Wednesday, December 31, 2003

Recollecting my teaching experiences (1997) - 3

உலகில் பிறக்கின்ற நாம் ஒவ்வொருவருமே ஒரு புதுமை. மற்றவர்களிடமிருந்து நம்மை பிரித்துக் காட்டுவதற்காகவென்றே பற்பல தனிப்பட்ட குணாதிசயங்களை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்றோம். அந்த வகையில் விஜியோடு ஒப்பிடும் போது மற்றொரு பெண் குழந்தையான புவனேஸ்வரி எதிர்மறையான குணங்களைக் கொண்டவளாகவே தோற்றமளிப்பாள்.



உருவத்தில் சிறியவள். அதிகமாக வாயைத்திறந்து பேசுவதே கிடையாது. வகுப்பிலும் சத்தம் வராது; எந்த பிரச்சனைகளும் அவளால் வகுப்பில் கிடையாது; ஆனால் மிக முக்கியமாக பாடத்திலும் கவனம் கொஞ்சமும் இருக்காது. அவளது உலகம் ஒரு வேறு பட்ட உலகம்.

பாடம் நடந்து கொண்டிருக்கும் போது புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். தானாகவே வந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே எனது பக்கத்தில் வந்து நின்று கொண்டு எனது கையைப் பிடித்துக் கொள்வாள். என்ன விஷயம் என்று கேட்டால் பதில் வராது. என்னைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்துக் கொள்வாள்.

முதலில் இவளது நடவடிக்கை எனக்கு சிரமமாகத்தான் இருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு எனது பாட நேரத்தில் அவளை எனது ஆசிரியர் மேசைக்கு அருகிலேயே அமர்த்திக் கொள்ள ஆரம்பித்தேன். அவளுக்கு ஆசிரியர் நடத்தும் பாடத்தை விட அவரது அன்பும் நெருக்கமும் தான் மிகவும் தேவையாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. The teacher has tremendous impact on the lives of the kids with whom they interact. ஒரு நாளில் சில மணி நேரங்கள் தான் நான் அவளது கண்களுக்குப் புலப்பட்டாலும் எனது செயல்கள், எனது நடவடிக்கைகள், நான் அவளிடம் நடந்து கொள்ளும் விதம் போன்றவை அவளை பாதிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை என்பதை என்னால் உணர முடிந்தது. அதிலும் பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பு என்ற ஒன்று இல்லாத நிலையில் இவ்வகை குழந்தைகளுக்கு ஆசிரியர்களே உலகமாகி விடுவது தான் நிதர்சனம்.

காலையில் நான் பள்ளிக்கு வரும் போது எனது கார் வருவதைப் பார்த்த உடனேயே ஓடி வருவாள். கார் கதவை திறப்பதற்குள் எனது பொருட்களை எனக்காக எடுத்து வரவேண்டும் என்பதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு நிற்பாள். என்னோடு கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரவேண்டும் என்பதில் கொள்ளை ஆசை. அவளை அப்போது என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் கால ஓட்டத்தில், அவளது சிந்தனைகள் இப்போது மாறி இருக்கலாம். ஆசைகள் மாறி இருக்கலாம். ஆனாலும் என்னை அவளால் மறந்திருக்க முடியாது என்பது நிச்சயம்!

Tuesday, December 30, 2003

Recollecting my teaching experiences (1997) - 2

ஆசிரியர் வேலை என்பது புனிதமான ஒரு பணி என்று பரவலாகச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இங்கு, அதுவும் இராமகிருஷ்ணா பள்ளியில் வேலை செய்ய ஆரம்பித்தபோது இதனை உணரமுடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டது போல ஆசிரமத்திலிருந்து எனது வகுப்பில் ஆறு குழந்தைகள் படித்து வந்தனர். அதில் விஜி ஒரு மாறு பட்ட குணம் உள்ள ஒரு பெண்.

9 வயது பெண் குழந்தையைப் போல இவள் இருக்க மாட்டாள். ஒரு பாடத்தை ஆரம்பித்து இரண்டு நிமிடம் முடிவதற்குள் அவள் ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பாள். இப்படித்தான் ஒரு நாள். மாணவர்களை எல்லாம் அழைத்து வைத்து ஒரு
மூலையில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தேன். (என்ன பாடம் என்று தெரியவில்லை. மறந்து விட்டது.) திடீரென்று மாணவர்கள் எல்லாம் பயத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்து திரும்பிப்பார்த்த நான் உண்மையிலேயே பயந்து விட்டேன். ஏறக்குறைய மூன்று அடி உயரம் உள்ள ஒரு ஜன்னலில்
ஏறிக் கொண்டிருந்தாள் விஜி. கதையில் அனைவரும் கவனமாக இருக்கும் போது பின்னால் சென்று மேஜை மேல் ஏறி ஜன்னலிலிருந்து ஏறிக் குதிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாள். இப்படிப் பட்ட சூழலில் பார்க்கின்ற நமக்கு எப்படி இருக்கும்? ஒரு வகையாக அவளை இறக்கி கீழே கொண்டு வந்து சேர்த்தேன்.

இவளது குறும்புகள் சில வேளைகளில் எல்லை மீறி விடும். பல முறை தொடர்ந்து இவள் கொடுக்கும் நச்சரிப்பால் மற்ற மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் குறை கூறியிருக்கின்றேன். ஆனால் படிப்படியாக ஒரு சில மாதங்களில் எனக்கு அவள் மேல் அலாதியான அன்பு ஏற்பட்டு விட்டது. அது எப்படி என்பது எனக்கே தெரியவில்லை.

வகுப்பில் மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடிய மாணவியாக ஒரு சில மாதங்களிலேயே அவள் மாறிவிட்டாள். ஆனாலும் அவளது தாங்க முடியாத குறும்புகள் மட்டும் சிறிதும் மாறவில்லை. அது அவளுக்குறிய தனித்துவம். அதனை மாற்றிக் கொள்ள அவள் விரும்பவில்லை போலும்.

ஆசிரியர் பயிற்சியின் போது படித்த பல உளவியல் முறைகளை நான் இவளிடம் பயன்படுத்தியிருக்கின்றேன். அனைத்திற்கும் சவாலாக இவளது செயல் அமைந்து விடும். ஆனால் அதிகமான மாற்றங்களை படிப்படியாக அவளிடத்தில் காண முடிவதாக மற்ற மாணவர்களே என்னிடம் சொல்வார்கள்.

நல்ல திறமை இருந்தாலும் ஆசிரமத்தில் வாழும் போது தனிப்பட்ட கவனிப்பு என்பது இவ்விதமான குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. பற்பல காரணங்களுக்காக பெற்றோர்களை இழந்த நிலையில் வாழ்கின்ற குழந்தைகள் இவர்கள். மற்றவர்கள் அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு
தங்களின் மேல் கவனம் வருமாறு செய்வதற்காக தன்னை அறியாமலேயே இம்மாதிரியான குழந்தைகள் பல வகை விஷயங்களை முயற்சி செய்கின்றனர். விஜியின் சேஷ்டைகள் அதில் புது விதம்.

Wednesday, December 24, 2003

Recollecting my teaching experiences (1997) - 1

கணினித் துறைக்கு வருவதற்கு முன் நான் ஆசிரியர் பயிற்சிக்காகப் படித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆசிரியராகவும் பணியாற்றினேன். பயிற்சியை முடித்தவுடன் எனக்கு பினாங்கிலேயே உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் வேலையைச் செய்வதற்கு அரசாங்கம் நியமித்திருந்தது. இது ஒரு தமிழ்பள்ளி. பினாங்கு (தீவு) மாநிலத்தில் மட்டும் மொத்தம் 7 தமிழ் பள்ளிகள் அப்போது இருந்தன. நான் ஆசிரியராக வேலைபார்த்த பள்ளியின் பெயர் இராமகிருஷ்ணா தமிழ் பள்ளி.

