள் - பாஜு மெலாயு கெடா

பெண்களுக்கான உடைகள் அது எந்த நாடாக இருந்தாலும் சரி அழகிய வர்ணங்களில்  அமைந்து கண்களைக் கவரும் வகையில் அமைந்திருப்பது பெண்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். அழகு என்றாலே பெண்கள்; அந்த  அழகுக்கு அழகு சேர்க்கும் உடைகளை  அமைக்க கற்பனைகளைச் செலுத்தி விதம் விதமாக  அமைத்து மகிழ  ஒவ்வொரு சமூகமும் மறப்பதில்லை.

இந்தியப் பெண்கள் அணியும் சேலைகளை எடுத்துக் கொண்டால் கைத்தறி சேலைகளிலேயே எந்தனை எத்தனை வகை? பட்டுச் சேலைகளில் பல வகை.. சிண்டேட்டிக் வகை சேலைகள்  என்றால் அவற்றிலும்  பல வகை. ஒவ்வொரு மானிலத்துக்கும் சிறப்பு சேர்க்கும் வகை சேலைகள்.. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல விதங்கள்.. சுங்குடி சேலை, செட்டி நாட்டு கைத்தறி, என விதம் விதமாகப் பெண்கள் ரசித்து வாங்கி அணிந்து மகிழ கிடைக்கின்றன.

மலாய் சமூகத்திலும் இம்மக்களின் உடை விஷயத்தில் இப்படி வேறுபாடுகளைப் பார்க்க முடியும். கிழக்கு மாகணங்களான திரெங்கானு, கிளந்தான் போன்ற வகை உடையிலிருந்து தெற்கு மாகாண உடைகளில் வேறு பாடு உண்டு. வடக்கு மாகாணங்களில் தனிச்சிறப்புடன் உடை அலங்காரம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உண்டு. அந்த  வகையில் கெடா மானிலத்தின்  பெண்களுக்கான பாஜு மெலாயு தனி அழகு கொண்ட வடிவத்தில் அமைக்கப்படுவது.



பெண்களுக்கான பாஜு மெலாயு  இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். மேல் பகுதியில் அணியப்படும் பகுதியானது பாரம்பரிய மலாய் உடையிலிருந்து மாறுபட்டு சற்றே குட்டையாக அமைவது. பாரம்பரிய மலாய் உடையின் மேல் பகுதியானது சற்று இருக்கமான அமைப்பு கொண்ட வகையிலோ அல்லது தொள தொளவென்ற வகையிலோ அமைந்தாலும் அதன் நீளம் முட்டிக் கால் பகுதிக்கும் கீழே வரை செல்வதாக அமைந்திருக்கும்.

ஆனால் பாஜு மெலாயு கெடா  மேல்பகுதி குட்டையாக அடிப்படையில் சற்றே தென் தாய்லாந்து உடைபோல   அமைந்திருக்கும் . கழுத்துப் பகுதி வட்டமான அமைப்பிலும் கைப் பகுதி நீளமாக ஆனால் படத்தில் இருப்பது போல கைப்பகுதி வரை நீளாமல் அமைந்திருக்கும். இதனை கைத்தறி வகை, பாத்தேக் வகை, பட்டுத்துணி, சிந்தேட்டிக் வகை துணிகளைக் கொண்டு அமைப்பது வழக்கம். நெல் வயல்களில் பணிபுரியும் பெண்கள் பாத்தேக்கில் அமைந்த இந்த ஆடைகளை அணிந்து வயல்களில் பணி புரிவார்கள். அவர்கள் மேல் பகுதியில் குட்டையான இவ்வகையான  மேல்பகுதி ஆடை அணிந்து  கீழ்பகுதிக்குப் பாத்தேக்கில் அமைந்த சாரோங்கை அணிந்திருப்பார்கள். வெயில் காலத்தில் இவ்வகை துணிகளால் செய்யப்பட்ட ஆடை உடலுக்கு மிக சௌகரியமாக அமைந்திருக்கும்.

பாத்தேக் சாரோங் வகை வகையாக (கைலிகள்)

பாஜு மெலாயு கெடா தற்காலத்தில் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் விரும்பி அணியும் வகையிலும் அமைக்கின்றனர். நான் மலேசியாவில் இருந்த காலங்களிலும் இவ்வகையில் ஆடைகள் தைக்கச் செய்து அணிந்து அலுவலகம் செல்வதுண்டு.

