Monday, October 22, 2018

பினாங்கு - மண்ணின் மணம்

டுரியான் வாசனை, செண்டோல் குளிர்பானம், அலங்கரித்த ரிக்‌ஷா வண்டி, பினாங்குக்குக் குஜராத்திலிருந்து வந்த சௌராஸ்டிர வணிக மக்களின் தடயங்களை நினைவு கூறும் சௌராஸ்டிரா மார்க்கெட் கடைகள், பினாங்கு சார் கொய் தியாவ் ...
இந்த நினைவுகளோடு பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்படுகின்றேன். அடுத்த சில தினங்கள் சென்னையில்..









Sunday, October 21, 2018

உரை

பினாங்கு இந்து அறப்பணித்துறையின் ஏற்பாட்டில் நேற்று கொம்தார் ஆடிட்டோரியம் C அரங்கில் நடைபெற்ற எனது உரையின் சில காட்சிகள்.








பத்திரிக்கையில் செய்தி

நேற்றைய மலேசிய பத்திரிக்கையில் செய்தி..


என் பள்ளிக்கூடம்

பினாங்கில் நான் படித்த ஆரம்பப்பள்ளி வளாகத்திற்கு இன்று காலை சென்றிருந்தேன். கான்வ்வெண்ட் தமிழ்ப்பள்ளி - எனது தொடக்ககால கல்வி இங்கு அமைந்தது. கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சொந்தமான வளாகத்தில் அரசு உதவிபெற்ற ஒரு பள்ளியாக இது இயங்கி வந்தது. அன்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக திருமதி அன்னமேரி லூயிஸ் அவர்கள் இருந்தார்கள். எனது ஆசிரியராக திருமதி. வேலு நினைவில் இருக்கின்றார்.
பள்ளிக்கூடத்திற்கு பஸ் செக்கோலா அதாவது பள்ளிப்பேருந்து ஏறி வருவோம். வாகன ஓட்டி ஒரு தமிழர். சில நாட்களில் அவரும், சில நாட்களில் அவரது மனைவியும் இப்பேருந்தை ஓட்டுவர். பல நேரங்களில் முன் இருக்கையில் அமர்ந்து கொள்வேன்.
அவர்கள் வாகனத்தில் கேசட் ப்ளேயர் இருக்கும். தினமும் செந்தமிழ் தேமொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் என்ற பாடலும் காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி என்ற பாடலும் தவறாமல் ஒலிக்கும். அந்தக் காலத்தில் இந்தப்பாடல்கள் மனப்பாடமாகியிருந்தன எனக்கு.
பள்ளிக்கூடத்தின் வாசலில் ஒரு சிறியக் பெட்டிக்கடை இருக்கும். அதில் தான் சாக்லெட், பலகாரங்கள் என வாங்கி சாப்பிடுவோம். அந்தப் பெட்டிக்கடை இன்றும் இருக்கின்றது. பள்ளிப்பேருந்துக்காக மதியம் வெளியே காத்திருப்போம். சாலையில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் நடந்து செல்வார்கள். அவர்களைப் பார்த்து கையசைப்பது எங்கள் வாடிக்கையாக இருந்தது. இன்று ஐரோப்பாவில் வாழ்வதை நினைத்ததில் மனதில் சிரிப்பு தோன்றி முகத்திலும் வெளிபட்டது.
வாரத்தில் ஒருநாள் தேவாலயத்திற்கு அனைவரும் செல்வோம். வரிசையாக நின்று புனித அப்பம் பெற்றுக் கொண்டு பின்னர் பள்ளிக்கு வருவோம்.
பள்ளிக்கூடத்தில் 3ம் ஆண்டில் இருக்கும் போது தோட்டம் போடும் பயிற்சி கிடைத்தது. பருத்தி செடி போட்டிருந்தோம். பருத்தி பஞ்சை எடுத்துப் பிரித்து சேகரித்து பருத்தி பற்றி அறிந்து கொண்டது பசுமையாக நினைவில் இருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் படித்ததை விட விளையாடிய பொழுதுகள் தான் நினைவில் அதிகம் பதிந்திருக்கின்றன. என்னுடன் விளையாடிய சரஸ்வதி, இன்பம், நாசீர், வீரபத்திரன், மீனாட்சி, சீதா, செல்லம்மாள் ஆகியோர் குழந்தைப்பருவ முகங்கள் மட்டும் மனதில் நிலைத்திருக்கின்றன.

பள்ளிக்கூடம் இருந்த பகுதியில் இன்று பள்ளிக்கூடம் இல்லை. ஏழை எளியோருக்கான இலவச உணவகம் ஒன்றினை தேவாலய அமைப்பு இங்கு செயல்படுத்தி வருகின்றது. ஒரு அனாதைக்குழந்தைகள் இல்லமும் இன்று இங்கு செயல்பட்டு வருகின்றது. தேவாலயம் பூட்டி இருந்தது.

