Wednesday, July 30, 2025

மலாயா ஆவணங்கள் – 19: "தஞ்சாவூரில் சாதிக் கொடுமை"

 




முனைவர் க.சுபாஷிணி


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் ”சத்தியவான்” வாரப்பத்திரிக்கை சமூக சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாக மிளிர்கிறது. அதில் 12.5.1919 அன்று வெளிவந்த பத்திரிக்கையில் தஞ்சாவூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனுபவித்த கொடூரங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கின்றது.

இச்செய்தி தஞ்சாவூர் ஜில்லாவில் சாதி வேறுபாடுகளும் பண்ணையார்கள் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யும் முறை பற்றியும் பேசுகின்றது. பண்ணை சாகுபடி முறை மிகக் கொடூரமாக இருக்கின்றது என்பதை இச்செய்தி பதிகின்றது.

”பண்ணை சாகுபடி என்ற மகா பெரிய தேர் சக்கரத்தில் கழுத்தை கொடுத்துக் கொண்டு கஷ்டப்படுகிறவர்கள் பஞ்சமர்களே. அவர்கள் குடியிருப்பதற்கு வசதியே கிடையாது. இவ்விஷயத்தில் அவர்களுக்கு மிராசுதார்களால் உண்டாகும் இம்சை மிகவும் அதிகம். சொற்ப குற்றத்திற்கெல்லாம் பண்ணை ஆட்களின் குடிசைகளைப் பிரிப்பதும் அல்லது அக்கினி பகவானுக்கு இரையாக்குவதுமே சகஜமான தண்டனை. ஏனெனில் அந்தக் குச்சி வீடுகள் இருப்பது மேற்படி மிராசுதார்களின் மனைக்கட்டு என்று தர்க்கம் செய்கிறார்கள்” என்று இச்செய்தி குறிப்பிடுகிறது.

பண்ணையார்கள் தங்கள் நிலங்களில் பஞ்சமர்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவர்களின் வீட்டை எரிப்பது அல்லது அவர்களின் குடிசை வீட்டை பிரித்து போட்டு அவர்களை நிற்கதியாக நிற்க வைப்பது என்ற வகையில் கொடுமை செய்திருக்கின்றார்கள். உண்மையில் இப்பத்திரிகை செய்தி சொல்கின்ற கொடுமைகளை விட இன்னும் அதிகமாக கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் இதில் விரிவாக அவை விளக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இது பற்றி பேசும் இப்பத்திரிகை செய்தி, ”இது சம்பந்தமாக கவர்னருக்குப் பலமுறை மனு செய்யப்பட்டது. தென்னிந்தியா ஒடுக்கப்பட்டவர்கள் சங்கத்தாரும் சென்ற 10 வருஷமாக பண்ணையாட்களின் மனைக்கட்டு விஷயமாகப் பரிகாரம் செய்யும்படி சென்னை கவர்ன்மெண்டாருக்கு மனு செய்தார்கள். ரங்கூன், சென்னப்பட்டணம், திருச்சினாப்பள்ளி முதலான பிரபல தலங்களில் உள்ள ஆதிதிராவிட சபைகளால் கவுரவம் பொருந்திய இந்தியா தேச மந்திரி அவர்கள் திவ்ய சமூகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும் இம்மனைக்கட்டு விஷயம் குறிக்கப்பட்டிருந்தது. சென்ற மாதம் சிதம்பரம் நந்தனார் சபையின் ஆதரவில் நடந்த பஞ்சமர் கான்பரென்சில் மனைக்கட்டு விஷயமாயும் ஒரு தீர்மானம் ஏற்படுத்தப்பட்டு மேற்படி மந்திரி அவர்களுக்கும் நமது பிரதிநிதி சென்னை கவர்னர் முதலான அரசாங்க தலைவர்களுக்கும் தந்தி மூலமாய் அனுப்பப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.

இதிலிருந்து மூன்று செய்திகளை முக்கியமாகக் காணலாம்.


1. 1919 வாக்கிலேயே தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் சங்கம் என்ற ஒன்று இயங்கி வந்தது என்பதையும் அது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இந்த கொடுமைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

2. ரங்கூன், அதாவது இன்றைய மியான்மார் தலைநகர் ரங்கூன், சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட சபை ஏற்படுத்தப்பட்டு அவை மக்களின் நலனுக்காக போராடி இருக்கின்றன.

