Tuesday, November 4, 2014

20ம் நூ. ஆரம்பகால நிலையில் மலேசியத் தமிழர்களின் தமிழ் மொழி பண்பாட்டு முயற்சிகள் - 1

ரப்பர் தோட்டத் தொழிளார்
மலேசியாவிற்கான தென்னிந்தியர்களின் அதிலும் குறிப்பாகத் தமிழக நிலப்பரப்பிலிருந்து கடல் கடந்து சென்ற தமிழர்களின் பயணம் என்பது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த வரலாற்று உண்மை. அதில் தற்கால மலேசிய இந்தியர்களாக இருப்போரில் பலர்  19ம் நூ. இறுதியிலும், 20ம் நூ ஆரம்ப காலகட்டங்களிலும் குடி பெயர்ந்தவர்கள். 1920-1940 வரை கடல் வழியாக சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாகவும் தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து சென்றோர் தஞ்சமடைந்த கேரித்தீவு விழியப் பதிவுகளையும் விளக்கப்பதிவுகளையும் முன்னர் வெளியிட்டிருந்தேன்.

இன்று தற்செயலாக ஒரு பதிவு ஃபேஸ்புக் பக்கத்தில் கிடைத்தது. காண்க!  https://www.facebook.com/video.php?v=778633225509197&set=vb.100000875796950&type=2&theater 

உடல் உழைப்பு பணிகளுக்காக, குறிப்பாக, இரயில் பாதை அமைக்கவும், செம்பனை, இரப்பர் தோட்டங்களில் பணியாற்றவும் பலர் மலாயா வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தோட்டப்பகுதி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு பொருளீட்டுதல் என்பதே முதல் நோக்கமாக இருந்தாலும் வந்து சேர்ந்த புதிய இடத்தில் தமது மொழியையும் பண்பாட்டையும் மறந்தோராக இல்லாமல், தமிழ் மொழி, கலை சமய பண்பாட்டு விஷயங்களை மறக்காது தொடர்ந்து பேணி வரும் நிலையை இக்குமுகத்தினர் உறுதியாக கையாண்டனர். 

மலாயா நாடகக் குழு

அப்படி நடைபெற்ற முயற்சிகள் அறிந்து கொள்ள படவேண்டியவையே. கால ஓட்டத்தில் அக்காலத்து நிகழ்ந்த முயற்சிகள் பல உள்ளூர் மக்களினாலேயே மறக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது எனபதை நன்கு காண்கின்றோம். இதனை மீள்பார்வை செய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

அத்தகைய முயற்சிகளில்  திரு.கோ சாரங்கபாணி அவர்களது பெயர் மலேசிய பத்திரிக்கை உலகம் என்று மட்டுமல்லாது, தமிழ்க் கலை நாடக உலகில் சிறப்பிடம் பெறுவது. இவர் 1950ம் ஆண்டில் தமிழர் திருநாள் என்ற முயற்சியை  அன்றைய மலாயாவில் தொடக்கினார். இவர் சிங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் முரசு பத்திரிக்கையை 1935ம் ஆண்டில் தொடக்கியவர். இச்செய்திகளையும் இந்த சிறிய வீடியோ பதிவு சொல்கின்றது.  

சுதந்திரத்திற்கு முந்திய மலாயா தொடர்பான இத்தகைய விஷயங்களை இந்த இழையில் பதிவோம்.

நேரம் கிடைக்கும் போது மேலும் தொடர்கின்றேன்.

சுபா.

Friday, January 10, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 20

லிட்டல் இந்தியா



படத்தில் நாம் காண்பது குவாலம்பூரின் ப்ரீக்ஃபீல்ட்ஸ் சாலையில் அமைந்திருக்கும் லிட்டல் இந்தியா வர்த்தகப் பகுதி.  விரிவாக்கப்பட்ட சாலைகளின் மேல் கோலம் தீட்டப்பட்டும் சாலையின் ஓரங்களில் கோயில் மதில் சுவர் போன்ற அமைப்பினை அமைத்தும் இங்கு அழகு படுத்தியிருக்கின்றனர். இங்கே அமைந்திருக்கும் கடைகளுக்குச் சென்றால் ஒன்றும் வாங்காமல் வர முடியாது. தமிழர்கள் பயன்படுத்தும் எல்லா விதமான பொருட்களும் கிடைப்பதோடு நல்ல உணவகங்கள் பல அமைந்த பகுதி இது.

