Wednesday, April 30, 2025

மலாயா ஆவணங்கள் – 7: பினாங்கு விஜய கேதனன்

 





முனைவர் க.சுபாஷிணி



பினாங்கிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவரத் தொடங்கிய மாத பத்திரிகைகளுள் ஒன்று ”பினாங்கு விஜய கேதனன்”.

இக்காலகட்டத்தில் மலாயாவிலிருந்து தொடங்கப்பட்ட  தமிழ் இதழியல் முயற்சிகளில் இந்த  மாதப் பத்திரிக்கையும் அடங்குகிறது. ”பினாங்கு ஹெரால்ட் பிரஸ்” என்ற அச்சகத்தாரால் பினாங்கு மாநிலத்தில் அச்சிடப்பட்டு மாதம் ஒரு முறை இந்த பத்திரிகை வெளியிடப்பட்டிருக்கிறது.  1870 களில் இப்பத்திரிக்கை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படும் இப்பத்திரிக்கையின் 1888 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் நமக்கு இப்பத்திரிகை பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்குவதாக அமைகிறது.

அடிப்படையில் பினாங்கு விஜய கேதனன் என்ற பெயர் கொண்ட இது  முற்றிலும் தமிழில் நான்கு பக்கங்களில் அமைந்திருக்கின்றது. இப்பத்திரிகையின் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்பத்திரிகையின் தொடக்கப் பகுதி இஸ்லாமிய தமிழில் இறைவனுக்கான துதியுடன் தொடங்குகிறது. இதில் இடம்பெறுகின்ற சொற்கள் அரபுத் தமிழ்ச் சொற்களாகவும் அமைகின்றன.

இப்பத்திரிகை மாதம் ஒருமுறை வெளிவருவதற்கு சந்தாதாரர்களைத் தேடுகின்ற முயற்சிகளும் முதல் பக்கத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. மலாயாவின் பினாங்கு மாநிலத்தில் அச்சிடப்பட்டாலும் தமிழ்நாடு, இலங்கை, பர்மா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் இப்பத்திரிகை பொது மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன  என்பதையும் அறிய முடிகின்றது.

கூடுதலாக, 1888 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த ”முஸ்லிம் நேசன்” என்ற ஒரு பத்திரிகையின் ஆசிரியர் இந்தப் பினாங்கு விஜய கேதனன் மாதப் பத்திரிக்கைக்கு ஒரு வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி இருக்கின்றார்.

ஏப்ரல் மாத பத்திரிக்கையாக வெளியிடுவதற்காக 21.3.1888இல் தயாரிக்கப்பட்ட இப்பத்திரிகையின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் நேசன் பத்திரிகையின் ஆசிரியர் கீழ்க்காணும் வகையில் தன் வாழ்த்தையும் எதிர்பார்ப்பையும் குறிப்பிடுகின்றார்.

”நாகரிகமும் சீர்திருத்தமும் உற்ற இந்தியர்கள் வர வர அவைகளைப் பெற்று விளங்கும்படி ஆங்கிலேயர் பல வழிகளைக் காட்டி வந்தும், மூடத்தன்மை அதிகரித்த நமது இந்தியர்கள் சற்றேனும் அவ்வழியில் ஒழுகாது எருமையின் குணம் கொண்டே நிற்கிறார்கள். ஆகையால் தங்கள் பத்திரிக்கையில் முறை முறையாய் ஐரோப்பியருடைய நாகரிகத்தையும் இந்தியர்களுடைய மடமையையும் எடுத்துக்காட்டி வருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அதில் இடம்பெறுகின்றது.

பினாங்கு விஜய கேதனன் என்று பெயர் கொண்ட இப்பத்திரிக்கை எப்போது தொடங்கப்பட்டது, யாரால் தொடங்கப்பட்டது, எப்போது நிறுத்தப்பட்டது போன்ற செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் மக்கள் உள்நாட்டு அயல்நாட்டுச் செய்திகளை அறிந்து கொள்ள செயல்பட்ட பத்திரிகைகளில் ஒன்றாக இது திகழ்ந்தது என்பதும், அது மலாயாவின் பினாங்குத் தீவைக் கடந்தும் பல பகுதிகளுக்குச் சென்றது என்ற செய்திகளையும் நம்மால் அறிய முடிகிறது.



[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் "உலகத்தமிழ்" இதழில் 283 வது இதழ் வெளிவந்தது.

Wednesday, April 23, 2025

மலாயா ஆவணங்கள் – 6: டைட்டானிக் கப்பல் மூழ்கியது

 





முனைவர் க.சுபாஷிணி


இதே மாதம், அதாவது 15 ஏப்ரல் 1912 அன்று உலகம் முழுவதும் பரிதாபத்திற்குறிய ஒரு செய்தி பரவியது. ஆம்.  அன்றுதான் இங்கிலாந்தின் சவுத்ஹேம்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூ யோர் நகருக்குப் பயணித்த ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் பனிக்கட்டியில் மோதி உடைந்தது.  அக்கப்பலில் பயணித்த ஏறக்குறைய 2200 பயணிகளில் ஏறக்குறைய 1500 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். வைட் ஸ்டார் கடல் வழிப்பயண போக்குவரத்து நிறுவனத்தின் இரண்டாவது துரதிஷ்டமான கப்பல் விபத்தாக அது அன்று அமைந்தது.

இங்கிலாந்தின் வசதி படைத்த பெரும் பணக்காரர்களும், அவர்களோடு அமெரிக்காவிற்குப் புலப்பெயர்வதற்காகத் திட்டமிட்டவர்களும் இக்கப்பலில் இருந்தோரில் பெரும்பாலனவர்கள்.  டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து செயல்பட்ட Harland and Wolff நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்ட கப்பல்.


கடந்த  நூற்றாண்டின் இறுதியில் ஏறக்குறைய மக்களால் மறக்கப்பட்ட இந்த விபத்தைப் பற்றிய செய்தியைத் தூசிதட்டி எடுத்து இன்று மக்களின் பேசுபொருளாக உருவாக்கி வெற்றி கண்டவர் ஆங்கில திரைத்துறையின் புகழ்மிக்க இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். கேட் வின்ஸ்லட், லியானார்டொ டிகப்ரியோ ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் உலகமெங்கும் டைட்டானிக் கப்பல் பற்றியும் அதன் விபத்து பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்த்தது.

இந்த டைட்டானிக் கப்பல் விபத்து நடந்த செய்தியைப் பினாங்கு ஞானாசாரியன் இதழ் அதே 1912ஆம் ஆண்டு ஏப்ரல் இதழில் பதிகின்றது.

உடைந்த கப்பலில் 2378 பேர் இருந்ததாகவும், அதில் செய்தி அறிந்து வந்து சிலரைக் காப்பாற்றி ஏற்றிச்சென்ற கார்பேதியா கப்பலில் மீட்கப்பட்டவர்களுள் முதல் வகுப்பினர் 210 பேர், 2ஆம் வகுப்பினர் 125 பேர், 3ஆம் வகுப்பினர் 200 பேர், கப்பல் பணியாளர்கள் 4 பேர்,  கப்பற்காரர்கள் 37 பேர், விசாரணைக்காரர்கள் 96 பேர், நெருப்பவிப்போர் 71 பேர் என்றும் குறிப்பிடுகிறது. கப்பலின் கப்பித்தானும் முதல் பொறியாளரும் தற்கொலை செய்து கொண்டனர் என்று பிழைத்தவர்கள் தெரிவித்ததையும் குறிப்பிடுகின்றது.  அதோடு கடைசிப் படகு கப்பலை விட்டு நீங்கியவுடன் கப்பலில் இருந்த இசைக்கலைஞர்கள் குழுவினர் கப்பலின் அலங்காரமண்டபப் பகுதிக்குச் சென்று “ கடவுளே உனதருகில் வருகிறேன்” என்ற பாடலை பாடி மூழ்கிய கப்பலில் மாண்டனர் என்பதையும் பதிகிறது. பின்னர் பனிக்கட்டியின் நீர் அதிசூடாகிய கப்பல் இயந்திரத்தில் பட்டதும்  அது வெடித்து கப்பல் இரண்டாகப் பிளந்து போனதையும் குறிப்பிடுகிறது.

அதுமட்டுமன்றி கார்போதியா கப்பல் பிழைத்தவர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் நியூ யோர்க் வந்த போது அங்கு அவர்களுக்கு உதவி செய்ய  அமெரிக்க மக்கள் 20,000 டாலர் பணம் சேகரித்து வைத்திருந்தார்களென்றும், மருத்துவர்களும், தாதிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர் என்பதையும் பதிகிறது.


ஆக, உள்ளூர்  மலாயா செய்திகள் மட்டுமன்றி அயல்நாடுகளில் சமகாலங்களில் நிகழ்ந்த செய்திகளை வழங்குவதிலும் பினாங்கு ஞானாசாரியன் போன்ற அப்போதைய மலாயா தமிழ் இதழ்கள் பங்களித்தன என்பதைக் காண்கின்றோம்.  உடனுக்குடன் உலகச் செய்திகளைச் சேகரித்து அதனை மலாயா வாழ் தமிழ் மக்களும் அறிந்து கொள்ளும் பெரும்பணியை மலாயாவின் இத்தகைய இதழ்கள் செயல்படுத்தியிருக்கின்றன என்பதை இந்த ஆவணங்கள் நமக்குச் சான்று பகர்கின்றன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

[- தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 281இல் இன்று வெளிவந்திருக்கும் கட்டுரை]

Wednesday, April 16, 2025

மலாயா ஆவணங்கள் – 5: ரிக்‌ஷா வண்டி

 




முனைவர் க.சுபாஷிணி


18, 19, 20ஆம் நூற்றாண்டு காலம் என்பது மிக அதிகமான எண்ணிக்கையில் ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் மக்கள் மலாயா நிலப்பகுதிகளுக்குக் குடியேறிய காலமாகும். இப்படிக் குடியேறிய மக்கள், அவர்களோடு கொண்டு வந்த பண்பாடும் தொழில்நுட்பமும், வாழ்க்கை முறைகளும் உள்ளூர் மலாய் நிலத்திலும் மக்கள் புழக்கத்தில் ஊடுறின.

மக்களை அமரவைத்து ஒரு மனிதன் தன் கைகளால் இழுத்து நடந்து செல்வது இழுக்கும் ரிக்‌ஷா எனப்படும். இது தொடக்கத்தில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறிகின்றோம். அங்கு Jiinrikisha என இது அழைக்கப்படுகிறது.   ஆசிய நாடுகள் பலவற்றிலும் இந்த வகை ரிக்‌ஷா பயன்பாடு 19ஆம் நூற்றாண்டில் பரவத் தொடங்கியது.  சம காலத்தில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலாயா, இந்தோனீசியா போன்ற நாடுகளிலும் இது புழக்கத்தில் வந்தது.

மலாயாவில் 1912இல் இவ்வகை இழுக்கும் ரிக்‌ஷாவில் பயணம் செய்தபோது நிகழ்ந்த ஒரு தாக்குதலைப் பற்றிய செய்தி நமக்கு இவ்வகை ரிக்‌ஷா பயன்பாடு மலாயாவில் புழக்கத்தில் இருந்ததைத் தெரிவிக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு செய்தியை 1912 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வாரம் இரு முறை வெளிவந்த ”பினாங்கு ஞானாசிரியன்” ஏப்ரல் மாத இதழில் காண்கின்றோம்.

இவ்வகை ரிக்‌ஷா பயன்பாடு 10ஆம் நூற்றாண்டில் மிகச்சாதாரணமான ஒரு போக்குவரத்துச் சாதனமாக மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளது.  குறிப்பாக நகர்ப்புரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பொருளாதார வசதிபடைத்த உள்ளூர் மக்களும் ஆங்கிலேயர்களும் ரிக்‌ஷா பயன்படுத்தியிருக்கின்றனர்.