ஆண்களுக்கான உடையோ பொதுவான மலாய் ஆடையை ஒத்ததாக இருக்கும். ஆண்களின் மலாய் ஆடைகள் மூன்று பகுதிகளில் அமைந்திருப்பவை. மேல் பகுதியில் மெல்லிய பருத்தித் துணியால் அமைந்த குர்தா போன்ற தொள தொள என்ற அமைப்பில் அமைந்த சட்டை, ஒரு கால்சட்டை என அமைந்து இடுப்பில் சாரோங் அல்லது ஒரு துண்டு போன்ற ஒரு துணியைக் கட்டிக் கொள்வார்கள்.


மலாய் பாரம்பரிய உடையில் ஒரு ஆண் குழந்தை

ஆனால் திருமணம் அல்லது ஏதேனும் சிறப்பு வைபவங்கள் என வரும் போது பட்டுத் துணிகளில் இவ்வகையான ஆடைகளைத் தயாரித்து உடுத்துவதே வழக்கம். இப்போதெல்லாம் மணிகள் இணைத்து விதம் விதமாக அழகு செய்து இந்த  உடைகளைத் தயாரிக்கின்றார்கள். ஆண்கள் பிரத்தியேகமாக கோட் போன்ற ஒன்றினை வெல்வெட் துணியில் தங்க நிறத்திலான மலர் வடிவங்களை கழுத்துப் பகுதி கை பகுதிகளில் இணைத்துத் தைத்து இந்த ஆடைக்கு மேலே போட்டுக் கொள்வர். கீழ்காணும் படத்தில் ஒரு இளைஞன் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மலாய் பாரம்பரிய உடையை அணிந்திருப்பதையும் ஒரு இளம்பெண் கெடா மானிலத்திற்கானப் பிரத்தியேகமான பாஜு மலாயு அணிந்திருப்பதையும் காணலாம்.




ஆண்கள் இவ்வகை ஆடைகளைப் பணிபுரியும் இடங்களுக்கு அணிந்து செல்வதில்லை. இல்லங்களில் ஓய்வாக இருக்கும் போதும், சமய விழாக்களின் போதும், தொழுகை செல்லும் போதும் குடும்ப விழாக்களின் போதும் பாஜு மெலாயு அணிகின்றனர். காலம் மாறிக் கொண்டிருந்தாலும் கூட மலாய் ஆண்களும் பெண்களும் ஆடை விஷயத்தில் தங்கள் உடைகளை மறக்கவில்லை. தங்களின் பாரம்பரிய உடைகளை அவர்கள் தவறாமல் அணிகின்றார்கள். ஆனால் அவை முன்பிருந்த  வகை மாடல்களிலிருந்து மாறி காலத்தின் தேவைக்கேற்ப அழகியல் விஷயங்களை உள்ளடக்கியதாக அமைந்து இருக்கின்றன.

தொடரும்..

சுபா

Sunday, June 23, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 23

கெடா மானிலம்

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசியல் செய்திகளைக் கடந்த இரண்டு பதிவுகள் வழங்குவதாக அமைந்திருந்தன. இந்தப் பதிவில் சுதந்திரத்திற்குப் பின் இந்த மானிலம்  எவ்வகையில்அமைக்கப்பட்டது, அதன் தற்போதைய அரசியல் பொருளாதார நிலை போன்ற விஷயங்களை  வழங்கலாம் என  நினைக்கின்றேன்.

மலேசிய சுதந்திரத்திற்கு முன்னரே பினாங்கு கெடாவின் ஒரு பகுதி என்ற நிலையிலிருந்து பிரிந்து தனி மானிலமாகி விட்டது. கெடாவை சார்ந்து அமைந்ததாக பெர்லிஸ் மானிலம் வடக்குப் பகுதியில் உள்ளது. கிழக்குப் பகுதியில் பெருமளவு தாய்லாந்து நாட்டினை எல்லையாக இந்த மானிலம் கொண்டுள்ளது. தெற்குப் பகுதியில் பேராக் மானிலமும் பினாங்கு மானிலமும் எல்லையாக அமைந்திருக்கின்றன.