சுபா

Thursday, January 9, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 19

மலேசியக் குரங்குகள்



ஆசிய நாடுகள் பலவற்றிலும் குரங்குகள் காடுகளில் திரிவதை பலரும் பார்த்திருக்கின்றோம். மலேசிய குரங்குகளுக்கு என்ன தனிச் சிறப்பு என்று கேட்க வேண்டாம். மலேசியாவில் இந்தப் புகைப்படம் எடுத்ததால் இது மலேசியக் குரங்கு. அவ்வளவே. :-)

இது பத்து மலை கோயில் கீழ் பகுதியில் பதிவு செய்யப்பட்ட படம். தூங்கும் தன் குட்டியை ஒரு கையால் அரவணைத்துக் கொண்டு எதையோ பார்க்கும் பார்வை அழகு. குரங்குக் குட்டியின் தலை மயிர் சிறு மனித குழந்தையின் தலைமயிரை ஒத்ததாகவே எனக்குத் தெரிகின்றது. தாயின் அனைப்பில் கவலையின்றி தூங்கும் குட்டி தன் தூக்கத்திலும் கூட தன் தாயை இறுக்கி கட்டிக் கொண்டேதான் இருக்கும்.

மலைப்பகுதிகளில் அமைந்திருக்கும் கோயில்களில் காணப்படும் குரங்குகளுக்கு பக்தர்கள் நிச்சயம் தனக்கு ஏதாவது உணவுகளைக் கொடுப்பார்கள் என்று நன்கு தெரியும். வாழைப்பழம் தேங்காய், பாக்கு  உலர்ந்த திராட்சை பழங்களை தேடிக் கொண்டு கோயிலில் பூஜை செய்து விட்டு வரும் பக்தர்களின் வருகைக்காக இவை கூட்டமாக காத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் நம் கைகளில் பழங்கள் தென்பட்டால் வந்து பிடிங்கிச் செல்லவும் இவை தயங்காது.

சுபா

Monday, January 6, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 18

மலாக்கா நகர ரிக்‌ஷா வண்டி



மலேசியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் மலாக்கா முதல் இடம் பெறுவது. இங்கு போர்த்துக்கீஸியர்கள் காலத்து கட்டிடங்களும் மலாக்கா ஆறும் அதனை ஒட்டி அமைந்த வரிசையான கட்டிடங்களும் சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்ப்பன.  சுற்றுப்பயணிகள் அமர்ந்து நகரை வலம் வர உதவும் வகையில் நகரின் மையப் பகுதியில் ரிக்‌ஷாக்கள் இயங்குகின்றன. இந்த ரிக்‌ஷா வண்டிகளை அலங்கரித்திருக்கும் விதம் நம் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. ப்ளாஸ்டிக் மலர்களையும் அலங்காரப் பொருட்களையும் கொண்டு ரிக்‌ஷா வண்டிக் காரர்கள் தங்கல் வண்டிகளை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்திருப்பர். இங்கு நாம் இப்படத்தில் காண்பதும் அத்தகைய ஒரு ரிக்‌ஷா வண்டி தான்.

சுபா

Sunday, January 5, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 17



மலாய் காலை உணவு பலகாரங்கள்

படத்தில் நாம் காண்பது மலேசிய நாட்டில் காலை உணவில் இடம் பெறும் பலகாரங்களில் சில வகை.
Kuih Muih என்பது மலாய் மொழியில் பலகாரங்களைக் குறிப்பிடச் சொல்லப்படும் சொல். மலேசிய காலைப் பலகாரங்கள் கண்களைக் கவரும் வர்ணங்களினாலானவை என்பது மட்டுமல்லாமல் சுவையில் அபாரமானவை. கரிப்பாப், குவே லாப்பீஸ், பேங்காங், நாசி லெமாக், புரு மயோங், என ஒரு நீள பட்டியலே இடலாம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சுவை கொண்டவை.

பெரும்பாலும் மலேசிய பலகாரங்களான இவை காலை உணவிலும் மாலை நேர தேனீர் மேசையிலும் இடம்பெறுபவை. பெறும்பாலானவை கோதுமை மாவு, மரவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரை, தேங்காய், அரிசி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

சுபா