பினாங்கு ஞானாசிரியன் பத்திரிக்கையில் வந்திருக்கும் செய்தி பீடோர் தோட்டத்தின் அன்றைய உரிமையாளராக இருந்த கார்ன்வால் என்ற ஓர் ஆங்கிலேயருக்கு நடந்த தாக்குதலைப் பதிகின்றது.

அவர் கையில் 200 மலேசிய வெள்ளியை எடுத்துக் கொண்டு  சுங்கை தோட்டத்திலிருந்து பீடோர் தோட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.  இவர் பயணித்த ரிக்‌ஷாவண்டி ரயில்நிலையம் அருகாமையில் செல்லும் போது அவருக்கு அருகே இரண்டு சீனர்கள் வந்திருக்கின்றனர். அவர்கள் நல்லமுறையில் உடை உடுத்திக் கொண்டு சாதாரணமாகத் தென்பட்டிருக்கின்றனர்.  ரிக்‌ஷா வண்டியை நெருங்கியதும் கையில் கத்தியை உருவி எடுத்துக் கொண்டு மிரட்டத்தொடங்கியுள்ளனர். அதைக் கண்ட ரிக்‌ஷா வண்டிக்காரர் பயந்து வண்டியையும் கார்ன்வாலையும் அப்படியே விட்டு விட்டு ஓடியிருக்கின்றார்.

கார்ன்வால் அவர்களை எதிர்த்து சண்டை போட்டிருக்கின்றார். ஆனால் அந்த கொள்ளைக்காரர்களில் ஒருவன் துப்பக்கி ஒன்றை உருவி வெளியே எடுத்து கார்ன்வால் காலில் சுட்டிருக்கின்றான். காலில் காயப்பட்டலும் கூட தொடர்ந்து அவர்களை எதிர்த்து சண்டையிட்டிருக்கின்றார் கார்ன்வால்.  துரத்திப் பிடிக்க ஓடியபோது கயவர்கள் இருவரும் ஓடிவிட்டனர். பின்னர் ஒளிந்து கொண்டிருந்த ரிக்‌ஷா வண்டி ஓட்டுநர் அவரிடம் வந்து அவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமணை சென்று  சிகிச்சை எடுத்துக் கொண்டு காவல்துறைக்கும் செய்தி கொடுத்திருக்கின்றனர்.

இப்படி ரிக்‌ஷா வண்டி தொடர்பான செய்திகளையும் கடந்த  நூற்றாண்டு பத்திரிக்கையில் காண முடிகின்றது.

இழுக்கும் வகை ரிக்‌ஷா வண்டிகள் கால ஓட்டத்தில்  மாற்றம் பெற்றன. சைக்கிளை வண்டியில் பொருத்தி சைக்கிள் ரிக்‌ஷாவாக இது உருமாற்றம் பெற்று விட்டது. கடந்த நூற்றாண்டின் இறுதிவரை மக்களின் இயல்பான புழக்கத்தில் இருந்த சைக்கிள் ரிக்‌ஷா படிப்படியாக இன்று இயல்பான ஒரு பொதுப்போக்குவரத்து வாகனமாகப் பயன்பாட்டில் இல்லை. ஆனால், உலகின் பல நாடுகளில் இன்று சுற்றுலா துறை அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்களைச் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். மலேசியாவில் இன்றும் இத்தகைய அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்களைப் பினாங்கு, கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர்பாரு போன்ற பெரு நகரங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்ற பகுதிகளில் காண்கிறோம்.  இங்கிலாந்தில் லண்டன் நகரில் சீனா தெருவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


Wednesday, April 9, 2025

மலாயா ஆவணங்கள் – 4: "பினாங்கு கலாநிதி" எனும் மங்கை

 





முனைவர் க.சுபாஷிணி


சமகால பத்திரிகைகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை வெளியிடும் போக்கு இன்றைக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் மலாயாவிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் ஒதுக்கிவிட்டுச் செல்ல இயலாது. அப்படிப்பட்ட ஒரு செய்தியை 1912 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வாரம் இரு முறை வெளிவந்த ”பினாங்கு ஞானாசிரியன்” ஏப்ரல் மாத இதழில் காண்கின்றோம்.