சுற்றுலா பயணிகளுக்குச் சுவர்க்கபுரியாகத் திகழும் லங்காவித் தீவும் அதனை ஒட்டி அமைந்திருக்கும் 99 தீவுகளும் கெடா மானிலத்தைச் சேர்ந்தவையே.



கெடா மானிலக் கொடி மிக எளிமையான அமைப்பில் சிவப்பு நிறத்தில் அமைந்தது. சிவப்பு நிறம் இம்மானிலத்தின் பாரம்பரிய வர்ணம். அத்துடன் வளத்தையும் செழிப்பையும் குறிக்கும் வர்ணம் என்பதாக அமைவதால் இந்த வர்ணமே கொடியின் நிறமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மன்னரின் அதிகாரத்தைக் காட்டும் மஞ்சள் நிற பட்டயமும்,  இஸ்லாமிய மதமே அதிகாரப்பூர்வ மதம் என்பதைக் குறிக்கும் பச்சை நிறத்திலமைந்த இளம் பிறையும், நெல் பயிர் இம்மானிலத்தின் பிரதான பொருளாதாரச் சின்னமாக இருப்பதால் நெல்கதிர்களும் கொடியின் சின்னத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் தொகையைப் பொருத்த அளவில் மலேசிய மானிலங்களில்   1,890,098 மக்கள் எண்ணிக்கையுடன்   எட்டாவதாக இம்மானிலம் இடம்பிடிக்கின்றது. மலாம், சீன, இந்திய, தாய்லாந்து  எனப் பல இன மக்கள் கலந்து வாழும் ஒரு மானிலம் இது. 2010ம் ஆண்டின் கணக்கின் படி 77.2% இஸ்லாமியர்களும், 14.2% புத்த மதத்தினரும், 6.7% இந்து மதத்தினரும், 0.8% கிறிஸ்துவ மதத்தினரும் என்ற வகையில் மக்கள் மதச் சார்பு அமைந்திருக்கின்றது.

மன்னராட்சி என்பது மானிலத்தின் தலைவர் என்ற வகையிலும் மானிலத்தின் இஸ்லாமிய மதத் தலைவர் என்ற வகையிலும்  மட்டுமே அமைகின்றது. மானில அரசு என்று தனியாக அமைந்து மானில முதலமைச்சர் அவரைச் சார்ந்த அமைச்சு என மக்களாட்சி சட்டப்பூர்வமாக 1950ம் ஆண்டே நிர்ணயிக்கப்பட்டு சுதந்திரத்தின் போது அதாவது 1957ல் இது வழக்கில் அமைந்தது.மானிலத்தின் ஆட்சி முறையாக நடைபெறும் பொருட்டு 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 12 வட்டாரங்களாவன பாலிங், பண்டார் பஹாரு, கோதா  ஸ்டார், குவாலா மூடா, கூபாங் பாசு, கூலிம், லங்காவித்தீவு, பாடாங் தெராப், பெண்டாங், பொக்கோக் செனா, சிக், யான் ஆகிய வட்டாரங்களாகும்.

இம்மானிலத்தின் பொருளாதாரம் எனப் பார்க்கும் போது நெற்பயிரிடுதலே பிரதான வருவாய் தரும் பொருளாதாரக் காரணியாக அமைகின்றது. இம்மானிலத்திற்கு என்று இல்லாமல் மலேசியா முழுமைக்குமே இம்மானிலத்தில் விளைகின்ற அரிசி, வினியோகம் செய்யபப்டுகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்து அமைந்திருப்பதால் கெடா  மலேசியாவின் அரிசிப்பாத்திரம் (Jelapang Padi - Rice Bowl)  என்றும் குறிப்பிடப்படுகின்றது.



இதற்கு அடுத்ததாக சுற்றுலா துறையைக் குறிப்பிடலாம். உலகம் முழுமையிலிருந்தும்  பிரத்தியேகமாக லங்காவித்தீவிற்குச்  சுற்றுலா நிமித்தம் வந்து கூடும் மக்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது. இதனைத் தவிர்த்து தொழிற்சாலைகள், வணிகம் என்ற வகையிலும் இம்மானிலத்தின் பொருளாதார நிலை அமைந்திருக்கின்றது.

