Friday, December 13, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 16



கேமரன் ஹைலேண்ட்ஸ் ஆதிவாசிகள்

மலேசிய பழங்குடி மக்கள் பல வகையைச் சேர்ந்தவர்கள். பட்டியலிட்டால் அது நீளும். கிழக்கு மலேசியாவின் பழங்குடி மக்களை விட மேற்கு மலேசிய பழங்குடி மக்கள் வேறுபாடுடையவர்கள். ஒருவகையில் பல வகையான கலப்புகள் இந்த மேற்கு மலேசிய பழங்குடி மக்களிடையே நிகழ்ந்திருக்கின்றது. மேற்கு மலேசியாவில் துரித வளர்ச்சியும் நன்கு ஏற்பட்டு விட்டதால் காடுகளில் குடியிருந்த பழங்குடியினர் நகரங்களுக்கு மாற்றலாகி தங்கள் வாழ்க்கை நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் இன்றும் கூட பழங்குடியினர் காடுகளில் வாழ்வதும் தங்கள் பண்டைய வாழ்வியல் நடைமுறைகளை தொடர்ந்து பேணுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இங்கே நாம் படத்தில் காண்பது கேமரன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர். இப்பகுதியில் பாத்தேக், சாக்கை, பங்கான் இன பழங்குடியினர் இருக்கின்றனர்.  அரசாங்கம் இம்மக்களைக் காட்டிலிருந்து வெளிப்பகுதிக்கு வந்து புதிய வாழ்க்கை அமைத்துகொண்டு வாழும் வகையில் சில பொருளாதாரா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மக்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்காக பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக இவர்கள் சாலையோரத்துக் கடைகள் சிலவற்றை அமைத்துக் கொண்டு காடுகளிலிருந்து கொண்டு வரும் மூங்கில், இறைச்சி, தேன், பழங்கள், வேர்கள் ஆகியவற்றை  சாலையில் நாம் பயணித்துச் செல்லும் போது காண முடியும்.

இந்த பழங்குடி இனமக்களைப் பற்றி விபரங்கள் மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இப்பக்கத்தை வாசிக்கலாம்.

சுபா

Wednesday, December 11, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 14



கேமரன் ஹைலாண்ட்ஸ் தேயிலைத் தோட்டம்

கிளந்தான் மானிலத்தின் எல்லைப் பகுதியாகவும்  பஹாங் மானிலத்தின் வடக்கு முனையில் இருக்கும் ஒரு மலைப்பகுதி இது. ஒரு பகுதி  பேராக் மானிலத்திலும் உள்ளது.

ஆச்சரியப்படுவீர்கள். இப்பகுதியின் அளவு சிங்கப்பூரின் சுற்றளவை ஒத்தது.

காரிலோ அல்லது பஸ்ஸிலோ இப்பகுதிக்கு பயணித்து செல்லலாம். சாலைப்பகுதி மிகத் தரமாக அமைக்கபப்ட்டிருப்பதால் கார் ஓட்டிச் செல்ல எந்த அச்சமும் தேவையில்லை.

இங்கே நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன. டிசம்பர் மாதத்தை தவிர்த்தால் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாது கேமரன் ஹைலாண்ட்ஸ் பகுதியை முழுமையாக சுற்றிப்பார்த்து நல்ல சுவையான உணவு உண்டு மகிழ்ந்து வரலாம்.

ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது Sir William Cameron என்ற நில அளவையாளர் இப்பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்தார். அவர் நினைவாக இந்த இடத்திற்கு Cameron Highlands  எனப் பெயர் வந்தது.
இங்கு மலைப்பகுதியில் 15 டிகிரி செல்ஸியஸ் வரை சாதாரண நாட்களில் அமைந்திருக்கும்.

1925ம் ஆண்டு வாக்கில் இங்கு பசுமை உற்பத்தி என்ற வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பித்த போது தேயிலை, பூக்கள், காய்கறி தோட்டங்கள் விரிவாக வளர்ச்சி பெற ஆரம்பித்தன. தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து வந்து சேர்ந்த பல தமிழர்கள் இப்பகுதியில் வேலைக்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சந்ததியினர் பலர் இன்னமும் இங்கேயே வாழ்கின்றனர். மற்ற இடங்களைக் காட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் சற்றே அதிகம். நான் பார்த்ததில் இரண்டு தமிழ் ஆரம்பப் பள்ளிகளும் இங்கிருக்கின்றன. ஆலயங்களோ ஏராளம். மலேசியாவில் எனது மனம் கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.

Sunday, December 8, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 13



மலாக்கா ஆற்றில் போட் பயணம்

மலேசிய நாட்டின் வரலாற்று பெருமை மிக்க ஒரு மானிலம் மலாக்கா. இந்திய சீன இந்தோனீசிய வர்த்தகர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக வருகை புரிந்த ஒரு துறைமுக நகரம் இது. 15ம் நூற்றாண்டு இறுதி தொடங்கி போர்த்துக்கீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வருகை புரிந்து  இன்று சுற்றுப்ப்யணிகளைக் கவரும் ஒரு தலம் என்ற வகையில் புகழ் பெற்று விளங்கும் ஒரு நகரம். இங்குள்ள ஆபாமோசா கோட்டை போர்த்துக்கீஸியர்களால் கட்டப்பட்டது.

இங்கு நாம் காண்பது போட் பயணத்தின் போது மலாக்கா ஆற்றின் இரண்டு கறைகளிலும் இருக்கும் கட்டிடங்கள். இவை இத்தாலியின் வெனிஸை சற்றே ஞாபகப்படுத்தும் ஒரு வடிவம் தான். யுனெஸ்கோ இப்பகுதியை பாதுகக்கப்படும் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர் இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் மலாய் நாட்டுப் பாரம்பரியத்தை விளக்கும் சித்திரங்கள் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. 2001ல் பார்த்த  போது இவை இந்த அழகோடு இல்லை.  கண்களைக் கவரும் வர்ணங்களில் சித்திரங்கள் கதை சொல்கின்றன.

சுபா

Monday, December 2, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 12



டுரியான் வாங்க வாருங்கள்..!

மலேசிய தேசியப் பழம். 

முட்கள் நிறைந்திருந்தால் என்ன? சுவையை நினைத்துப் பார்க்கும் போது பழத்தின் அருமை புரியும். மலேசிய பழக்காலம் தொடங்குவது ஜூலை மாதத்தில் தான். செப்டம்பர் வரை கடைகளில் தென்படும் டுரியான், மங்குஸ்தீன், ரம்புத்தான் பழங்கள் மீண்டும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் முன்பெல்லாம் ஓரளவு ஆங்காங்கே கிடைக்கும். ஆனால் அதிசயமாக இம்முறை அக்டோபர் நவம்பர் மாதத்தில் செல்லும் இடங்களிலெல்லாம் டுரியான் பழங்கள் விற்பனை அபாரமாக இருந்தது.

டுரியான் பழத்தின் முட்கள் எப்படி பயத்தை உண்டாக்குகின்றனவோ அது போலவே இப்பழத்தின் நாற்றமும் புதியவர்களை நெருங்க விடாது. வாசனைப் பழகிப்போனவர்களுக்கு இது ஒரு தேவ லோகத்து விருந்து தான் :-)

சுபா