இதே காலகட்டத்தில் "பினாங்கு கலாநிதி" என்ற பெயரில் ஒரு பத்திரிகை வெளிவந்திருக்கின்றது. இப்பத்திரிக்கையை நடத்தியவர் அல்லது இதன் உரிமையாளராக இருந்தவர் ஆ. முகமது அப்துல் காதிர் என்று இச்செய்தியிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

பினாங்கு கலாநிதி என்னும் இந்தப் பத்திரிகை 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி வெளிவரத் தொடங்கி இருக்கின்றது. இதனைக் கூறுகின்ற பினாங்கு ஞானாசிரியன் செய்தி, "கலாநிதி என்னும் சண்டைக்காரி தன் முக்காட்டை நீக்கிப் போட்டு ஊர் திரியப் புறப்பட்டாள்" என இப்பத்திரிகை வெளிவந்த தேதியைக் குறிப்பிட்டு எழுதுகிறது.

இப்பத்திரிக்கை வெளிவந்து ஆறு மாதங்கள் ஆகின்றன ஆனாலும் இப்பத்திரிக்கையாசிரியர்கள் இது வெளிவந்து 151 நாள், அதாவது ஐந்து மாதங்கள் மட்டுமே, என்று கூறுகின்றார்கள் என்றும் குற்றம் சாற்றுகின்றது. இதனைக் குறிப்பிடுகையில், ”கலாநிதி என்னும் இம் மங்கை பினாங்கென்னும் இம்மாபதயில் உற்பத்தியாகி சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆயினும் அவள் தன் வயதை 151 நாளெனக் கூறுகிறாள்"  எனக் கேலி பேசுகிறது.

இப்பத்திரிக்கையின் ஆசிரியரைக் குறிப்பிட்டு சொல்லும் பொழுது ”பினாங்கு கலாநிதி மங்கையின் தந்தை” என்று மறைமுகமாகக் குறிப்பிடுவதையும் காண்கின்றோம்.

பினாங்கு ஞானாசிரியரினில் வந்திருக்கும் இச்செய்தி, பினாங்கு கலாநிதி பத்திரிகை ஆசிரியரையும் ஆசிரியர் குழுமத்தையும் சாடுவதாக அமைகின்றது. அச்செய்தியின் தலைப்பு "பினாங்கு கலாநிதி மங்கையின் புலால் நாற்ற விளக்கமும் அவள் தந்தையின்  நற்சாட்சிப் பத்திரமும் மிலேச மொழிக் கண்டனமும்" என எழுதப்பட்டுள்ளது.

ஆக,  பினாங்கு கலாநிதி பத்திரிகையைச் சாடும் வகையில் எழுதப்பட்ட ஒரு பதிவு என்றே இதனைக் கூறலாம்.

இப்பத்திரிக்கையின் தோற்றம் சிறப்பாக இல்லை என்பதை கேலி பேசும் வகையில்  தொடர்ந்து வரும் செய்தி அமைகிறது. " இவள் அழகோ சொல்லத் தரமல்ல. முன்புறம் மட்டும் துருக்கி இத்தாலிய யுத்த விஷயமாகிய தசையும், மறுபுறம் சுத்த வெள்ளை காகிதமாகிய வெறும் எலும்பும் பூண்டு அகோர ரூபத்துடன் இளைத்து நலி கொண்டு வளர்ச்சியின்றி கூனிக்குறுகி சொந்த மனை இல்லாமல் அயல்மனையில் வளர்ந்து, அங்கிருந்து துரத்தப்பட்டு மறுபடி திரும்பி வந்து குட்டும், வெட்டுமுண்டு தத்தளித்து தள்ளாடி நடந்து வருகிறாள்" எனக் கடுமையாகச் சாடுகின்றது.