கெடா மானிலத்தில் உலகத் தரம் வாய்ந்த சில பல்கலைக்கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றோடு போலி டெக்னிக், தனியார் பள்ளிகள் என்பனவும் இங்கு அமைந்திருக்கின்றன. அரசாங்கப் பள்ளிகள் இங்கு ஆரம்பப்பள்ளி,  தொடக்கப்பள்ளி என்ற நிலையில் அமைந்திருக்கின்றன. மலேசியாவைப் பொருத்த வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி என்ற நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மலாய், சீன அல்லது தமிழ் ஆரம்பப்பள்ளிகளுக்கு 6 ஆண்டுகால அடிப்படைக் கல்விக்கு தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு அனுப்ப சுதந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்று பின்னர் இடைநிலைப்பள்ளிக்குச் செல்கையில் மலாய் மொழியில் முழுதும் அமைந்த கல்விக்குச் செல்கின்றனர்.

பொதுப் போக்குவரத்து எனும் போது வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை இந்த மானிலத்திற்கு வருவதற்கான சிறந்த சாலை வசதியை வழங்குகின்றது. மானிலம் முழுமைக்குமே தரமான சாலைகள் அமைந்திருக்கின்றன.  இந்த மானிலத்திற்கென்று பிரத்தியேகமாக ஒரு விமான நிலையம் இல்லை. பினாங்கு மானிலத்தில் அமைந்திருக்கும் அனைத்துலக விமான நிலையமே இந்த  மானிலத்திற்கான விமான போக்குவரத்திற்கான பயன்பாட்டிற்கும் அமைகின்றது.


தொடரும்...
சுபா

Thursday, June 20, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 22

கெடா - மன்னராட்சி காலத்தில்

பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி குறிப்பிட்டு கடாரத்தில் சோழர்களின் ஆட்சி பற்றியும் சில குறிப்புக்களை முந்தைய பதிவில் அளித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தைப் பற்றிய பொதுவான சில தகவல்களை வழங்குவதும் அவசியம் எனக் கருதுகின்றேன்.

கெடா மானிலத்தைப் பற்றிய குறிப்புக்களைப்  பதிய ஆரம்பித்த முதல் பதிவில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக முடிசூடிக்கொண்டிருப்பவர் கெடா மானிலத்தின் சுல்தான் என்ற விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். மலேசிய மன்னர்கள் தேர்வு பற்றி  பலர் அறியாதிருக்கலாம்.

மலேசியாவில் உள்ள மொத்தம் 13 மானிலங்களில் 9 மானிலங்களில் மட்டுமே சுல்தான்கள் ஆட்சி இருக்கின்றது. மலாயாவிற்கு 15ம் நூற்றாண்டு அதன் பின்னர் போர்த்துக்கீஸியர்கள், ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னர், அதாவது 14ம் நூற்றாண்டு வரை  இந்த ஒன்பது மானிலங்களிலும் மன்னர் ஆட்சியே இருந்தது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் மன்னராட்சி தான் என்றாலும் கூட ஐரோப்பியர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய பின்னர் மன்னராட்சியின் ஆதிக்கம் குறைந்து வந்தது. அச்சமயத்தில் இப்போது தனி மானிலமாக இருக்கும் பினாங்கு கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது. இப்படி ஒன்பது மன்னர்கள் ஆட்சி செய்து வந்த மானிலங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து ஒரே மலேசியா என்ற ஒரு குடைக்குள் வைப்பது என முடிவான போது இந்த  ஒன்பது சுல்தான்களும் 5 ஆண்டு தவணை என்ற வகையில் சுற்றின் அடிப்படையில் மலேசியாவின் மன்னராக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அரசியல் சாசனம் எழுதி வைத்தனர். அந்த வகையில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக இருப்பவர் கெடா மானிலத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்த சுல்தானே.

இம்மானிலத்தின் தற்போதைய அரச பரம்பரைச் செய்திகளைச் சொல்வது மெரோங் மஹாவம்சா காவியம். (Hikayat Merong Mahawangsa). இக்காவியத்தின் குறிப்புக்களின் படி கி.பி.1146ம் வருடம் இந்த அரச பரம்பரையைத் தோற்றுவித்தவர் ஒரு ஹிந்து மன்னரான மெரோங் மஹாவம்சா. இந்த மன்னரின் முழுப் பெயர் ப்ரா ஓங் மஹாவங்சா. பின்னர் இவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவி தன் பெயரை சுல்தான் முஸாபர் ஷா என மாற்றிக் கொண்டார்.


