Tuesday, November 4, 2025

மலாயா ஆவணங்கள் – 23 : முன்னேற்றம் பத்திரிக்கையில் பெரியார்

 




முனைவர் க.சுபாஷிணி

24-1-1929 முன்னேற்றம் வாரப்பத்திரிக்கை அதன் முகப்பில் பெரியார் அவர்களது புகைப்படத்துன் வெளிவந்துள்ளது. அதில் பெரியார் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர் அருகில் ஒரு தூணில் Equality – Fraternity – and Liberty என எழுதப்பட்டுள்ளது. 

இப்பத்திரிக்கை இப்படத்திற்குக் கீழே, கீழ்க்காணும் செய்யுளை பதிப்பித்திருக்கிறது.

”அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி யெவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதா பேதம் வஞ்சம் பொய் களவு சூது. 

சினத்தையும் தவிர்ப்பாயாதில் செய்தவம் வேறொன்றுண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும்தானே.”

”வைக்கம் வீரர்” என்ற தலைப்பில் லெக்ஷ்மி என்ற பெயரில் ஒருவரது கட்டுரை அந்த இதழில் உள்ளது. இது ஈவேரா அவர்களது அக்கால சமூக செயல்பாடுகளையும் அவர் சமூகத்தை நோக்கி முன்வைக்கின்ற கேள்விகளையும் விளக்கும் வகையில் அமைந்த கட்டுரை. அதில் வருகின்ற கீழ்க்காணும் பகுதியைக் காண்போம்.


"கடவுள் தேவையா?'' என்கிறார் திரு நாயக்கர். அதைப்பார்த்துப் பலர் மலைப்படைகிறார்கள். ஆனால் இந்தக் கேள்வியை திரு. நாயக்கர் மட்டுமா புதிதாகக் கேட்கிறார். இதற்கு முன்னும் பலர் கேட்டிருக்கிறார்கள். இப்பொழுதும் பலர் கேட்கிறார்கள். மேலும் பலர் கேட்க்கத்தான் செய்வார்கள்.

விவேகம், மனிதன் மனதில் குடி கொண்டி ருக்கும் வரை இந்தக் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். கேட்கப்படத்தான் வேண்டும். விவேகம் சூனியம் ஆகும்போது அக்கேள்வியும் தானே மறைந்துவிடும். விவேக சூனியமான பாழுலகத்தைவிட, அத்தகைய கேள்விகள் கேட்கப்படும் அறிவுலகம் அன்றோ சிறந்தது! கடவுள் ஒருவர் உண்டானால், அவருக்கு நாயக்கர் கேள்வியால் ஒரு ஆபத்தும் உண்டாகாது. கடவுள் இல்லையானால் திரு நாயக்கர் ஆயிரம் முறை அக்கேள்வியைத் திருப்பித்திருப்பிக் கேட்கட்டும். எனவே கடவுள் தேவையா என்று கேட்டதற்காக, திரு. நாயக்கர் மேல் ஒருவரும் சீறி விழவேண்டாம். அவரைக் கழுவேற்றித்தான் ஆகவேண்டும் என்று ஒருவரும் சபதம் செய்ய வேண்டாம். ஒரு காரிய மட்டும் உறுதி. திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரவர்கள் கூறியதுபோல், சமூதாய சீர்திருத்தக்காரர்களால் 25 வருஷ காலமாக உண்டு பண்ணமுடியாத ஒரு உணர்ச்சியை, திரு. நாயக்கர் மூன்றே வருஷ உழைப்பினால் உண்டுபண்ணி விட்டார். திரு. நாயக்கர் போதனைக்கு செவி சாய்க்காத கிராமம் தென்னாட்டில் மிகச் சொற்பம்._  

..

நாத்திகப் பிரசாரத்தால் ஹிந்து மதத்தை நாயக்கர் அழிக்கிறார் என்று முறையிடுகிறவர்கள், அழிவு வேலையை திரு. நாயக்கருக்கு விட்டுச் கொடுத்து விட்டு ஆக்க வேலையைத் தாங்களே செய்து கொள்ளட்டும். உண்மையில் ஆக்க வேலைக்கும் அழிவு வேலைக்கும் இந்தியாவில் இடமிருக்கத்தான் செய்கிறது. (லெக்ஷ்மி)”


ஈ.வே.ரா அவர்களது ஆக்கப்பூர்வமான சமூகச் செயல்பாடுகளை ஆதரிக்கும் இக்கட்டுரை அவரது முயற்சிகள் நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் 1929லேயே எதிரொலிக்கத் தொடங்கியதைப் பதிகிறது.   சமூகத்தில் புரையோடிக்கிடந்த புராணக் கதைகளின் அடிப்படையிலான கற்பனைகளையும் சமூகத்தில் நிலவிய அநீதிக்கு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியதையும் இக்கட்டுரை வெளிப்படுத்துவக் காண்கின்றோம்.

இக்கட்டுரையில் பெரியார் அவர்கள் ஸ்ரீ நாயக்கர் என்றும் திரு, நாயக்கர் எனும் அழைக்கப்படுவது, சாதி அடையாளத்திற்கு எதிரான சமூக மறுமலர்ச்சியின் தொடக்க காலகட்டம் என்பதையும்,  பெரியார் அவர்களும் அக்காலத்து சமூகப் போராளிகளும் இதற்கு அடுத்தடுத்த காலகட்டங்களில் சாதிப்பெயர்களை நீக்க முயற்சிகளை மேற்கொண்டனர் என்றும் அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று சாதிப்பெயரொட்டு தமிழ்நாட்டில் பெருமளவில் மறைந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! 


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(உலகத் தமிழ் இதழ் 309ல் இன்று வெளிவந்த கட்டுரை.)

No comments:

Post a Comment