பினாங்கு கலாநிதி பத்திரிக்கை பினாங்கு ஞானாசிரியன் பத்திரிகையை "ஏ குழந்தாய்" எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதைப் பற்றியும் பினாங்கு ஞானாசிரியனில் காண்கிறோம்.

இரண்டு பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இடையிலான விவாதத்தை பத்திரிக்கை செய்தி நன்கு வெளிப்படுத்துகின்றது.  "அவனுக்கு மூக்கில்லையாதலால் மற்றவர்கள் மூக்கையும் அறுக்க பிரயாசைபட்டனன் போல மகாமாணியாகிய கலாநிதி பத்திராதிபரும் எம்மை தூஷிக்க ஆரம்பித்தார்" எனக் கேலி பேசுகிறது.

இன்றைக்கு நூறு ஆண்டுகள் கால மலாயா நாட்டு தமிழ் உரைநடை எழுத்துமுறை மணிப்பிரவாள எழுத்து நடையில் அமைந்திருக்கின்றது. அக்கால வாக்கில் தமிழ்நாட்டு எழுத்து நடையை ஒத்த வகையிலான எழுத்து நடையைப் பின்பற்றுவது தமிழ்மக்கள் புலம்பெயர்ந்த மலாயா நாட்டிலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றது. பொதுவாகவே மொழி, பண்பாடு ஆகிய தளங்களில் தாய் தமிழகத்தைப் பின்பற்றும் இப்போக்கை இன்றும் மலேசிய தமிழ் மக்கள் சூழலில் காண்கின்றோம்.

பினாங்கு ஞானாசிரியன் பத்திரிகையின் இந்த ஏப்ரல் மாத இதழின் ஒரு பக்கம் முழுவதிலுமே பினாங்கு கலாநிதி பத்திரிக்கையுடனான் வாக்குவாதமே முழு பக்கத்தையும் நிறைக்கின்றது.

இப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கும் இச்செய்தியின் வழி ”பினாங்கு ஞானாசிரியன்” பினாங்கு மாநிலத்திலிருந்து வெளிவந்த அதே காலகட்டத்தில் பினாங்கிலிருந்து வெளிவந்த மற்றொரு பத்திரிக்கையாக ”பினாங்கு கலாநிதி” இருந்தது என்பதும், இந்த இரண்டு பத்திரிகைகளுக்கிடையே சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன என்பதும் இப்பதிவின் வழி தெளிவாகின்றது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

Wednesday, April 2, 2025

மலாயா ஆவணங்கள் – 3: பினாங்கு வர்த்தமானி




முனைவர் க.சுபாஷிணி

19 ஆம் நூற்றாண்டில் மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த பத்திரிக்கை முயற்சிகளில் "பினாங்கு வர்த்தமானி" பத்திரிக்கையும் ஒன்று. இது வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதிப்பிக்கப்பட்டது.

பினாங்கு வர்த்தமானி என்ற பத்திரிக்கையும் அதனுடன் ஆங்கிலத்தில் இணைந்து வெளியிடப்பட்ட The Penang News என்ற பத்திரிக்கையும் ஒரே நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டன.   பினாங்கில் ’எண் 1, பிஷப் சாலை’யில் இயங்கிய சிலோன் வர்த்தக நிறுவனத்திற்காக எஸ் அயாத்தோர் என்பவரால் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது ( S.Ayatore for the Salon Trading Company) என்றும் க்ரைட்டேரியன் பதிப்பகத்தால் (Criterion Press,  Penang)  பதிப்பிக்கப்பட்டது என்ற செய்தியையும் இப்பதிரிக்கையில் காண்கிறோம்.

1897ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த பினாங்கு வர்த்தமானி பத்திரிக்கை ஒன்று நமக்கு இப்பத்திரிக்கை தொடர்பான சில தகவல்களையும் அது வெளியிட்ட செய்திகளைப் பற்றியும் வெளிப்படுத்துகின்றது.