ராஜேந்திர சோழனின் படைத்தலைவன் பீமசேனனின் படைகள் கடாரத்தின் கோட்டையைத் தாக்கி கைப்பற்றி சோழ ஆட்சியை இங்கு தொடக்கினர். அப்போர் காட்சி ஓவியமாக.

சோழ மன்னர்களின் ஆட்சி ராஜேந்திர சோழன் கடாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலம் தொடங்கி ஏறக்குறைய 90 ஆண்டுகள் இப்பகுதியில் நீடித்திருந்தது. ஆக அவ்வாட்சியின் இறுதி காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் விளைவாக உருவான ஒரு புது மன்னராட்சியில் அதன் தலைவரான ப்ரா ஓங் மஹாவங்சா தனது ஆட்சியை நிறுவியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ப்ரா ஓங் மஹாராஜா மன்னராக மூடிசூடிக் கொண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் இந்திய தாக்கம் கொண்ட பெயர்களாகவே அமைந்திருக்கும். கெடா அரசர்களின் பெயர்களை விளக்கும் விக்கி பகுதியில் உள்ள தகவலின் படி இந்த கீழ்க்காணும் பட்டியல்  அமைகின்றது.


  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 1(கி.பி 630 வாக்கில்)
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டிராஜா புட்ரா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 1
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா கர்ணாதிராஜா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா  கர்மா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 2
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா தர்மராஜா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாஜீவா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 2 (இவருக்குப் பின்னர் ப்ரா ஓங் மஹாராஜா பரம்பரையினர் ஆட்சி தொடங்குகின்றது) இந்த மன்னர் காலம் வரை கடாரம் ஒரு ஹிந்து புத்த மதத்தை முதன்மையாகக் கொண்டிருந்த ஒரு பகுதியே என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: http://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate

தொடரும்..

சுபா

Saturday, June 15, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 21

21. பூஜாங் பள்ளத்தாக்கு

தென் தாய்லாந்து தொடங்கி கீழே தெற்கில் ஜாவா சுமத்ரா என அனைத்து இந்தோனீசிய தீவுகளையும் ஸ்ரீவிஜய பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. புத்த  மதமும் ஹிந்து மதமும் பிரதான மதங்களாக அமைந்து இந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே புத்த விகாரைகளும் சிவ விஷ்ணு தெய்வங்களின் ஆலயங்களும் பரவி இருந்தன. தென்னிந்தியாவில் ராஜராஜ சோழனின் ஆட்சி செழிப்புடன் இருக்க, பல போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சோழ ராஜ்யத்தின் பரப்பு விரிந்து வளர்ந்து கொண்டே வந்த சமயம் அது.

ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசுக்கும் ராஜராஜசோழனின் சோழப் பேரரசிற்கும் நல்ல இணக்கமான உறவு இருந்து வந்தது. ராஜராஜனின்  நோக்கமானது பிற நாடுகளை கைப்பற்றி தம் ஆளுமைக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக மட்டும் அமைந்து விடவில்லை. மாறாக தென்கிழக்கு ஆசியாவில் இருந்த  ஏனைய நாடுகளின் அரசுகளோடு நல்ல இணக்கமான நட்புறவையும் வளர்த்து வர வேண்டும் என்ற வகையில் இந்த அரசியல் நிலைத்தன்மை அமைந்திருந்தது.இதற்கு ஒரு நல்ல சான்றாக ஆனைமங்கலம் பகுதியில் ராஜராஜன் ஸ்ரீ விஜய பேரரசின்  மன்னனுக்கு பரிசாக அமைத்த  புத்த விகாரையைக் குறிப்பிடலாம்.

