Sunday, December 7, 2003

Flood havoc in Penang

கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் மழை தூரல் அவ்வப்போது விடாமல் இருந்து கொண்டிருக்கின்றது. இங்கிருப்பது போலவே மலேசியாவிலும் நவம்பர் டிசம்பர் மாதங்கள் மழை மாதங்கள்தான். இந்த மாதங்களில் சில வேளைகளில் ஒவ்வொரு நாளும் விடாமல் மழை பெய்யும். பினாங்கில் இந்த மாதங்களில் வெள்ளம் வந்து மக்கள் சிரமப்படுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக Jalan P.Ramlee எனச் சொல்லப்படும் சாலையிலும் அதன் அருகாமையில் உள்ள இடங்களிலும் வெள்ளம் பெருகி விடுவது வாடிக்கை.

எனது பள்ளித் தோழி சீதாவின் வீடு இந்தப் பகுதியில் தான் இருக்கின்றது. டிசம்பர் மாதம் வந்து விட்டால் அவள் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் முன் ஜாக்கிரதையாக மேற்பகுதிழில் பாதுகாப்பாக எடுத்து வைத்து விடுவார்கள். இல்லையேல் ஒரு அடி உயரத்திற்குத் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் இந்தப் பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விடும்.

வெள்ளத்தைப் பற்றி ஒவ்வொரு ஆண்டும் செய்திகளின் வழியும் என் தோழியின் வழியும் கேள்விப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பினை நான் நேரடியாக உணர்ந்ததில்லை. என் வீடு இருக்கும் பகுதி உயர்ந்த நிலப்பகுதி என்பதால் நீர் தேங்கி வெள்ளம் வந்து அதில் விளையாடும் வாய்ப்பு இன்றளவும் கிட்டவில்லை. மழை விடாமல் பெய்யும் போது அதில் விளையாடுவது தான் நாம் எல்லோருக்குமே பிடிக்குமே. எனக்கும் அப்படித்தான். அப்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் வெள்ளம் வந்து அதனால் சிலர் வசதிகளை இழந்து சிரமப்படுவதைக் கேள்விப்படும் போது சங்கடமாகப் போய்விடுவதுண்டு.

P.Ramlee சாலைப் பகுதியில் வெள்ளம் சில வேளைகளில் ஒரு வாரத்திற்கும் கூட வற்றாமல் இருக்கும். நீர் மட்டம் உயர்ந்து விடுவதால், மக்கள் படகுகளைப் பயன்படுத்தித் தான் வெளி இடங்களுக்குச் செல்ல முடியும். இதை சீதா சொல்லும் போது எனக்கும் அப்படி படகில் ஏறி சுற்றி வரவேண்டும் என்று தோன்றும்...:-)


சென்ற முறை மலேசியா சென்றிருந்தபோது எனது தோழியிடம் வெள்ளத்தை பற்றி விசாரித்தேன். இப்போதெல்லாம் மழை விடாமல் பெய்தாலும் வெள்ளம் வருதில்லை என்று சொன்னாள். சாலைகளைப் புணரமைப்புச் செய்து நீர் செல்லும் வழிகளை மாற்றி அமைத்து விட்டமையால் இப்போதெல்லாம் வெள்ளம் வருவதில்லை என சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நல்ல செய்திதான். ஆனால் P.Ramlee சாலை வாழ் மக்களுக்குக் கிடைக்கும் இலவச படகுச் சவாரி இல்லாமல் போய்விட்டது தான் ஒரு குறை, இல்லையா..?? ..:-)

No comments:

Post a Comment