இப்பத்திரிக்கை ஆங்கிலத்தில் இரண்டு பக்கங்களும் தமிழ் செய்திகளுக்காக ’பினாங்கு வர்த்தமானி’ என்ற தலைப்புடன் இரண்டு பக்கங்களும் கொண்ட வகையில் அமைந்திருக்கின்றது. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.  

இப்பத்திரிக்கைகளை வாங்க விரும்புவோர் சந்தா பணமாக வருடம் ஒன்றிற்கு மூன்று மலாயா ரிங்கிட் செலுத்த வேண்டும்; அயல்நாட்டிலிருந்து, அதாவது தமிழ்நாடு, இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலிருந்து வாங்க விரும்புவோர் ஆண்டிற்கு நான்கு மலாயா ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்பத்திரிக்கை ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டுமே என்றல்லாமல் எல்லா மதத்தை சார்ந்தவர்களுக்கும் தகவல்கள் வழங்க வேண்டியது அதன் முக்கிய நோக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் முதல் பக்கத்தில் குறிப்புச் செய்தியாகப் பதிந்திருக்கின்றது.  எந்த ஒரு மதத்தை பற்றி குறைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்தும் வகையிலான செய்திகள் இப்பத்திரிக்கையில் இடம்பெறாது என்ற ஆசிரியர் குழுவின் அறிவிப்பு இதனைத் தெரிவிக்கின்றது.  இப்பத்திரிக்கையில் விளம்பரங்களும் இடம்பெறுகின்றன.

பினாங்கு உள்ளூர் செய்திகளும் கூடுதலாக ஏனைய மாநிலங்களான கோலாலம்பூர் மற்றும் அன்று மலாயாவின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த சிங்கப்பூர் உள்ளிட்ட செய்திகளும் இதில் இடம்பெறுகின்றன. அயல்நாட்டுச் செய்திகளுக்கும் ஒரு பக்கத்தில் இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

தங்க விலை பற்றிய, உண்டியல் விலை பற்றிய செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. அத்தோடு எண்ணை விலை, நிலக்கடலை, பிண்ணாக்கு விலை அச்சைகளிப்பாக்கு, கொட்டைப்பாக்கு போன்றவற்றின் விலை மட்டுமன்றி, விலை ஏற்றம் ஏன் ஏற்படுகின்றது போன்ற தகவல்களும் இடம்பெறுகின்றன.

இதில் வழங்கப்பட்டுள்ள செய்திகளில் இருந்து சர்க்கஸ் விளையாட்டுக்காரர்கள் இங்கு வருவதால் பொதுமக்களது பணம் வசூல் செய்யப்பட்டு செலவு செய்யப்படுகின்றது என்றும், ஒவ்வொரு தெருவுக்குத் தெரு பேய் ஓட்டிகளும், பாம்பாட்டிகளும், மாயவித்தை செய்பவர்களும் இருந்து மக்களை ஏமாற்றி வருவதால் மக்களின் பணம் மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்படுகின்றது என்பதையும் பத்திரிக்கை செய்தி வெளிப்படுத்துகின்றது.

இன்றைக்கு 150 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள் கால மலாயாவின் தமிழ் பத்திரிகை முயற்சிகள் ஒவ்வொன்றிலும் மலாயாவின் பினாங்கு, கிள்ளான் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் இருந்து தமிழ்நாடு, பர்மா, வங்காளம், இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயணிக்கின்ற போக்குவரத்து கப்பல்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.

ஆக, அக்காலத்து சூழலுக்கு ஏற்ப மக்களுக்குத் தேவையான செய்திகளை வழங்குவதில் பினாங்கு வர்த்தமானி போன்ற பத்திரிகைகள் 1800 களின் இறுதியில் செயல்பட்டதை இத்தகைய ஆவணங்களின் வழி நம்மால் அடையாளம் காண முடிகிறது. இன்றைக்கு 200 ஆண்டு கால கிழக்காசிய சூழலில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொள்ள இவை முதன்மை ஆதாரங்களாகவும் திகழ்கின்றன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]