Wednesday, March 26, 2025

மலாயா ஆவணங்கள் – 2: பினாங்கு ஞானாசிரியன்

 




முனைவர் க.சுபாஷிணி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவில் தமிழ் பத்திரிகைகள் வெளியிடப்பட்ட முயற்சி தமிழ் பற்றாளர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில் வெளிவந்த பத்திரிகைகளுள் ”பினாங்கு ஞானாசிரியன்” என்ற தினசரி பத்திரிக்கையும் ஒன்று.

இந்தப் பத்திரிக்கைக்கு சந்தாதாரர்களை சேகரிக்கும் திட்டத்தையும் ஆசிரியர் குழு செயல்படுத்திருந்தார்கள். மலாயாவிற்குள் இந்த பத்திரிகையை வாங்குபவர்கள் ஒரு மாதத்திற்கு மொத்தம் 75 காசு மாத சந்தாவாக கொடுக்க வேண்டும். வெளியூர் அதாவது, பர்மா சிங்கை, இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இருந்து வாங்குவோருக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரிங்கிட் மாத சந்தா; தனி பத்திரிக்கையாக வாங்குவோருக்கு ஒரு பத்திரிக்கையின் விலை ஐந்து காசு என்றும் நிர்ணயம் செய்திருந்தார்கள்.

அது மட்டுமல்ல இந்தப் பத்திரிகைகளுக்கு 10 சந்தாதாரர்களை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்கு ஒரு பத்திரிக்கை இலவசமாக அனுப்பப்படும் என்ற சலுகைகளையும் அறிமுகப்படுத்தி இருந்தார்கள். இந்த வணிக உத்தி இப்பத்திரிகை தொடர்ந்து வெளிவருவதற்கு அப்போது உதவி இருக்கின்றது.

இந்த தினசரி பத்திரிகையில் மொத்தம் நான்கு பக்கங்கள் மட்டுமே அடங்கியுள்ளன. முதல் பக்கத்தில் இப்பத்திரிக்கை பற்றிய அல்லது இப்பத்திரிகை தொடர்பான அறிவிப்புகள், இதன் நிறுவனர்கள், இப்பத்திரிகை அச்சடிக்கப்படும் அச்சகம் பற்றிய செய்திகள் ஆகியவை முழு பக்கத்தை நிறைக்கின்றன. நடுவில் உள்ள இரண்டாம் பக்கமும் மூன்றாம் பக்கமும் உள்ளூர் செய்திகள், அயல்நாட்டு செய்திகள் பலவற்றை தாங்கி வெளிவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1912 ஆம் ஆண்டு கால கட்டத்தில் முதலாம் உலகப் போர் தொடர்பான துருக்கி இத்தாலி இரண்டு நாடுகளுக்குமிடையிலான போர் தொடர்பான செய்திகள் ஒரு பக்கத்தில் மிகப்பெரிய அளவை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அக்காலகட்டத்தில் ஆசியாவில் தமிழர்களிடையே முதலாம் உலகப் போர் தொடர்பான தகவல்கள் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்ற செய்தியாக அமைந்திருந்தது என்பதை வெளிக்காட்டும் வகையில் இது அமைகிறது. இப்பத்திரிக்கையின் இறுதி பக்கத்தில் விளம்பரங்கள் இடம் பிடிக்கின்றன. அக்காலச் சூழலில் கடல் பயணம், மருந்து வகைகள், உணவு விற்பனை, அறிவிப்புச் செய்திகள் போன்றவை இறுதிப் பக்கத்தை நிறைக்கின்றன. இந்த வகையில் முதல் பக்கத்தில் இருந்து நான்காம் பக்கம் வரை செய்திகள் இப்பத்திரிக்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1912 ஆம் ஆண்டு வாக்கில் இப்பத்திரிக்கையின் மேலாளராக கே கே சம்சுகனி ராவுத்தர் பெயர் குறிப்பிடப்படுகின்றது. விளம்பரங்கள் இப்பத்திரிக்கையில் வர வேண்டும் என நினைப்பவர்கள் மேலாளரை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தா தொகை மற்றும் விளம்பரத்திற்குக் கொடுக்க வேண்டிய தொகை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்; முன்பணம் அனுப்பினால் மட்டுமே பத்திரிக்கையும் விளம்பரமும் இணைக்கப்படும் என்ற செய்தியும் இதில் குறிப்பிடப்படுகின்றது.