3. இந்த நிகழ்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் சபை என்ற ஓர் அமைப்பு இருந்தது பற்றியும், அங்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பஞ்சம நலன்களைக் கவனத்தில் கொண்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டு அதில் பண்ணையார்களின் மனைக்கட்டு மற்றும் அதனால் ஏற்படுகின்ற கொடூரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.


19 ஆம் நூற்றாண்டும் 20 ஆம் நூற்றாண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொடூரங்களை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கொண்டு சென்று சேர்த்து தங்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்துகின்ற காலங்களாக அமைந்தன. அடிமைகளாக பண்ணையார்களிடம் எந்த எதிர் கேள்விகளும் கேட்க முடியாமல் துன்பத்தில் உழன்று கொண்டிருந்த ஏராளமான ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட அல்லது பஞ்சம சமூகத்து மக்கள் பட்ட இன்னல்கள் அதிகம். தமிழ் மக்கள் பலர் இக்காலகட்டங்களில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கூலிகளாகவும் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்து சென்ற வரலாறும் இதனோடு தொடர்புடையது தான்.

ஆக இப்பத்திரிகை செய்தி சொல்வதன் அடிப்படையில் தஞ்சாவூர் பகுதியில் பண்ணையார்களின் கொடுமைகளை அரசுக்குத் தெரிவிக்கும் ஒரு முயற்சியாக இதனைக் காண்கிறோம்.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் மனைக்கட்டு விஷயமாக எல்லா விபரங்களையும் விசாரிக்கும்படி ஸ்ரீமான் ஸ்ரீநிவாச்சாரி என்ற ஒருவரை துணை உதவி ஆட்சியராக பிரித்தானிய அரசாங்கம் நியமித்திருக்கின்றது என்பதை இச்செய்தி குறிப்பிடுகின்றது. இந்த சீநிவாச்சாரி என்பவர் பஞ்சமர்களின் பரிதாப நிலையைக் கண்டு அனுதாபம் அடைந்து தீர விசாரித்து பிரித்தானிய அரசுக்கு அறிக்கை கொடுத்ததாகவும் அதற்காக பஞ்சமர்கள் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்துவதாகவும் இப்பத்திரிக்கை செய்தி மேலும் குறிப்பிடுகிறது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் 295ல் இன்று வெளியிடப்பட்டது)


Wednesday, July 23, 2025

மலாயா ஆவணங்கள் – 18: கப்பல் டிக்கெட்

 




முனைவர் க.சுபாஷிணி

தமிழ்நாட்டில் பஞ்சகாலத்தில் தாம் வாழ்ந்த ஊரையும், கிராமத்தையும், நிலத்தையும் விட்டு புதிய வாழ்க்கையைத் தேடி பயணித்த எண்ணற்ற தமிழ் நிலத்து மக்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் வசிக்கின்றார்கள். அவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் சொல்லொனா துயரத்தை அவர்கள் அனுபவித்தாலும் இன்று அம்மக்களது சந்ததியினர் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை சூழல் ஆகியவற்றில் உயர்ந்து நல்ல வாழ்க்கையைப் பெற்று அந்தந்த நாடுகளில் சட்டப்படி குடியுரிமை பெற்ற மக்களாக வாழ்கின்றார்கள்.

பஞ்சம் என்றால் அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தது என்பது நம் பொதுவான கருத்து என்றாலும், கிபி 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் நிலத்தில் பஞ்சம் குறித்த ஆவணக் குறிப்புகளை நாம் காண்கின்றோம் (காண்க: நூல் "தமிழர் புலப்பெயர்வு - உலகளாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு - ஆசிரியர் க.சுபாஷிணி)

மலாயாவிற்குத் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது பல்வேறு காலகட்டங்களில், குறிப்பாக பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் நிகழ்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பஞ்சத்தின் காரணத்தால் தமிழ் மக்கள் மலாயா வந்திருக்கின்றனர். அவர்கள் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் மலாயாவிற்கு வரும்போது பெரும்பாலும் அவர்கள் இறங்கிக் கொள்வது பினாங்குத் தீவில். சிலர் கிள்ளான், இறுதியாக சிங்கப்பூர் என்று இறங்கினர்.

இப்படி வந்த மக்கள் மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் தோட்டக்காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான பல ஆவணக் குறிப்புகள் இன்று நமக்கு கிடைக்கின்றன. அத்தகைய பயணத்தைப் பற்றிய ஒரு செய்தியை மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த சத்தியவான் என்ற பத்திரிக்கை நமக்கு வழங்குகின்றது.