பாதிரியார் வீட்டின் முன்னே வாசலில் பத்திரிகைகள் வாசித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நான் அருகில் வரும் போது விபரம் கேட்டார். என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பலகாரங்களும் தேனீரும் வழங்கினார். அவர் ஒரு தமிழர். தமிழிலேயே பேசினார்.

நான் எந்த மதத்தைச் சார்ந்தவர் எனக் கேட்டார். நான் மதங்களை பின்பற்றுவதில்லை. ஆனால் பிறரது மத நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதுமில்லை எனச் சொன்னேன். ”அப்படியே இரு. இந்த சிந்தனை உள்ளவர்களுக்கு மதம் தேவையே இல்லை” எனச் சொல்லி சிரித்தார்.

நனவிடைத்தோய்தலில் மகிழ்ந்திருந்து என் பள்ளி நினைவுகளைச் சுமந்தபடி வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.







-சுபா

பேரா.முனைவர் ராமசாமி

பினாங்கு மாநில துணை முதல்வர் பேரா.முனைவர் ராமசாமி அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய நீண்ட கால ஆய்வில் ஈடுபட்டவர். இவரது மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும் என்ற நூலை நேற்று எனக்குப் பரிசளித்தார்.
மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்வியல் துன்பங்களை ஆழமாகப் பதிவு செய்திருக்கும் நூல் இது.
இவரது ஆய்வில் பிரசித்தி பெற்றது செலாஞ்சார் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக இருந்து வந்தமையை கண்டுபிடித்து அதனை வெளிச்சப்படுத்தியது. இதுவே இவரது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் அமைத்தது. கொத்தடிமைகளாக ஒரு தோட்டத்தில் மக்கள் வாழ்ந்து வந்த கொடுமையை 1980களில் வெளிப்படுத்தி அம்மக்களை மீட்கும் முயற்சியை இவர் தொடக்கியது அன்று மாணவப் பருவத்தில் இருந்த எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது.
படித்த, சமூக நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கொண்டிருப்பதால் பினாங்கு மாநிலம் இன்று ஆக்கப்பூர்வமான வளர்ச்சி கண்டு வருகிறது!


-சுபா

உரை நிகழ்வு - அழைப்பிதழ்

இன்று மதியம் பினாங்கு கொம்தார் மண்டபத்தில் எனது உரை நிகழ்வு நடைபெறுகிறது.


Friday, October 19, 2018

விஜயதசமி திருவிழாவில்

பினாங்கு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இன்று விஜயதசமி திருவிழாவில் கலந்து கொண்டேன்.




பினாங்கு பாலம்

பினாங்கிலிருந்து தீபகற்ப மலேசியாவை இணைக்கும் பாலங்களில் ஒன்றில்..







பேராக் அருங்காட்சியகம்

பேராக் மாநிலத்தின் பேராக் அருங்காட்சியகம் மலேசியாவின் முதல் அருங்காட்சியகம் என அறியப்படுவது. இன்று காலை இந்த அருங்காட்சியகத்தின் பழங்குடி இன மக்கள் தொடர்பான தகவல்களைக் காண முடிந்தது.









Thursday, October 18, 2018

பினாங்கில் உறவுகளுடன்..

பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 5

மலேசியத் தமிழர் வரலாற்று ஆவணப்படுத்தல் தொடர்பான சீரிய கலந்துரையாடலுக்குப் பிறகு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடனும் பினாங்கு இந்து அறநிலையத்துறை செயலவையினருடனும் மதிய உணவு விருந்து.











பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 4

பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடன் இன்று காலை ஒரு சந்திப்பு. இந்து அறநிலையத்துறையினர் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.



பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 3

நான் பிறந்து, கல்வி கற்று, வளர்ந்த பினாங்கு மாநிலம். George town என்பது இதன் தலைநகர். துறைமுகப்பகுதி. இன்றைய காலை காட்சி.





பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 2


பினாங்கில் தமிழர்கள் ஒரு புறம் நவராத்திரி கொண்டாடிக் கொண்டிருக்க, சீனர்களும் தங்கள் பாணியில் நவராத்திரியை 9 நாள் பண்டிகையாக இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மூலைக்கு மூலை சீன சாமி கோயில்களில் பூக்கள்,ஊதுபத்தி புகை என விழாக்கோலமாக பினாங்கு காட்சியளிக்கிறது.

இரவு 10:30 வாக்கில் நான் விமான நிலயத்திலிருந்து ஜியோர்ஜ்டவுன் பகுதிக்கு வந்தபோது சீனர்களின் தேர் பவனி சென்று கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் சீனர்களின் இந்த பெண் தெய்வத்திற்கான நவராத்திரி விழா பினாங்கில் விமரிசையாக வளர்ந்திருப்பதைக் காண்கிறேன்.
-சுபா