முனைவர் க.சுபாஷிணி
„முன்னேற்றம்” என்ற பெயரில் வே.சி.நாரயணசாமி என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு பத்திரிக்கை 1929இல் மலாயாவிலிருந்து வெளிவந்துள்ளது. பொது மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு வாரப்பத்திரிக்கையாக இது அமைந்திருந்தது என்பதை இதனை வாசிக்கும் போது நாம் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து தோட்டக்காடுகளை வெட்டி ரப்பரும் செம்பனையும் காப்பியும் விளைவிக்க மலாயா வந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பத்திரிக்கை இயங்கியிருக்கின்றது.
இப்படி சமூக நலனில் அக்கறை கொண்டு சிங்கையிலிருந்து வாரம் ஒருமுறை வியாழக்கிழமைகளில் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது என்பதை அறிகின்றோம்.
இதில் 10.1.1929 தேதியிடப்பட்ட இதழ் அக்காலகட்டத்தில் மலாயாவில் ஈப்போ நகரில் நடைபெற்ற ஒரு அகில மலாய இந்தியர் கருத்தரங்கம் பற்றிய செய்தியைப் பதிகின்றது.
இதில் சிறப்பு என்னவென்றால், அன்றைய மலாயா பிரித்தானிய ஆட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த திரு. எஸ். வீராசாமி என்பவரது தலைமையில் ஈப்போவில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. மலாயாவின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் இதற்கு வந்தனர் என்றும் தமிழ் மக்களின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டது என்றும் அறிகின்றோம். இதில் நிறைவாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
1. மாநில அரசாங்கத்தில்(மலாயா மாநிலங்களில்) இந்தியர்களுக்குப் பதவி அளிக்கவேண்டுமென அரசாங்கத்தாரைக் கேட்டுக்கொள்வது.
2. இந்தியர்களுக்கு ஒருவியாபார சங்கத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்.
3. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமூக சேவைகள் ஆற்றுவதற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் இயக்கங்களை ஆரம்பிக்க வேண்டும்.
4. கள்ளுக் கடைகள் பெருகியிருப்பதால் அது தொழிலாளர்களையும், மற்றவர்களையும் பாழ்படுத்துகின்ற காரணத்தால், எஸ்டேட்களிலும், பிற இடங்களிலுமுள்ள எல்லா கள்ளுக்கடைகளைகயும் எடுத்துவிடும்படி அரசாங்கத்தாரை மிகவும் வலியுறுத்துவது.
5. மலாயா நாட்டின் பலபாகங்களிலும் தமிழ் பள்ளிக்கூடங்களைத் தொடங்க வேண்டும். வயதான தொழிலாளர்களுக்கு இரவு பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும்.
6. பி.ஐ. கப்பல்களில் இந்தியப் பிரயாணிகள் தாங்கமுடியாத கொடுமைகளுக்குள்ளாகின்றார்கள் என்பதால் அக்குறைகளை அரசு களைய ஏற்பாடு செய்ய வேண்டும். (இக்கால கட்டத்தில் கப்பல் பயணம் தான் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று வர இருந்த ஒரே போக்குவரத்து)
7. இந்தியர்களுக்கென தினசரி பத்திரிகை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.
8. அகில மலாயா கூட்டுறவு சேமிப்பு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.
9. தொழிலாளர் பாதுகாப்பு நிதி ஒன்றைச் சேர்க்கத் தொடங்க வேண்டும்.
10. இந்தியர்களின் தொண்டர் படை ஒன்றை நியமிக்க அரசாங்கம் உத்திரவளிக்க வேண்டும்.
11. இந்திய தொழிலாளர்கள் வசிப்பதற்குத் தகுதியான விவசாய நிலங்களை அனுமதிக்கவேண்டும்.
மலாயா சூழலைப் பொறுத்தவரை இந்தியர்கள் எனக் குறிப்பிடப்படுவது தமிழர்களை என்பதை நாம் நினைவில் கூறவேண்டும். இந்த அமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காலச் சூழலுக்கு ஏற்ற தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படத் தொடங்கியிருக்கின்றது என்பதைக் காண்கின்றோம். சிங்கை அன்றைய மலாயாவின் ஒரு பகுதி. அங்கிருந்துதான் இப்பத்திரிக்கை வெளிவந்திருக்கின்றது.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சி துறையின் உலகத் தமிழ் இதழ் 307ல் இன்று வெளிவந்துள்ளது)


No comments:
Post a Comment