இப்பத்திரிக்கையின் புரவலர்களாக பலரது பெயர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.

பச்சி ஹாஜிமுகமது நூர், கோ கா கம்பெனி இப்ராஹிம் மரைக்காயர், கோ இ கம்பெனி மஞ்சூர் ஷா மரைக்காயர், கோ.இ.கம்பெனி,    மஞ்சூர்ஷா மரைக்காயர், உ.மவுலாசா மரைக்காயர்,  கி.வாஞ்ஞூர்பக்கீர் மரைக்காயர்,  வ.மு.நைனா மரைக்காயர் கம்பெனி, சே. சீனிமதாறு ராவுத்தர், க. மு. செய்யது அபூபக்கர், கா. அ. காண்முகம்மது கம்பெனி, முகமது அலி அம்பலம், மொ. கா. காதிறுபாவா, காசிக்கடை நெய்னா முகம்மது, எம் கதிர்வேலு, மா. நா. கணக்கு சுப்பிரமணிய பிள்ளை, எல். சுப்பையா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றார்கள். பெரும்பாலும் இஸ்லாமியர்களால் வெளியிடப்பட்ட, ஏனைய சமூகத்தோரின் ஆதரவைப் பெற்ற ஒரு பத்திரிக்கையாக இது வெளிவந்தது.

தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்கு வணிகம் செய்யப் புலம்பெயர்ந்த மரைக்காயர்கள் தொடர்ச்சியாக தமிழ் இதழியல், நாளிதழ், இலக்கிய முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அம்முயற்சியின் தொடர்ச்சியை இன்றும் நாம் காண்கின்றோம்.

மலாயா 1957 ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. இக்கால கட்டத்திலும் சில பத்திரிகை முயற்சிகள் தொடர்ந்தன. அதன் பின்னர் தமிழ் முரசு, தமிழ் மலர், தமிழ் நேசன், மலேசிய நண்பன் போன்ற பத்திரிகைகளை மலேசிய மண்ணில் வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளாக நாம் கூறலாம்.

தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து எண்ணிக்கையில் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் மலேசிய நாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இங்கு இன்றும் கூட தமிழ் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் மலாயா மண்ணில் அன்றைய தமிழ் ஆர்வலர்கள் வித்திட்ட முயற்சிகள் இன்றும் மலேசிய மண்ணில் தொடர்ந்து தமிழ் மக்களிடையே வாழ்வதற்கு அடிப்படையை வகுத்துக் கொடுத்திருக்கின்றது. அதில் பினாங்கு ஞானாசிரியர் எனும் இப்பத்திரிக்கையின் பங்கு அளப்பரியது.

Wednesday, March 19, 2025

மலாயா ஆவணங்கள் – 1: கப்பல் பயணச் செய்தி




முனைவர் க.சுபாஷிணி

மலாயாவிலிருந்து தமிழ் பத்திரிக்கைகள் வெளியிடப்பட்ட முயற்சி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேகமெடுத்தது. கிபி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலும் பல பத்திரிக்கைகள் வெளிவந்தன.  “பினாங்கு ஞானாசிரியன்” எனும் பெயர்கொண்ட வாராந்திர பத்திரிக்கை அப்படி அக்காலகட்டத்தில் வெளிவந்த ஒரு முக்கிய பத்திரிக்கை எனலாம்.

நான்கு பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கும் பத்திரிக்கை இது. முகப்பில் பத்திரிக்கை, அதன் வெளியீட்டாளர்கள், புரவலர்கள் பற்றிய செய்திகளும், உள்ளே இரு பக்கங்களில் உள்நாட்டு அயல்நாட்டுச் செய்திகளும், கடைசிப்பக்கத்தில் விளம்பரங்களும் கொண்ட வகையில் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டிலிருந்து வணிகம் செய்ய வந்த தமிழ் மக்கள் பெரும்பாலும் பினாங்கு, கிள்ளான், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து கப்பல் பயணம் எடுத்து தமிழ்நாட்டிற்குச் செல்வது அப்போது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி இலங்கை, பர்மா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கும் இக்காலகட்டத்தில் வணிகம் செய்து வந்தனர். ஆகவே கடல் வழியாகக் கப்பல் பயனம் மேற்கொள்வது என்பது அன்று, அதாவது 18, 19, 20ஆம் நூற்றாண்டு மலாயாவில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு முக்கியத் தேவையாகவே இருந்தது.

அவ்வகையில் கப்பல் பயணங்களைப் பற்றிய அறிவிப்புக்களை வெளியிடுவது பத்திரிக்கைகளின் விளம்பரப் பகுதியில் இடம்பெறும் ஓர் அங்கமாக இருந்துள்ளதைக் காண்கின்றோம். 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ”பினாங்கு ஞானாசிரியன்” பத்திரிக்கையில் அவ்வகையில் வெளிவந்த ஒரு அறிவிப்பு நமக்குப் பல தகவல்கல்ளை வழங்குகின்றது.

அக்காலகட்டத்தில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அங்கிருந்து இன்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற ஒரு பகுதியாகத் திகழ்கின்ற கிள்ளான் பகுதியில் அமைந்திருக்கும் கிள்ளான் துறைமுகத்திலிருந்தும் (Port Klang) கப்பல்கள் ஒவ்வொரு வாரமும் இயங்கின. கிள்ளான் துறைமுகம் ஆங்கிலேயர்களின் காலணிய ஆட்சிக்காலத்தில் சுவெட்டெனஹாம் துறைமுகம் (Port Swettenham)  என பெயர் கொண்டிருந்தது. பின்னர் Port Klang என சுதந்திரத்திற்குப் பின்னர் பெயர் மாற்றம் பெற்றது.

பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி எனப் பெயர்கொண்ட ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் இயக்கிய கப்பல்களும் இப்பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு பயணச் சேவையை வழங்கி வந்தன.

வாரம் மூன்று முறை சிங்கப்பூரிலிருந்து  கிள்ளானின் சுவெட்டெனஹாம் துறைமுகம் (பத்திரிக்கையில் போர்ட்ஸ் வெட்னம்) கிள்ளான் துறைமுகத்திற்குப் பயணச் சேவை இருந்தது.   சிங்கப்பூரிலிருந்து வாரம் இருமுறை பெர்குயி, மோல்மின் பகுதிகளுக்குப் பயணம் இருந்தது.  மாதம் இருமுறை சீனா, ஜப்பான், சிங்கப்பூருக்கும் கப்பல் பயணம் செயல்பட்டது.  வாரம் ஒருமுறை ரங்கூன், கல்கத்தா துறைமுகங்களுக்கும் கப்பல் சேவையை இந்த நிறுவனம் வழங்கியது பற்றி இச்செய்தி வழி அறிகின்றோம்.  அதுமட்டுமன்றி நாகப்பட்டணம், மதராஸ், கூடலூர், காரைக்கால் பகுதிகளுக்கும் கப்பல் சேவை இயங்கியது.

அன்று கடல்போக்குவரத்து, வணிகத்திற்காகத் தமிழ்நாட்டிலிருந்து பயணிக்கின்ற மக்களுக்கு இன்றியமையாத ஒரு தேவையாக இருந்தது.  மலாயாவில் வணிகம் செய்து வந்த பெரும்பாலோர் தமிழ்நாட்டில் உறவினர்களைக் காணச் செல்வதும், பொருட்களை ஏற்றி வரச் செல்வதும், அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதும் மிக இயல்பாக நடைபெற்ற காலகட்டமாகவும் இதனைக் காணலாம்.

--------------------

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]