ஆனால் இந்த நட்பு நிலை அப்படியே தொடரவில்லை. ராஜராஜன் காலத்திலேயே  கி.பி1007ல் சோழர்களின் போர்க்கப்பல் கடாரத்திற்கு வந்தமையை வரலாற்று நூல்களில் காண்கின்றோம். (Paul Michel Munoz - Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula) இது போர்செய்து கடாரத்தைக் கைப்பற்ற நிகழ்த்திய முயற்சியா என்பது வரலாற்றாசிரியர்களிடம் இன்னமும் தெளிவு பெறாத ஒரு தகவல் தான் என்றாலும் போர்க்கப்பல் கடாரத்திற்கு வந்ததற்கான சான்றுகள் ராஜராஜேஸ்வரத்தில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

நன்றி - விக்கிபீடியா

ராஜராஜனுக்குப் பிறகு முடிசூட்டப்பெற்ற ராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என்ற பெயருடனே அழைக்கும் தகுதி பெற்றவன். ராஜராஜேச்சுரத்தில் உள்ள கல்வெட்டில் கிபி1025ம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் ஸ்ரீவிஜய பேரரசின் முக்கியப் பகுதிகள் சோழ மன்னனின் ஆட்சிக்கு வந்தமைப் பற்றிய குறிப்புக்கள்  உள்ளன. அந்த வகையில் ஸ்ரீவிஜய பேரரசின் வடக்கு பெரும் நகரமாகத் திகழ்ந்த கடாரம், தெற்கில் பலேம்பாங், லங்காசுக்கா, ஜாம்பி, பானல் ஆகிய நகரங்கள் இந்த முழு ராஜ்ஜியமும் ராஜேந்திர சோழன் ஆளுமைக்குக் கீழ் வந்தமையைச் சான்று கூறி நிற்கின்றன.

நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கின்றது. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு மாபெரும் படையை வைத்துக் கொண்டு கிழக்காசிய பெரும் வணிகப் போக்குவரத்துப் பகுதியை ஆக்ரமித்து தம் ஆளுமைக்குக் கீழ்படுத்தி வைக்கும் அளவிற்கு பலம் பொருந்திய ஒரு பேரரசாக ராஜேந்திர சோழனின் அரசு திகழ்ந்தது.  அது இன்னமும் தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழர் ஆட்சி, தமிழ் பேசும் மக்கள், ஹிந்து பௌத்த ஆலயங்கள்  என மனம் கற்பனை செய்து பார்க்கவும் தவிரவில்லை. ஆனால் வரலாறு எப்போதும் எல்லாம் ஒரே வகையில் அமைந்திருக்காது என்பதை அவ்வப்போது நமக்கு நினைவுருத்திக் கொண்டுதானே இருக்கின்றது. ராஜேந்திர சோழன்  காலத்திலும் அவனுக்கு முந்திய கால கட்டத்திலும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியமும் இப்பகுதி மக்களும் ஹிந்து மத பௌத்த மதத்தை பின்பற்றி இருந்தவர்கள் என்பதால் இங்கே ஆங்காங்கே பல கோயில்கள் இருந்தமையை இன்றும் காணமுடிகின்றது. ஆனால் இந்தோனீசியாவில் இன்றளவும் பரவலாக தென்படும் ஆலயங்கள் போல மலேசிய நாட்டில் இப்பழங்  கோயில்கள் பாதுகாக்கப்படவில்லை என்பது உண்மை.

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்காசிய பகுதிகளுக்குக் குறிப்பாக கடாரப் பகுதிக்கு அரேபிய இஸ்லாமிய வருகை அதன் பின்னர் படிப்படியாக இப்பகுதி முழுமையும் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டு ஏனைய கலாச்சார பண்பாட்டு விஷயங்கள் படிப்படியாக குறைந்து மறைந்து போய் விட்ட நிலையை காண்கின்றோம்.

கடாரம் என்ற பெயர்கொண்டிருந்த நகரம் படிப்படியாக கெடா என்ற பெயர் மாற்றமும் பெற்றமையும் இந்த மாற்றங்களில் ஒன்றாகவே அமைகின்றது. ஆனால் கடாரத்தை நினைவு படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக கெடா மானிலத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு அமைகின்றது. இந்த பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை மரபுவிக்கியில் இங்கே உள்ளது.

பினாங்கு எனக்கு எவ்வளவு பரிச்சயமோ அதே அளவிற்கு கெடாவும் எனச் சொல்லலாம். பலமுறை கெடாவில் உள்ள பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கின்றேன். எனது ஒவ்வொரு முறை மலேசியாவிற்கான பயணங்களிலும் கெடாவிற்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாகிவிட்டது.

பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியில் கெடாவின் ஆற்றங்கரைப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கோயில்களை பெயர்த்துஎடுத்து மிக ழகாக அதனைத் தனித்தனியாக அமைத்து பார்வைக்கு வைத்திருக்கின்றார்கள். இப்பகுதியில் முதலில் வருவது ஒரு அருங்காட்சியகம். மிகச் சிறப்பாக ஆங்கிலேயர் காலத்திலேயே அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. சுற்றுச் சூழலே மனதைக் கவரும் வகையில் மிக ரம்மியமாக மைந்த ஒரு மலைப்பகுதியில் பூஜாங் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. ஜெராய் மலைப்பகுதி இதற்குமிக அருகாமையில் இருப்பதால் பசுமைக்குக் குறைவேதும் இல்லை.

மலேசியா செல்பவர்கள் அதிலும் கெடா செல்பவர்கள் தவிர்க்காமல் இப்பகுதிக்குச் சென்று வரவேண்டியது அவசியம்.














தொடரும்...
சுபா

Friday, June 7, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 20

20. மஹாதீர்



மலேசிய சுதந்திரம் பற்றியும் துங்கு அப்துல் ரஹ்மான் பற்றியும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1957க்கு முந்தைய சில ஆரசியல் நிகழ்வுகளையும் துங்கு அப்துல் ரஹ்மான் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி அமைந்த அரசியல் விஷயங்களையும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் மலேசியாவின் வளர்ச்சி மிக துரிதமாக அமைந்தது. அதில் முக்கியப் பங்கு வகித்த ஒருபிரதம மந்திரியாக டாக்டர்.மஹாதீர் முகமது அவர்களே  விளங்குகின்றார்கள். இந்தப் பதிவு துன் டாக்டர்.மஹாதீர் முகமது பற்றியதாக அமைகின்றது. அதற்குச் சிறப்புக் காரணம் இவரும் கெடா மானிலத்தின் மண்ணின் மைந்தர் என்பதே.


சுதந்திர மலேசியாவில் 22 வருடங்கள் தொடர்ந்து பிரதம மந்திரி பதவியைத்  தக்க வைத்துக் கொண்ட பெருமை இவரையே சேரும். 1981 தொடங்கி 2003ம் ஆண்டு வரை இவர் மலேசியாவின் பிரதம மந்திரியாகப் பதிவி  வகித்தார். அதற்குப் பின்னரும் தொடர்ந்து அம்னோவில் அங்கத்தினராக  இருந்து வருகின்றார். உலக அரங்கில் பல்வேறு அரசியல் விஷயங்களைத் தயக்கமின்றி பேசி புகழ்பெற்றவர் இவர் என்பது மலேசிய மக்கள் அறிந்த விஷயமே.

கெடாவின் தலைநகரான அலோர் ஸ்டாரில் 1925ம் ஆண்டு  ஜூலை 10ம் தேதி பிறந்தவர் இவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது தந்தையார்  இந்திய மலையாள, மலாய் இனக்கலப்பு; தாயார் மலாய் இனத்துப் பெண். இப்படிப்பட்ட  இனக்கலப்புக்களை மலேசிய சூழலில் அடிக்கடி காணலாம். நல்ல முறையில் ஆங்கிலமும் கற்று பின்னர் சிங்கப்பூரில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவராகப் பணியாற்றியவர் இவர்.



இவரது துணைவியார் சித்தி ஹஸ்மா முகமது அலி அவர்கள் அழகும் அறிவும் நிறைந்தவர். மஹாதீர் படித்த அதே பல்கலைக்கழகத்தில் படித்து  பட்டம் பெற்று மருத்துவராகப் பணிபுரிந்தவர் இவர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. இவரது மூத்த மகள் மரீனா மஹாதீர் சமூக நல எழுத்தாளர்.  மலேசியாவில் பல தன்னார்வல சங்கங்களில் குறிப்பாக எய்ட்ஸ் ஒழிப்பு நிறுவனத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவர்.

துன் டாக்டர் மஹாதீர் முகமது அவர்கள் ஜப்பானிய படைகள் தோல்வி கண்டு அன்றைய மலாயாவிலிருந்து வெளியேறிய சமயம் தொடங்கி அரசியலில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். 1964 முதல் அம்னோ கட்சியில் தீவிர அங்கத்துவம் வகித்து படிப்படியாக வளர்ந்து 1981ம் ஆண்டு நாட்டின் முதலமைச்சர் பதவியைப் பெற்றார். ஐந்து முறை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராகப் பதிவி வகித்தவர் இவர்.

ஒரு வகையில் மலாய் இனத்து மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் இவர் என்று சொன்னால்  அது மிகையாகாது. இது மற்ற இனமக்களுக்குப் பாதிப்பினைத் தரத்தவறவில்லை. சுதந்திர மலேசியாவில் பல்வேறு வேலை வாய்ப்புக்களும் சலுகைகளும் தொடர்ந்து மலாய் இன மக்களுக்கே என்ற  வகையில் அமைந்திருக்கும் நிலை அன்று தொடங்கி இன்று வரை இருப்பது. கல்விக்கூடங்களில் இடமாகட்டும், அரசாங்கப் பணியாகட்டும், சொத்துக்கள் வாங்குவதில் முன்னுரிமையாகட்டும்; அனைத்திலும் மலாய் இனத்து மக்களுக்குச் சலுகைகள் என்பதை சட்ட ரீதியில் வலுவாக்கி தொடர்ந்து இவரது ஆட்சியில் செயல்முறைப்படுத்தப்பட்டு வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.

மஹாதீரின் அதிரடி  நடவடிக்கைகள் என்றால் பொருளாதாரக் கொள்கைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மலேசிய மக்களுக்கு உள்ளூர் தயாரிப்பாக  சொந்தக் கார் உற்பத்தி இடம்பெற வேண்டும் என முடிவெடுத்து ஜப்பானின் மிட்ஷுபிஷி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளூர் தயாரிப்பாக ப்ரோட்டோன் காரை உள்ளூரிலேயே உருவாக்கி உற்பத்தி செய்யும் திட்டம் இவரது ஆட்சி காலத்தில் அறிமுகத்திற்கு வந்தது.  உள்ளூர் கார் தயாரிப்பு ஆரம்பத்தில் புகழ் பெறவில்லையென்றாலும் சில ஆண்டுகளில் மிகப் பிரபலமடைந்தது. இப்போதும் ப்ரோட்டோன் சாகா, வீரா, ஈஸ்வரா என் வெவ்வேறு தயாரிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



இது மட்டுமன்றி free trade zone  எனும் திறந்த மய பொருளாதார வர்த்தக முயற்சிகளை   அறிமுகப்படுத்தி அதன்  வழி சர்வதேச தொழில் நிறுவனங்கள்  மலேசியாவில் நிறுவனங்கள் அமைத்து தொழில் நடத்த அனுமதி வழங்கியதோடு மிக கவர்ச்சிகரமான வருமானவரி  சலுகைகளையும் இந்த நிறுவனங்களுக்கு வழங்கி ஊக்குவித்ததும்  இவரது முயற்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று  எனலாம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பை பெற்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கிராமப்புறத்து ஆண்களும் பெண்களும் சர்வதேச தொழிற்சாலைகளில் பல்வேறு வகை தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பும் இதனால் அமைந்தது.

அதோடு மலேசியாவில் சாலை போக்குவரத்து , நெடுஞ்சாலை என அடிப்படை தேவைகளை இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தியவர் இவர். மலேசிய இந்தியர் காங்கிரசின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த டத்தோ சாமிவேலு அவர்கள்  மஹாதீர் ஆட்சிகாலத்தில் பல ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அ[ப்போது இவர்கள்  இருவர் திட்டத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் தாம் இப்போது பயன்பாட்டில் இருப்பவை. உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் இவை. கொரிய தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி  நெடுஞ்சாலைகள் மலேசியா முழுமைக்கும் அமைக்கப்பட்டன. இது மிகப் பாராட்டப்பட வேண்டிய  ஒரு செயல் என்பதில் ஐயமில்லை.



மஹாதீரின் அரசியல் ஆளுமையை எளிதாக விவரித்து விட முடியாது. அவர் ஒரு கைதேர்ந்த அரசியல் தலைவர். சில  உடல் நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட தொடர்ந்து இவர் அரசியல் ஆலோசகராக அம்னோவில் இன்றும்  செயல்பட்டு வருகின்றார்.

மஹாதீர் கெடா மானிலத்திற்கு மட்டுமல்லாமல்  மலேசியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒருவர் இவர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

தொடரும்...

சுபா