Thursday, April 7, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு - 2

2. மக்கள்


பினாங்கு - ஏராளமான ஞாபங்களை எனக்கு தந்த ஒரு ஊர். எனது மலேசிய வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மானிலத்தில் தான். எனது முந்தைய சில பதிவுகளில் பினாங்கில் எனது சில நினைவுகளை நான் பதிந்திருக்கின்றேன். பினாங்கு மானிலம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 450 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர் தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கே சிறப்பை கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் என கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.



மலேசியாவை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர். மலாய் இனத்தவர்கள் 51விழுக்காட்டினரும், அத்துடன் மேலும் 11 விழுக்காட்டினர் ஏனைய பழங்குடி இனத்தவரும் சேர்ந்து ஏறக்குரைய 62விழுக்காட்டு ள் என்ற நிலையில் பூமிபுத்திரர்கள் (Bumiputera) பெரும்பாண்மை இனமாகத் திகழ்கின்றது. இதற்கடுத்தாற் போல எண்ணிக்கையில் வருபவர்கள் சீனர்கள். ஏறக்குறையை 28 விழுக்காட்டினர். மக்கள் தொகையில் குறைந்திருந்தாலும் மலேசியாவின் பொருளாதாரத்தின் மூல நாடி இவர்கள் என்பதே உண்மை. அதற்கடுத்தாற் போல தமிழர்கள். இவர்களின் எண்ணிக்கை 7.5% என்ற அளவில் உள்ளது. இதைத்தவிர மேலும் ஐரோப்பியர், தாய்லாந்துக்காரர்கள், அராபியர்கள் என சிறு விழுக்காட்டினர் அமைந்து மொத்த மகக்ள தொகையை உருவாக்கியுள்ளது. இதில் பூமிபுத்திரர்கள் (Bumiputera) குழுவில் இடம்பெருபவர்கள், மலாய் இனத்தவர்களும் மலேசியாவின் பூர்வக் குடியினரும்தான்.


மலேசிய பூர்வக் குடியினர் பல குழுக்கள் உள்ளனர். நெக்ரித்தோ, செனாய் போன்ற குழுக்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள். நெக்ரித்தோவின் உட்பிரிவுகளான ஜாஹாய், லானோ, போன்றவர்கள் இன்றளவும் நாடோடிகளாக் வாழ்பவர்கள். காடுகள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கலில் பலர் காடுகளை விட்டு வெளிவந்து நகரங்களில் தொழிலில் ஈடுபட்டும் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைத்தும் வாழ்க்கை தரத்தில் மேம்பாடு அடைந்து வருகின்றனர். செனாய் குழுக்களின் உட்பிரிவுகளான தெமுவான், ஜக்கூன், செமாய், தெமியாட், தே வோங், ஜாஹூட், செம்மலாய் போன்றவர்கள் கடற்கரைகருகிலேயும் சில குழுக்கள் காடுகளிலும் மீன்பிடித்தும் வேட்டையாடியும் வருவதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள். கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்) சரவாக் மானிலத்தில் அதன் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் பூர்வகுடி மக்களே. அதே போல சபா மானிலத்தை எடுத்துக் கொண்டால் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் பூர்வ குடி மக்கள் தான். இந்த மானிலத்தில் மாத்திரம் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட பூர்வகுடி இனத்தவர்கள இருக்கின்றனர். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு தினுசான குழுக்கள். டூசூன், கடஸான், மூரூட் என பல குழுக்கள். சரவாக் மானிலதத்தை எடுத்துக் கொண்டால், ஈபான், கென்யா, காபாட், கெலாபிட், பூனான் பா, லாஹானான், செகாப்பாக் என பல குழுக்கள். ஒவ்வொரு குழுக்களுக்கும் அவரவர் மொழிகள், வட்டார வழக்குகள் என பல உள்ளன. மலேசியாவைப் பொருத்த வரை மலாய் மொழி தேசிய மொழி என்ற போதிலும் இந்த இனக்குழுக்கள் தங்கள் மொழியை மறக்கவில்லை, என்பதுடன் மிக உறுதியாக தங்கள் இனத்தின் மொழியை வழக்கில் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.



இதில் நெக்ரித்தோ குழுவினர் மலேசியாவில் வாழும் குடிகளில் மிகப் பழமையான குடிகளுல் ஒன்று. இவர்கள் இன்றைய மலேசியாவின் பூர்வகுடிகளில் அடங்கினாலும் இவர்கள் வேறு பகுதியிலிருந்து பெயர்ந்து குடியேறிவர்கள் எனக் கருதப்படுகின்றனர். நெக்ரித்தோ (ஸ்பேனீஷ் மொழியில் நீக்ரோ என்பதைக் குறிக்க பயன்படும் சொல், அதவது சிறிய கருப்பர்கள் என்ற பொருளில்) என்பது ஐரோப்பியர்கள் இம்மக்களை குறிக்க பயன்படுத்திய பெயர். இவர்கள் பல்லண்டுகளுக்கு முன்னர் நியூ கீனியிலிருந்து ஆசியாவிற்கு குடியேறிய மக்களாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இவ்வினமக்களைப் பற்றிய மேலும் சில செய்திகள் இங்கே.. http://lazacode.com/place-empire/negrito-history மலேசிய பூர்வ குடிகள் பற்றி பகிர்ந்து கொள்ள பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. வாய்ப்பு அமையும் போது அம்மக்கள் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றேன்.


தொடரும்....

No comments:

Post a Comment