Tuesday, December 9, 2003

National service


இன்றைய ஸ்டார் (http://www.thestar.com.my) தலையங்க செய்திகளில் ஒன்றாக வந்திருக்கும் மலேசிய தேசிய சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோரைப் பற்றிய தகவலைப் படித்தபோது ஒரு வாரம் நான் கெடா மாநிலக் காடுகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் பயிற்சி தான் ஞாபகத்திற்கு வந்தது.

அது ஒரு வகையில் சற்று எளிமையான ஒரு பயிற்சிதான். கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக இந்தப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்பது அப்போதிருந்த நிபந்தனை. இந்தப் பயிற்சியைப் பற்றி முதலிலேயே கேள்விப்பட்டிருந்ததால் எனது பெயர் இந்த பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால் கடவுள் காலை வாறி விட்டு விட்டார். என் பெயரும் சேர்க்கப்பட்டு நானும் ஒரு வார காலம் இந்த தீவிர பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று அழைப்பு வந்திருந்தது.

பயிற்சியின் ஆரம்பத்திலேயே விதிமுறைகளை எங்களுக்குத் தெரிவித்து விட்டனர். பெண்கள் எந்த வகையான அலங்காரப் பொருட்களையும் உபயோகப்படுத்த்தக் கூடாது, கண்ணாடியில் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் இதில் அடங்கிய கட்டளைகள். யாராவது அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை வைத்திருந்த்கால் அவற்றை வீசிவிடவேண்டும் என்று எங்கள் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த ஒரு மலாய் பெண் யாருக்கும் தெரியாமல் ஒரு Fair & Lovely face cream வைத்திருந்தாள். இதை எப்படியோ கண்டு பிடித்து விட்ட அந்த அதிகாரி, குழுவில் இருந்த எங்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கினார். தண்டனை என்ன தெரியுமா? கழுத்தளவு நீர் தேங்கிய ஒரு குளத்தில் நாங்கள் 30 நிமிடம் நிற்க வேண்டும் என்பது தான். இந்த குளம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒன்று; சேர் நிரம்பிய குளம். இதில் 30 நிமிடங்கள் நிற்பதை
இப்போது கற்பனை செய்து பார்த்தாலும் சகிக்க முடியவில்லை.



இப்படி சுவாரசியமான பல தண்டனைகளை இந்த பயிற்சியின் போது அனுபவித்திருக்கின்றேன். மலையிலிருந்து குதிப்பது, மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குக் கயிரைக் கட்டி அதிலேயே நடப்பது; நடுக் கடலில் தனியாக படகு ஓட்டிச் செல்வது; இப்படிப் பல பயங்கர அனுபவங்கள். இந்த பயிற்சியையெல்லாம் முடித்து விட்டு 7 நாட்களுக்குப் பிறகு திரும்பும் போது எனது பொருட்களை எல்லாம் காரில் வைத்து விட்டு எனது முகத்தைக் கார் கண்ணாடியில் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகி
விட்டது. என்னையே எனக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு நான் உருமாறியிருந்தேன்.

பல வகையில் எனக்கு வெறுப்பினை இந்தப் பயிற்சி உண்டாக்கியிருந்தாலும், அதற்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட மனோ தைரியத்தை நான் நிச்சயமாக உணர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். மலேசிய மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி நிச்சயமாக பல வகையில் உதவும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை!.

No comments:

Post a Comment