12.5.1919 என்று தேதி இடப்பட்ட ஒரு இதழ் இச்செய்தியை குறிப்பிடுகிறது.

பஞ்சத்தால் சீர் அழிந்த தமிழ் மக்கள் தரகர்களிடம் காசு கொடுத்து பயணம் செய்வது என்பது ஒரு புறம். சிலரோ மெட்ராஸில் இருந்து புறப்படும் கப்பல் எந்த தேதியில் எத்தனை மணிக்கு புறப்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டு தாங்களே கூட டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்து மலாயா வந்திருக்கின்றனர். அப்படி பயணச் சீட்டு பெறுகின்ற அலுவலகத்தில் அவர்கள் பணம் கட்டி பயணச்சீட்டு வாங்கும் போது அவர்கள் படுகின்ற கஷ்டம் மிகப் பெரிது என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஏமாற்றுக்காரர்களாக அதாவது டம்பவேடம் பூண்டு உலவிக் கொண்டிருக்கும் சிலர் உபகாரமாய் நான் வாங்கித் தருகிறேன் என்றும், அதற்கு தனக்கு அன்றைய மலாயா ரிங்கிட் இரண்டு கொடுக்க வேண்டும் என்றும் ஏமாற்றி அவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு மறைந்து விடுகின்றார்கள்.  

சில ஏமாற்றுக்காரர்கள் மொத்தமாக 10 அல்லது 20 டிக்கெட்களை முன் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதால் பயணச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் வரும்போது பயணச் சீட்டு கிடைப்பதில்லை. அத்தகைய சூழலில் மெட்ராஸ் நகரில் அவர்கள் அடுத்த கப்பல் வரும் வரை காத்திருக்கும் போது உணவுக்கு வழியில்லாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளான நிலையையும் இப்பத்திரிக்கை செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஏமாந்து போவதாலும், அடுத்த கப்பல் வரும் வரை காத்திருப்பதற்கு ஏற்ற செலவுகளை கவனிக்க முடியாமல் சிக்கித் தவிப்பதாலும் கட்டண அலுவலகங்களில் பணிபுரியும் மேலதிகாரிகள் இதனை கவனிக்க வேண்டும் என்பதை இப்பத்திரிகை கூறுகிறது.

இதற்கு நிவாரணமாக,  இத்தனை பயணச்சீட்டுகள் தான் ஒரு பயணத்திற்கு என்பதை பினாங்கிலேயே அலுவலகம் தீர்மானித்து பினாங்குக்கு எவ்வளவு,  கிள்ளான் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு எவ்வளவு என்பதையும் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற ஏழை மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கின்ற சிரமம் குறையும் என்று இப்பத்திரிக்கை ஆலோசனையை முன் வைக்கின்றது.

இச்செய்தியின் வழி பினாங்கிலிருந்து வெளிவந்த “சத்தியவான்” வாரப் பத்திரிக்கை மக்கள் நலனில் அக்கறையோடு அக்காலகட்டத்தில் செயல்பட்டது என்பதையும், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பஞ்சத்தில் வாடி வேலை தேடி மலாயா வருகின்ற மக்கள் சிரமம் இல்லாமல் மலாயா வந்து சேரும் வகையில் அவர்களது பயணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பத்திரிக்கை தர்மத்தை செயல்படுத்தி இருக்கின்றது என்பதையும் இச்செய்தியின் வழி காண்கிறோம்.

செய்தி ஊடகங்கள் கடைக்கோடி எளிய மனிதர்களுக்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை மற்றும் இதழியல் முயற்சிகளுக்கு அடிப்படை காரணமாகவும் நோக்கமாகவும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகைகள் இத்தகைய நோக்கத்தோடு செயல்படுகின்றனவா என்பதை பத்திரிக்கை நிர்வாகத்தினர் ஒவ்வொருவரும் தங்களை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டியதும் அவசியம் தான் அல்லவா!

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 294ல் இன்று வெளியிடப்பட்டது)

Wednesday, July 16, 2025

மலாயா ஆவணங்கள் – 17: இலங்கை “ஆதி திராவிடன்”

 







முனைவர் க.சுபாஷிணி


தமிழ் இதழியல் முயற்சிகள் சீரிய வகையில் தொடங்கப்பட்ட காலமாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் கூறலாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட தமிழ் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள் மேலும் பலருக்கு இத்துறையில் ஈடுபாட்டை உருவாக்கியதன் விளைவாக புதிய பத்திரிக்கைகளின் வரவுகளும் அமைந்தன. அவ்வகையில் தமிழ்நாடு மட்டுமன்றி, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய தமிழர் வசிக்கும் பகுதிகளில் புதிய பத்திரிக்கைகள் தொடங்கப்பட்டன.

