Tuesday, June 17, 2025

மலாயா ஆவணங்கள் – 13: முதல் தரமான சாப்பாட்டுக் கடை

 






முனைவர் க.சுபாஷிணி

1912ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி வெளிவந்த பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில்  ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அது ஒரு உணவகம் பற்றிய விளம்பரம்.  

இந்த விளம்பரம் சொல்லும் செய்தியைக் காண்போம்.

எஸ்.எஸ் என்ற ஒருவரது   பெயரில் வணிக உரிமம்  பெற்று பினாங்கிலுள்ள குவின்ஸ்ட்ரீட் சாலையில் மாரியம்மன் கோயில் இருக்கும் சாலையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

 மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவருடைய இந்தப் புகழ்பெற்ற சாப்பாட்டுக் கடையில் தூய்மையான ருசியான உணவு விற்கப்படுகிறது.  அங்கேயே தங்கிக் கொள்ளவும் அறைகள் உள்ளன. இந்தியாவிலிருந்து, அக்கரை ஊர்களிலிருந்து வருபவர்களும் பினாங்கிலிருந்து இந்தியாவிற்கு செல்பவர்களும் இந்த சாப்பாட்டுக் கடையைத் தேடி வருகிறார்கள். ஒருமுறை இங்குச் சாப்பிட்டவர்கள் பின்னர் வேறெங்கும் செல்ல மாட்டார்கள். இங்குதான் உணவு உண்பார்கள்.  

இந்த விளம்பரத்தை வழங்கியவர் ”திருப்பத்தூருக்கு அடுத்த ஆத்திரம்பட்டி எனும் ஊரைச் சார்ந்த மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவரின் கணக்கு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பினாங்கில் குவின்ஸ்ட்ரீர் எனப்படும் சாலை பிரசித்தி பெற்றது. இங்கு இன்று ஏராளமான தமிழர்கள் வணிகம் செய்கின்றார்கள். பினாங்கின் தமிழ் வணிகர்கள் மட்டுமே கோலோச்சும் பகுதி இது.  கடைவீதி என்றும் சொல்லலாம்.

இன்று “லிட்டல் இந்தியா” என அழைக்கப்படும் பகுதியில் இச்சாலையும் அடங்கும். இங்குதான் பிரமாண்டமான மாரியம்மன் கோயில் உள்ளது. இன்றும் கூட தைப்பூசத் திருவிழா இக்கோயிலில் தொடங்கி பின்னர் தண்ணீர்மலை முருகன் கோயில் வரை செல்வது வழக்கம்.

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”அக்கரை” என்ற சொல் மலேசிய தமிழர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் எனலாம். தமிழ்நாட்டை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் என்றும் பினாங்கு தீவைக் கடந்த நிலப்பகுதி என்றும் இரு வேறு பொருளில் இது பயன்பாட்டில் உள்ளது.

இன்று இப்பகுதியில் ஏராளமான தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களின் உணவகங்கள் செயல்படுகின்றன. “ஊர்க்காரர்கள்” தெரு என்றும் இப்பகுதி இன்று உள்ளூர் தமிழ்   மக்களால் அழைக்கப்படுகிறது. “ஊர்” என்ற சொல் தமிழ்நாட்டைக் குரிப்பதுதான். “ஊர்” என்றாலே மலேசியத் தமிழர்களுக்கு அது தாய் தமிழ்நாடுதான். இது மிக இயல்பாக மக்களின் பேச்சுப் பயன்பாட்டில் இடம்பெற்று விட்டது.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலக தமிழ் இதழ் 289ல் இன்று வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment