Wednesday, December 31, 2003

Recollecting my teaching experiences (1997) - 3

உலகில் பிறக்கின்ற நாம் ஒவ்வொருவருமே ஒரு புதுமை. மற்றவர்களிடமிருந்து நம்மை பிரித்துக் காட்டுவதற்காகவென்றே பற்பல தனிப்பட்ட குணாதிசயங்களை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்றோம். அந்த வகையில் விஜியோடு ஒப்பிடும் போது மற்றொரு பெண் குழந்தையான புவனேஸ்வரி எதிர்மறையான குணங்களைக் கொண்டவளாகவே தோற்றமளிப்பாள்.



உருவத்தில் சிறியவள். அதிகமாக வாயைத்திறந்து பேசுவதே கிடையாது. வகுப்பிலும் சத்தம் வராது; எந்த பிரச்சனைகளும் அவளால் வகுப்பில் கிடையாது; ஆனால் மிக முக்கியமாக பாடத்திலும் கவனம் கொஞ்சமும் இருக்காது. அவளது உலகம் ஒரு வேறு பட்ட உலகம்.

பாடம் நடந்து கொண்டிருக்கும் போது புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். தானாகவே வந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே எனது பக்கத்தில் வந்து நின்று கொண்டு எனது கையைப் பிடித்துக் கொள்வாள். என்ன விஷயம் என்று கேட்டால் பதில் வராது. என்னைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்துக் கொள்வாள்.

முதலில் இவளது நடவடிக்கை எனக்கு சிரமமாகத்தான் இருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு எனது பாட நேரத்தில் அவளை எனது ஆசிரியர் மேசைக்கு அருகிலேயே அமர்த்திக் கொள்ள ஆரம்பித்தேன். அவளுக்கு ஆசிரியர் நடத்தும் பாடத்தை விட அவரது அன்பும் நெருக்கமும் தான் மிகவும் தேவையாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. The teacher has tremendous impact on the lives of the kids with whom they interact. ஒரு நாளில் சில மணி நேரங்கள் தான் நான் அவளது கண்களுக்குப் புலப்பட்டாலும் எனது செயல்கள், எனது நடவடிக்கைகள், நான் அவளிடம் நடந்து கொள்ளும் விதம் போன்றவை அவளை பாதிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை என்பதை என்னால் உணர முடிந்தது. அதிலும் பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பு என்ற ஒன்று இல்லாத நிலையில் இவ்வகை குழந்தைகளுக்கு ஆசிரியர்களே உலகமாகி விடுவது தான் நிதர்சனம்.

காலையில் நான் பள்ளிக்கு வரும் போது எனது கார் வருவதைப் பார்த்த உடனேயே ஓடி வருவாள். கார் கதவை திறப்பதற்குள் எனது பொருட்களை எனக்காக எடுத்து வரவேண்டும் என்பதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு நிற்பாள். என்னோடு கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரவேண்டும் என்பதில் கொள்ளை ஆசை. அவளை அப்போது என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் கால ஓட்டத்தில், அவளது சிந்தனைகள் இப்போது மாறி இருக்கலாம். ஆசைகள் மாறி இருக்கலாம். ஆனாலும் என்னை அவளால் மறந்திருக்க முடியாது என்பது நிச்சயம்!

No comments:

Post a Comment