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மலாயாவின் பினாங்கிலிருந்து வெளியிடப்பட்ட சத்தியவான் வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. அதில் அச்சமயத்தில் இலங்கையிலிருந்து ஒரு புதிய பத்திரிக்கை வெளிவரத் தொடங்கியிருக்கும் செய்தியை அறிகின்றோம். இப்பத்திரிக்கையின் பெயர் ”ஆதி திராவிடன்”. இந்த விளம்பரச் செய்தியைக் காண்போம்.


“ஆதி திராவிடன்”

இப் பெயர் வாய்ந்த ஒரு மாதாந்தப் பத்திரிகை இலங்கை தென்னிந்திய ஐக்கிய சங்கத்தாரால் ஆதிதிராவிடன் முன்னேற்றத்தைக் கருதி 16 பக்கங்களடங்கி மிக அழகாக அச்சிடப்பட்டிருக்கின்றது. பத்திரிக்கையின் போக்கை நோக்க அது தன்சந்தாதாரர்களுக்கு மிகவும் உபயோகமான விஷயங்களையே எடுத்து போதிக்கு மென்று நம்புகின்றோம். அப்பத்திரிக்கைக்கு வருஷ சந்தா ரூபா 1.25. சந்தாதரராக சேர விரும்புவோர் ஆதிதிராவிடன் பத்திராதிபர், தென்னிந்திய ஐக்கிய சங்கம், 221, சர்மாவிலா, கொள்ளுப்பட்டி,கொழும்பு என்னும் விசாலத்திற்கு எழுதிக்கொள்ளலாம். – திராவிடன் “


இந்த விளம்பரத்துடன் மேலும் சத்தியவான் பத்திரிக்கை ஆசிரியர் கீழ்க்காணும் வாழ்த்தையும் பதிகின்றார்.

[ஆதிதிராவிடர்கள் முன்னேற்றத்திற்குப் பத்திரிக்கை மிக அவசியம். திராவிடன் பத்திராதிபதியோடு இப்பத்திரிக்கையும் வாழும்படி ஆசி கூறுகிறோம்]

இலங்கையில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடன் இலங்கையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பத்திரிக்கையாகத் திகழ்ந்திருக்கின்றது.  இந்த ஆதிதிராவிடன் என்ற பத்திரிக்கை இலங்கையின் முதலாவது தலித் இதழ் மட்டுமல்ல, மலையகத்தின் முதலாவது பத்திரிக்கையுமாகும் என்பதை நோர்வேயின் வசிக்கும் இலங்கை ஆய்வாளர் சரவணன் குறிப்பிடுகின்றார். (https://www.namathumalayagam.com/2023/04/AdiDraviden.html)

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இதழியல் செயல்பாடுகளில் அயோத்திதாசப் பண்டிதர் மிக முக்கியமானவர். அக்காலத்தில் இவரது ஆதிதிராவிடர்கள் நலன் சார்ந்த முயற்சிகளின் தாக்கத்தை தமிழ்நாடு மட்டுமன்றி மலாயா, இந்தோனீசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் காணமுடியும். எடுத்துக்காட்டாக அயோத்திதாசப் பண்டிதரின் தாக்கத்தாலும் உதவியுடனும் இந்தோனிசியாவின் மேடான் நகரில் ஆதிதிராவிடர் அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கம் கண்டு செயல்பட்டது (நூல்: தமிழர் புலப்பெயர்வு – க.சுபாஷிணி)  அதே வகையில் இலங்கைக்கான அயோத்திதாசப் பண்டிதரின் வருகை எழுச்சியை ஏற்படுத்தியது என்பதும் மறுப்பதற்கில்லை.

இந்த ஆதி திராவிடன் பத்திரிக்கை 1919ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம், சாதிப் பிரிவினை எதிர்ப்பு ஆகிய பொருளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சமூக மாற்றத்தை முன்வைத்து 20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இதழியல் முயற்சிகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த இந்த ஆதி திராவிடன் என்ற மாதப் பத்திரிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றது.  


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 293 இல் இன்று வெளியிடப்பட்டது)

Wednesday, July 9, 2025

மலாயா ஆவணங்கள் – 16: சேலை வாங்கலையோ? சேலை!

