முனைவர் க.சுபாஷிணி
ஆங்கிலத்தில் phonograph record (அல்லது gramophone record) என அழைக்கப்படும் ரெக்கார்டு இசைக்கருவி தமிழ் மக்களின் சூழலிலும் பரவத் தொடங்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எனலாம். 1857ஆம் ஆண்டில் Édouard-Léon Scott de Martinville என்ற பிரெஞ்சுக்காரர் phonautograph என்ற இதன் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தார்.
1877இல் அமெரிக்கரான தோமஸ் எடிசன் வட்டுகளில் சேர்க்கப்படும் வகையில் முதல் phonograph கருவியைக் கண்டுபிடிக்கின்றார். பின்னர் படிப்படியாக இதன் தொழில்நுட்பம் மேம்பாடு காணத் தொடங்கியது. 1880இல் ஜெர்மானியரான Emile Berliner என்பவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான இசைவட்டுக்களைக் கண்டுபிடிக்கின்றார். அதன் பின்னர் பெர்லினர் தனது வணிகக்கூட்டாளியான அமெரிக்கரான ஜோன்சனுடன் இணைந்து கேம்டன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் 1901இல் விக்டர் டால்கிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கி அது உலகப் பிரபலம் அடைகின்றது.
அமெரிக்க பயன்பாட்டில் பெரும்பாலும் phonograph record என்றும் இங்கிலாந்தில் gramophone record என்றும் இது அழைக்கப்பட்டது. அதன் பின்னர் gramophone record எனும் இசைவட்டு 1910 வாக்கில் மக்கள் புழக்கத்திற்கு வரத்தொடங்குகிறது.
பொதுவாக இசைவட்டின் சுற்றளவை வைத்து இது குறிப்பிடப்படும். உதாரணமாக 12, 10, 7 அங்குலத்தில் இவை தயாரிக்கப்பட்டன.
என்ன ஆச்சரியம் என்றால் மேற்கத்திய உலகில் அறிமுகமாகும் இந்த க்ராமஃப்போன் இசைவட்டுக்கருவி அதே 1912 வாக்கில் மலாயாவிலும் தமிழ் மக்களின் பொழுது போக்கு சாதனமாக புழக்கத்தில் வந்தது என்பதுதான்.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாரப் பத்திரிக்கையான பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில் இடம்பெறுகின்ற ஒரு விளம்பரம் இதற்குச் சான்றாகின்றது.
இந்த விளம்பரத்தில் 1912 வாக்கில் தமிழிசை அல்லது உரைகளைக் கொண்ட இசைவட்டுக்களின் தகவல்கள் சில நமக்கு இப்பத்திரிக்கையின் வழி கிடைக்கின்றன. அவற்றுள் சில:
* இன்னும் என்மீதில் (கதிரையாத்திரை விளக்கம் – பண்: நாதனாமக்கிரியை –தாளம்: ரூபகம்.
* மயினமிசைவரும் – பண்: தன்னியாசி – தாளம்: ஆதி
* அங்கிங்கெனாதபடி – தாயுமானவர்
* தாயைவிட்டு: அரிச்சந்திரநாடகம் – மயான காண்டம்
* பரமேஸ்வரி – ராகம்: கல்யாணி
* சண்டாளன் – ராகம்: ஆனந்தபைரவி
* எக்காலத்திலும் மறவேனே – ராகம்: நாட்டைக்குறிஞ்சி – தாளம்: ஆதி
* நான் படும்பாடு (அருட்பா) – ராகம்: பைரவி
மலாயாவின் கிள்ளான் நகரில் 38 ரெம்பாவ் சாலையில் அமைந்திருந்த கிள்ளான் அச்சு ஆலையில் திரு சி.கந்தையா பிள்ளை என்பவரது கடையில் இவை விற்கப்பட்டன என்ற தகவலும் இந்த விளம்பரத்தில் அடங்குகிறது.
மாலாயா வாழ் தமிழ் மக்களின் இசை ஆர்வத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் தமிழ் இசைவட்டுக்கள் உருவாக்கப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புழக்கத்தில் இருந்தன என்பதும், தமிழ்நாட்டிலிருந்து அவை மலாயாவிற்குத் தருவிக்கப்பட்டு விற்பனை நிகழ்ந்திருக்கின்றது என்பதையும் பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையின் வழி நாம் அறிகின்றோம்.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 287 இதழில் இன்று வெளிவந்தது.)
No comments:
Post a Comment