தமிழ் பள்ளி என்றால் இங்கு தமிழ் மாத்திரம் கற்றுக் கொடுக்கப்படும் என்பதல்ல. மலேசியாவைப் பொருத்தவரை மலாய், சீன, தமிழ் மொழிகளில் ஆரம்பப்பள்ளிகள் உண்டு. இப்பள்ளிகளில் அரசாங்கம் அங்கீகரித்த எல்லா பாடங்களும் போதிக்கப்படும். தமிழ் பள்ளி என்று சொல்லும் போது தமிழ்தான் முக்கியப் பாடமாகப் போதிக்கப்படும். 7 வயது முதல் 12 வயதுவரை உள்ள ணவர்கள் தான் தொடக்க நிலைப்பள்ளியில் பயில்வார்கள். பணிரெண்டு வயதிற்குப் பின்னர் இந்த மாணவர்கள் தேசியப்பள்ளிக்குச் செல்லவேண்டும். இங்கு மலாய் மொழிதான் முக்கிய பாடமொழியாக அமைந்திருக்கும். நான் வேலை செய்த இராமகிருஷ்ணா பள்ளிக்கு ஒரு சிறப்புண்டு. இந்தப் பள்ளியோடு சேர்ந்து இராமகிருஷ்ணா மண்டபமும் அதனால் நிர்வாகிக்கப்படும் குழந்தைகள் அநாதை ஆசிரமும் இங்கு இருந்தது. ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகள் (எல்லோரும் தமிழர்கள்) இந்த தொடக்கப்பள்ளிக்குத் தான் வருவார்கள். ஆசிரம குழந்தைகள் தவிர்த்து, மற்றவர்களும் சேர்ந்து படிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இந்தப்பள்ளி இயங்கி வருகின்றது.

இங்கு நான் ஆசிரியராக வேலை செய்த அந்த நாட்கள் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. எத்தனையோ இனிமையான நிகழ்வுகள். தோழமையான ஆசிரியர்கள், அன்பைப் பொழியும் மாணவர்கள், மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இப்படிப் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வந்தவுடனேயே எனக்கு வகுப்பு ஆசிரியர் என்ற பதவி கிடைத்து விட்டது. 42 மாணவர்கள் கொண்ட மூன்றாம் வகுப்பிற்கு ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு 9 வயது. வகுப்பில் ஆண் பெண் குழந்தைகள் சேர்ந்தே படிப்பார்கள். என்னுடைய வகுப்பில் இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த 6 குழந்தைகளும் இருந்தார்கள். இவர்களில் விஜி, புவனேஸ்வரி இரண்டு பேரையும் என்னால் நிச்சயமாக மறக்கமுடியாது. [இவர்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்வேன்.] காலையில் பள்ளி 7:45க்கு தொடங்கி விடும். மதியம் 1:10 அளவில் பள்ளி முடிந்து விடும். சில மாணவர்கள் அதற்குப் பிறகு மதியம் நடைபெறும் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்ள வருவார்கள்.

நான் அங்கு ஆசிரியராக இருந்த போது என்னுடன் வேலை பார்த்த சக ஆசிரியர்கள் கல்யாணி, சரஸ்வதி, சங்கரா, கலைச்செல்வி, ஜெயலெக்ஷ்மி, புஷ்பா, மகேஷ்வரி, சிவகாமி மற்றும் சிலர். இவர்களில் சிலர் இப்போது வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகிச் சென்று விட்டனர். வேலை முடிந்த பிறகு நாங்கள் பல முறை தமிழ் சினிமா படம் பார்க்கச் சென்றிருக்கின்றோம். படம் பார்ப்பதற்கு முன்னர் சுவையான உணவு சாப்பிடச் செல்வது வழக்கமாகிப் போனது. அதிலும் அடிக்கடி Dato Keremat சாலையில் இருக்கும் சீன சைவ உணவகத்தில் (இங்கு சோயாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சைவ கோழி, மீன், முட்டை போன்றவை புகழ்பெற்றவை) சாப்பிட்டு செல்ல மறப்பதில்லை. வேலை செய்கின்றோம் என்ற சிந்தனையே வராதவாறு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இந்த கால கட்டம் அமைந்திருந்தது.

Saturday, December 20, 2003

மலேசிய 'லா'

நான் ஜெர்மனிக்கு வந்த புதிதில் இந்திய தமிழர்களைச் சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் ஒரே மாதிரியான கேள்வியைக் கேட்க அவர்கள் தவறியதில்லை. "மலேசியத் தமிழர்கள் பேசும் போது இறுதில் 'லா' சேர்த்துக் கொள்வார்களாமே. அது ஏன்?" என்பது தான் அது.
இப்படிப்பட்ட இக்கட்டான மொழி சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்கும் போதெல்லாம் விளக்கமளிப்பது கடமையாகிவிடுகின்றது. ஆனாலும் என்னோடு பேசுபவர்கள் நான் இந்த சிறப்பு இணைப்பை பயன்படுத்துவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பர். அதற்குக் காரணம் இருக்கின்றது.


மலாய் மொழியில் 'லா' என்ற சொல்லின் பயன்பாடு மிக முக்கியமானது. வாக்கியம் முடியும் போது இது பயன்படுத்தப்படுகின்றது. கூறுகின்ற ஒரு வாக்கியத்திற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காகவும் பேசுகின்றவர்களுக்கிடையே அன்னியோன்னியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த இணைப்பு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஒரு மலாய் மொழி சொல் ஒன்று:

'Cepatlah' - cepat என்பது விரைவாக என்று பொருள்படும் . அதோடு lah சேரும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுக்கப்பட்டு உணர்வுகளும் சேர்ந்து வெளிப்படுவதாக அமைந்து விடுகின்றது.

மலேசியத் தமிழர்களின் உரையாடல்களில் இந்த சேர்க்கை சுவாரசியமான ஒன்று. சாதாரணமாகப் பேசும் போது எப்படி இந்த சொல் தமிழில் சேர்ந்து கொள்கின்றது என்று பாருங்கள்.


உதாரணம்:
1. என்னலா செய்றீங்க?
2. வாங்கலா.. போகலாம்!
3. சரிலா.. நானே முடிச்சிடறேன்.

இப்படி சர்வ சாதாரணமாக 'லா' வாக்கியங்களில் சேர்ந்து கொள்வதுதான் நடைமுறை உண்மை.

நான் தமிழ் மொழியை கல்லூரியில் தனி ஒரு பாடமாக எடுத்துப் பயின்றதால் மிகக் கவனமாக 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடுவேன். (ஆனாலும் அவ்வப்போது பிற மொழி கலப்பு சேர்ந்து விடுவதை முழுதாகத் தவிர்க்க முடிவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்) இப்போதெல்லாம் மலேசியா திரும்பும் போது புதிதாக சந்திக்கும் தமிழ் நண்பர்களிடம் பேசும் போது என் பேச்சுத் தமிழை வைத்து நான் தமிழகத்திலேயிருந்து வந்திருக்கின்றேனா அல்லது இலங்கைத் தமிழரா என்று என்னைக் கேட்ட சம்பவங்கள் பல உண்டு.
என்னைப்போல 'மிகக் கவனமாக' பேசுகின்ற தமிழர்கள் பலர் மலேசியாவில் இருக்கின்றனர். ஆக, கொஞ்சம் கவனம் வைத்து பேச ஆரம்பித்தால் 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடலாம்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களின் தனித் தன்மையோடு வருகின்ற 'லா' சேர்ந்த தமிழுக்கும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது!.

Friday, December 19, 2003

தோல் பாவை - Wayang Kulit



இந்தியர்களுக்கு நன்கு பரிச்சயமான இராமயண காப்பியம் மலாய்க்காரர்களே அதிகமாக வாழும் மலேசியாவிலும் மிகப் பிரபலமான ஒரு பழங்கதையாக மதிக்கப்பட்டு வருகின்றது என்பது மற்ற இடங்களில் வாழ்கின்ற தமிழர்கள் பலருக்கும் தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. இராமன் சீதையைப் பற்றிய இந்த காப்பியம் இந்து அரசர்களால் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டே தீபகற்ப மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டது.


இந்தக் கதையை, கற்றவர்கள் மற்றுமின்றி சாதாரண மக்களும் தெரிந்து வைத்திருக்குமளவுக்கு செய்த பெருமை தோல் பாவை என்று சொல்லப்படும் ஒரு வகை கலாச்சார விளையாட்டையே சாரும். இந்த விளையாட்டிற்கு Wayang Kulit என்பது மலாய் மொழிப் பெயர்.



பொம்மைகளைத் திரைக்குப் பின்னால் இருப்பவர் அசைத்துக் கொண்டிருக்க, கதையைப் பாடலாக மற்றொருவர் பாடிக் கொண்டிருப்பார். தோல் பொம்மையை அசைப்பவரை Dalang (டாலாங்) என்று சிறப்பாக அழைப்பார்கள். இவர் இந்த விளையாட்டில் கைதேர்ந்த விற்பன்னராக இருக்க வேண்டும். இந்த விளையாட்டிற்கென்று சில நியதிகளும் உண்டு. கதாநாயகன் மற்றும் ஏனைய நல்ல கதாமாந்தர்கள் வலது பக்கத்தில் காட்சியளிப்பார்கள். வில்னன்கலும் வில்லிகளும்:-) இடது பக்கத்தில் காட்சியளிப்பார்கள்.

மலேசியாவில் குறிப்பாக கிளந்தான் மாநிலத்தில் தான் இந்த வகை விளையாட்டை அதிகமாகக் காணமுடியும். உள்நாட்டில் இருப்பவர்களுக்கு இப்போதெல்லாம் இம்மாதிரியான பழங்கால கலாச்சார விளையாட்டுக்களில் ஆர்வம் ருப்பதில்லை. அதனால் வளர்ச்சியின்றி இந்தக் கலை படிப்படியாக மறைந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அதோடு தீவிரவாத இஸ்லாமிய சட்டத்தை நிறுவ முயன்று கொண்டிருக்கும் கிளந்தான் மாநில அரசாங்கம் (கிளந்தான் திரங்காணு ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் இஸ்லாமிய தீவிரவாத கட்சி ஆட்சி அமைத்திருக்கின்றது) இஸ்லாமிய சமையத்துக்குப் புறம்பான பல விஷயங்கள் இந்த வகை கதைகளின் வழி மக்களுக்குச் செல்வதால் இதனைத் தடுக்க வேண்டும் என்று 1980ல் சட்டம் இயற்றியது. அதனால் சுற்றுப்பயணிகளுக்காக மட்டுமே தற்சமயம் ஒரு சில இடங்களில் Wayang Kulit காட்டப்படுகின்றது.

Tuesday, December 9, 2003

National service


இன்றைய ஸ்டார் (http://www.thestar.com.my) தலையங்க செய்திகளில் ஒன்றாக வந்திருக்கும் மலேசிய தேசிய சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோரைப் பற்றிய தகவலைப் படித்தபோது ஒரு வாரம் நான் கெடா மாநிலக் காடுகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் பயிற்சி தான் ஞாபகத்திற்கு வந்தது.

அது ஒரு வகையில் சற்று எளிமையான ஒரு பயிற்சிதான். கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக இந்தப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்பது அப்போதிருந்த நிபந்தனை. இந்தப் பயிற்சியைப் பற்றி முதலிலேயே கேள்விப்பட்டிருந்ததால் எனது பெயர் இந்த பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால் கடவுள் காலை வாறி விட்டு விட்டார். என் பெயரும் சேர்க்கப்பட்டு நானும் ஒரு வார காலம் இந்த தீவிர பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று அழைப்பு வந்திருந்தது.

பயிற்சியின் ஆரம்பத்திலேயே விதிமுறைகளை எங்களுக்குத் தெரிவித்து விட்டனர். பெண்கள் எந்த வகையான அலங்காரப் பொருட்களையும் உபயோகப்படுத்த்தக் கூடாது, கண்ணாடியில் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் இதில் அடங்கிய கட்டளைகள். யாராவது அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை வைத்திருந்த்கால் அவற்றை வீசிவிடவேண்டும் என்று எங்கள் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த ஒரு மலாய் பெண் யாருக்கும் தெரியாமல் ஒரு Fair & Lovely face cream வைத்திருந்தாள். இதை எப்படியோ கண்டு பிடித்து விட்ட அந்த அதிகாரி, குழுவில் இருந்த எங்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கினார். தண்டனை என்ன தெரியுமா? கழுத்தளவு நீர் தேங்கிய ஒரு குளத்தில் நாங்கள் 30 நிமிடம் நிற்க வேண்டும் என்பது தான். இந்த குளம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒன்று; சேர் நிரம்பிய குளம். இதில் 30 நிமிடங்கள் நிற்பதை
இப்போது கற்பனை செய்து பார்த்தாலும் சகிக்க முடியவில்லை.



இப்படி சுவாரசியமான பல தண்டனைகளை இந்த பயிற்சியின் போது அனுபவித்திருக்கின்றேன். மலையிலிருந்து குதிப்பது, மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குக் கயிரைக் கட்டி அதிலேயே நடப்பது; நடுக் கடலில் தனியாக படகு ஓட்டிச் செல்வது; இப்படிப் பல பயங்கர அனுபவங்கள். இந்த பயிற்சியையெல்லாம் முடித்து விட்டு 7 நாட்களுக்குப் பிறகு திரும்பும் போது எனது பொருட்களை எல்லாம் காரில் வைத்து விட்டு எனது முகத்தைக் கார் கண்ணாடியில் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகி
விட்டது. என்னையே எனக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு நான் உருமாறியிருந்தேன்.

பல வகையில் எனக்கு வெறுப்பினை இந்தப் பயிற்சி உண்டாக்கியிருந்தாலும், அதற்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட மனோ தைரியத்தை நான் நிச்சயமாக உணர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். மலேசிய மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி நிச்சயமாக பல வகையில் உதவும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை!.

Sunday, December 7, 2003

Flood havoc in Penang

கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் மழை தூரல் அவ்வப்போது விடாமல் இருந்து கொண்டிருக்கின்றது. இங்கிருப்பது போலவே மலேசியாவிலும் நவம்பர் டிசம்பர் மாதங்கள் மழை மாதங்கள்தான். இந்த மாதங்களில் சில வேளைகளில் ஒவ்வொரு நாளும் விடாமல் மழை பெய்யும். பினாங்கில் இந்த மாதங்களில் வெள்ளம் வந்து மக்கள் சிரமப்படுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக Jalan P.Ramlee எனச் சொல்லப்படும் சாலையிலும் அதன் அருகாமையில் உள்ள இடங்களிலும் வெள்ளம் பெருகி விடுவது வாடிக்கை.

எனது பள்ளித் தோழி சீதாவின் வீடு இந்தப் பகுதியில் தான் இருக்கின்றது. டிசம்பர் மாதம் வந்து விட்டால் அவள் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் முன் ஜாக்கிரதையாக மேற்பகுதிழில் பாதுகாப்பாக எடுத்து வைத்து விடுவார்கள். இல்லையேல் ஒரு அடி உயரத்திற்குத் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் இந்தப் பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விடும்.

வெள்ளத்தைப் பற்றி ஒவ்வொரு ஆண்டும் செய்திகளின் வழியும் என் தோழியின் வழியும் கேள்விப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பினை நான் நேரடியாக உணர்ந்ததில்லை. என் வீடு இருக்கும் பகுதி உயர்ந்த நிலப்பகுதி என்பதால் நீர் தேங்கி வெள்ளம் வந்து அதில் விளையாடும் வாய்ப்பு இன்றளவும் கிட்டவில்லை. மழை விடாமல் பெய்யும் போது அதில் விளையாடுவது தான் நாம் எல்லோருக்குமே பிடிக்குமே. எனக்கும் அப்படித்தான். அப்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் வெள்ளம் வந்து அதனால் சிலர் வசதிகளை இழந்து சிரமப்படுவதைக் கேள்விப்படும் போது சங்கடமாகப் போய்விடுவதுண்டு.

P.Ramlee சாலைப் பகுதியில் வெள்ளம் சில வேளைகளில் ஒரு வாரத்திற்கும் கூட வற்றாமல் இருக்கும். நீர் மட்டம் உயர்ந்து விடுவதால், மக்கள் படகுகளைப் பயன்படுத்தித் தான் வெளி இடங்களுக்குச் செல்ல முடியும். இதை சீதா சொல்லும் போது எனக்கும் அப்படி படகில் ஏறி சுற்றி வரவேண்டும் என்று தோன்றும்...:-)


சென்ற முறை மலேசியா சென்றிருந்தபோது எனது தோழியிடம் வெள்ளத்தை பற்றி விசாரித்தேன். இப்போதெல்லாம் மழை விடாமல் பெய்தாலும் வெள்ளம் வருதில்லை என்று சொன்னாள். சாலைகளைப் புணரமைப்புச் செய்து நீர் செல்லும் வழிகளை மாற்றி அமைத்து விட்டமையால் இப்போதெல்லாம் வெள்ளம் வருவதில்லை என சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நல்ல செய்திதான். ஆனால் P.Ramlee சாலை வாழ் மக்களுக்குக் கிடைக்கும் இலவச படகுச் சவாரி இல்லாமல் போய்விட்டது தான் ஒரு குறை, இல்லையா..?? ..:-)