 




முனைவர் க.சுபாஷிணி

இன்று சிங்கப்பூர் தனி நாடாக உள்ளது. ஆனால் மலேசியா பண்டைய மலாயா என்ற அடையாளத்திலிருந்து பிரிந்து, பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.

1959 ஜூன் மூன்றாம் தேதி முதல் சிங்கப்பூர் தனி ஆட்சியுடன் உருவாகத் தொடங்கியது. அதன் பின்னர் அதிகாரப்பூர்வ மலேசிய புரிந்துணர்வின் வழி 1963 செப்டம்பர் 16ஆம் தேதி முதல் சுதந்திர நாடாக படிப்படியாக பிரிட்டனிடம் இருந்தும் மலேசியாவிடமிருந்தும் பிரிந்து தனி நாடாக மாறியது.

இந்தப் பின்னணியோடு நாம் பார்க்கும் போது 1963 க்கு முன்னர் சிங்கப்பூர் மலாயாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.

வரலாற்று காலத்தில் பண்டைய ஸ்ரீவிஜயா பேரரசு, அதன் பின்னர் மலாய் பேரரசு ஆட்சி காலத்தில் எல்லாம் மலாயா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மூன்றும் பெரும் பேரரசின் ஆட்சிகளுக்குள் இருந்தன. பின்னர் படிப்படியாக பல்வேறு ஆதிக்கங்கள் இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்களால் இவை தனித்தனி நாடுகளாக இன்று பிரிந்திருக்கின்றன.

19 ஆம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் பத்திரிகைகள் முயற்சிகள் என்று நோக்கும் போது பினாங்கு பகுதியில் எப்படி தமிழ் பத்திரிகை வெளியீட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டதோ, அதேபோல சமகாலத்தில் சிங்கையிலும் தமிழ் பத்திரிகை முயற்சிகள் வெளிவரத் தொடங்கின. அத்தகைய ஒரு பத்திரிக்கை தான் ”சிங்கைநேசன்”.

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை தோறும் வெளியிடப்படும் பத்திரிக்கையாக ஒரு வாரப் பத்திரிக்கையாக சிங்கைநேசன் அன்று வெளிவந்து கொண்டிருந்தது.

1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளிவந்த சிங்கைநேசன் இதழ் கூறும் ஒரு செய்தியைக் காண்போம். இது புடவைகள் பற்றிய ஒரு விளம்பரம்.

இன்றைக்கு மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பல புடவைக் கடைகள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து புடவைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வோர் உள்ளூர் வியாபாரிகளுடன் வணிகத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழி பொருட்களை அனுப்பி வைப்பது என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற ஒவ்வொரு கப்பலிலும் புடவைகளும், வேஷ்டிகளும், துண்டுகளும், கைலிகளும் மற்ற மற்ற பொருட்களும் வந்து சேர்வதும் மிக இயல்பாக நடந்து கொண்டிருந்தது. அத்தகைய,  புடவைகள் விற்கும் ஒருவர் கொடுத்த விளம்பரத்தை இப்பத்திரிகையில் கீழ்காணும் செய்தி விளக்குகின்றது.

”மதுரை வெள்ளிக்கெண்டை வேஷ்டிகளும்,  உருமால்களும், சேலைகளும், காசி பேட்டு மாதிரி துப்பட்டிகளும், சிறுபிள்ளை வேஷ்டிகளும், சிற்றாடைகளும், சீர்மைக்கெண்டையில் மேற்கண்ட ஜவுளித் தினுசுகளும், சென்ன பட்டண மாதிரி ஜோடி லேஞ்சிகளும், பல்லாரி கடப்பை கர்நூல் முதலிய இடங்களில் இருந்து வருவித்த விரிப்புக்கடுத்த மேலான கம்பள திணிசுகளும், மல், காசா காரிக்கன் புடவைகளும், கொறநாடு, கும்பகோணம், சிதம்பரம் முதலில் இடங்களில் இருந்து பல மாதிரி பட்டு பளுக்கா சேலைகளும், சென்னப்பட்டின மாதிரி கைலி சாரம் தினுசுகளும் மற்றும் பலவித ஜவுளி தினசக்களும் வந்திருக்கின்றன. பலவித புஸ்தகங்களும் இருக்கின்றன. வேண்டியவர்கள் பால்கடை சைட்டியில் 49 ஆம் நம்பர் புடவை கடையில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.

இப்படிக்கு

திவான்முக்கியித்தீன்சாகி, சிங்கப்பூர், 3/8/87”


மேற்கண்ட செய்தியில் ”லேஞ்சி” என்ற சொல் கைத்துண்டுகளைக் குறிக்கின்றது. மலேசிய தமிழ்மக்கள் புழக்கத்தில் உள்ள ஒரு சொல் இது. அதே போல “சாரம்” எனும் சொல் கைலியை குறிப்பது. Sarong எனும் மலாய் மொழிச் சொல்லின் தமிழாக்கம். மலேசியாவிலும் இலங்கையிலும் தமிழ் மொழி பயன்பாட்டில் உள்வாங்கப்பட்ட ஒரு சொல் எனலாம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 292ல் இன்று வெளியிடப்பட்டது

Friday, July 4, 2025

மலாயா ஆவணங்கள் – 15: சத்தியவான்

 






முனைவர் க.சுபாஷிணி


கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய மலாயாவின் பினாங்குத் தீவிலிருந்து குறிப்பிடத்தக்க தமிழ் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அத்தகைய முயற்சிகளில் ஒன்று சத்தியவான் என்ற பெயர் கொண்ட, வாரம் ஒரு முறை திங்கட்கிழமைகளில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை.

இதன் தலைப்பில் சத்தியவான் என தமிழிலும் ஆங்கிலத்தில் The Sathiawan என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிக்கையில் இது 1919 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக வெளிவந்திருப்பதைக் காண முடிகின்றது. ஆக, ஏறக்குறைய 1919 அல்லது இதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது மாதங்களுக்கு முன்னர் இப்பத்திரிக்கை முயற்சி தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கு இது இடம் அளிக்கிறது.

14 ஏப்ரல் 1919 அன்று வெளியிடப்பட்ட சத்தியவான் பத்திரிகையில் உள்ள தகவல்களை ஆராய்வோம்.

நான்கு பக்கங்களைக் கொண்ட வகையில் இது அமைந்திருக்கின்றது. இப்பத்திரிகை பினாங்குத் தீவில் உள்ள பினாங்கு ஸ்ட்ரீட் சாலையில் அமைந்திருந்த விக்டோரியா பிரஸ் என்ற அச்சகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் டாக்டர். பாலகந்தக சிவம் என்பவர். பினாங்கு ஸ்ட்ரீட் என்பது தமிழர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வணிகம் செய்கின்ற ஒரு பகுதி என்பதை இன்றும் காண்கிறோம்.

ஏனைய பத்திரிகைகளைப் போலவே இந்த பத்திரிகைக்கும் சந்தாதாரர்கள் தேவை என்பதைக் குறிப்பிட்டு பத்திரிகை நிர்வாகத்தார் விளம்பரங்கள் செய்துள்ளார்கள்.

தங்கள் பத்திரிகை பற்றிய நல்ல கருத்துக்களையும் எண்ணங்களையும் வாசகர்களிடையே விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது பத்திரிக்கை பற்றி கீழ்காணும் வகையில் இதில் செய்தி இணைத்துள்ளார்கள்.


”உலகத்துக்குச் சிறப்புப் பொருள்.

பரலோகத்துக்குச் சிறப்பு அருள் அல்லது அன்பு.

மனிதன் தேர்ந்த பிறகு பிறருக்குப் போதிப்பது கல்வி.

மனிதன் ஞானத்தை அடைந்த பிறகு பிறருக்குப் போதிப்பது மார்க்கம் அல்லது மதம்.

பினாங்கு மலாயா தீபகற்பங்களில் பிரசுரமாகும் செந்தமிழ் பத்திரிகைகளில் இது ஒன்றே மிகச்சிறந்தது.”

செந்தமிழ் பத்திரிக்கை என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டாலும் கூட மணிப்பிரவாள நடையும் ஆங்கிலக் கலப்பும் இப்பத்திரிக்கையில் நிறைந்து காணப்படுகின்றது.

பினாங்கு மாநில செய்திகள் தான் இந்தப் பத்திரிக்கையை முழுமையாக நிறைத்திருக்கின்றன. பினாங்கு அறநிலையத்துறை தொடர்பான செய்திகள், பினாங்கு முத்துமாரியம்மன் கோயிலின் செய்திகள், உள்ளூர் செய்திகள் ஆகியன அன்றைய சூழலை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மலாயாவில் தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியீட்டில் பினாங்குத் தீவில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதற்கு இந்த சத்தியவான் வாரப்பத்திரிக்கையும் சான்றாக அமைகிறது.

 [குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 291இல் இன்று வெளியிடப்பட்டது.)