Tuesday, December 2, 2003

Durian - King of the fruit



நேற்று மதிய உணவிற்கு நண்பர்களோடு சென்றிருந்தபோது மலேசியாவைச் சுற்றிப் பார்க்க எது உகந்த மாதம் என்ற கேள்வி நண்பர்களிடமிருந்து எழுந்தது. ஒவ்வொரு மாதங்களைப் பற்றியும் அதன் தன்மைகள் சீதோஷ்ண நிலை போன்ற வற்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வரும் போது ஜூலை மாதம் தொடங்கி அக்டோ பர் வரை மலேசியாவிற்குச் சென்றால் உள்நாட்டுப் பழங்களையும் சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி வைத்தேன். அப்படி என்ன வித்தியாசமான பழங்கள் உங்கள் நாட்டில் என்று கேட்க ஆரம்பித்தனர் என் ஜெர்மானிய நண்பர்கள். பாவம். இவர்கள் விடுமுறைக்கு பிரான்ஸ் எல்லையைக் கடப்பதே கூட அதிசயம் தான். அப்படி இருக்கும் போது ஆசிய நாடுகளின் சிறப்புக்களை அதுவும் மலேசியாவின் தனிச் சிறப்பைச் சொல்ல வேண்டியது எனது கடமையல்லவா..:-)

விடுமுறை எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடனேயே எனக்கும் கூட பல வேளைகளில் ஆகஸ்டு மாதம் மலேசியா போகலாமே என்று நினைக்க வைக்கும் அளவிற்கு இந்தப் பழங்களுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு. டுரியான் பழத்தின் சுவைக்கு ஈடு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். (யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்..:-) ) அதனை சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத் தானே அதன் அருமை தெரியும்.


புதிதாக இந்தப்பழத்தைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் பழம் முதலில் ஒரு வித பயத்தை கட்டாயமாக ஏற்படுத்தி விடும். அதன் தோற்றம் அப்படி. அதற்கும் மேலாக அதன் வாசம். முள் நிறைந்த இந்த பழத்தை கையில் தூக்கிப் பிடிப்பதும் கூட சிரமமான ஒரு வேலைதான். ஆனால் பழத்தை கஷ்டப்பட்டு வெட்டு சாப்பிடும் போது இந்த அத்தனை துன்பங்களும் பஞ்சாகிப் போய்விடுவதுதான் உண்மை. இந்தப் பழத்தை வெட்டி உள்ளே இருக்கும் பழத்தை எடுப்பது கூட ஒரு தனிக்கலை; எல்லோராலும் அதனைத் திறமையாகச் செய்ய முடியாது. இன்றளவும் நான் அதில் முழுமையாக திறமை அடையவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.


டுரியான் பழங்களைத் தனியாக சாப்பிடுவது போல சமைத்தும் கூட உண்ணலாம். இதற்கான பல சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனாலும் எனக்கு எப்போதும் இந்த பழத்தை சமைக்காமல் உண்பதற்குத்தான் பிடிக்கும். ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே போதும். மதிய உணவே தேவையில்லை. அவ்வளவு பெரிதாக இந்தப் பழங்கள் இருக்கும். இந்த டுரியான் பழங்களைப் பற்றிய பல தகவல்கள் அடங்கிய வலைப்பக்கங்க்ளை உங்களுக்காக இங்கு பட்டியலாக்கியிருக்கின்றேன்.
http://www.ecst.csuchico.edu/~durian/book.htm (Book Gallery)
http://www.ecst.csuchico.edu/~durian/rec/recipe.htm (Recipe)
http://www.durian.net/ (Info center)
http://agrolink.moa.my/comoditi/durian/durian.html(General info)

அடுத்த முறை மலேசியா சென்றால் அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சென்றால் கட்டாயமாக டுரியான் பழத்தை சாப்பிட்டுப் பாருங்களேன். இறைவனின் படைப்பில் இந்தப் பழமும் ஒரு உன்னதமான வித்தியாசமான ஒரு படைப்பு தான்!..:-)