Friday, November 29, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 11



சாலையின் பெயர் தமிழிலும் மலாய் மொழியிலும்.

மலேசியாவின் கேரித் தீவில் நான் எடுத்த ஒரு புகைப்படம் இது. ஒரு சாலையின், பெயர் தமிழிலும் மலாய் மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றது.  லோரோங் என்பதற்கு சந்து என்று தமிழில் பொருள் சொல்லலாம்.  இங்கு லோரோங் என்பதில் ங் புள்ளியில்லாமல் இருக்கின்றது :-)

மலேசியாவில் தமிழில் சாலை பெயர் வேறு தீவுகளிலோ பகுதிகளிலோ நான் பார்த்ததில்லை. இத்தீவில் மட்டும் இன்னமும் தமிழில் சாலை பெயர் போடப்பட்டிருப்பது ஒரு முக்கியமான தகவல் தானே! செம்பனை தோட்டத் தொழிலார்களாக காடுகளில் பணி செய்ய 1930களில் தென் தமிழகத்திலிருந்து அதிலும் குறிப்பாக நாமக்கல் பகுதியிலிருந்து வந்த பல தமிழர்கள் அவர்களின் வாரிசுகள் இன்னமும் இத்தீவில் இருக்கின்றார்கள்.

Thursday, November 28, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 10


செயிண்ட் அன் தேவாலயம்

பினாங்கின் புக்கிட் மெர்தாஜம் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் இது. மலேசியா மட்டுமன்றி சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம் இது. ஆண்டு தோறும் ஜூலை மாத்த்தில் நடைபெறும் ஆலயத்திருவிழாவில் கலந்து கொள்ள பல்லாயிரம் மக்கள் புனிதயாத்திரை செய்து வந்து கொள்வர். கிறிஸ்துவ சமயத்தவர் என்று மட்டுமல்லாமல் தாவோ, புத்த, ஹிந்து மத்தினரும் இந்த புனித யாத்திரயில் வந்து கலந்து கொள்வர்.

1846ம் ஆண்டில் கட்டப்பட்டது இந்த தேவாலயம். காலணித்துவ ஆட்சியின் போது இப்பகுதியில் ஆங்கிலேயர்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுவோர் அதிகரிக்க ஆரம்பித்த வேளையில் செயின் அன் மேரி மாதாவிற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த தேவாலயம் அமைந்திருப்பது ஒரு மலைப்பகுதி. இங்கே பெருங்கற்கால பாறை எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் ஒரு செய்தி.

இந்த திருவிழாவை விளக்கும் இரண்டு விழியப் பதிவுகள்:
http://www.youtube.com/watch?v=AIpfPfrwpvQ
http://www.youtube.com/watch?v=pmmlM7eatRc

சுபா

Tuesday, November 26, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 9



பூமாலைகளின் வரிசை.

இந்தப்படம் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒன்று. மாலையில் அங்கு உலவிக் கொண்டிருந்த வேளை கோயில்களுக்கு முன்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் விற்பனையாளர்கள் வகை வகையாகத் தயாரித்து தொங்க வைத்திருக்கும் பூமாலைகளை நன்கு பார்க்க முடியும். மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தோமென்றால் சாமந்திப் பூவிலும் ரோஜாவிலும் மல்லிகையிலும் என மட்டுமே உருவாக்கபப்டும் மாலைகளைப் பார்க்க முடியும். இன்றோ, தமது கற்பனைத் திறனைப் புகுத்தி மாலை கட்டுபவர்கள் விதம் விதமான வடிவங்களில் மலர்களையும் இலைகளையும் கொண்டு மாலைகள் தயாரிக்கின்றனர்.  மாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற மலர்களும் கூட ஆர்க்கிட், துளசி இலைகள், கர்னேஷன் மலர்கள் என்று பலதரப்பட்டவையாக இருக்கின்றன. மாலை கட்டும் பணிகளை தமிழர்களே செய்கின்றனர். என் அனுபவத்தில் சீனர்களோ மலாய் இனத்தவரோ மாலைகள் கட்டி விற்பனை செய்வதை மலேசியாவில் இதுவரை நான் பார்த்ததில்லை.

மாலைகள் ஹிந்து சமயத்தவர்கள் ஆலயத்திற்கும் வீட்டு விஷேஷங்களுக்கும் பயன் படுத்துவது என்பது ஒரு புறமிருக்க பல்லினமக்கள் வாழும் மலேசியாவில் மாலைகள் மற்ற இனத்தோராலும் பல்வேறு சடங்குகளிலும் வைபவங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றே. புத்த மதத்தை பின்பற்றும் சீனர்கள் தங்கள் வீட்டு வழிபாட்டிற்கும் ஆலய வழிபாட்டிற்கும், மலாய் இனத்தோர் பொது நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களைக் கௌரவிக்க என்பதற்காகவும் மாலைகளை வாங்குகின்றனர்.  மாலைகள் மலேசிய சூழலில் மக்கள் வாழ்க்கையில் அழகு சேர்க்கும் அணிகலனாக இணைந்து விட்டது!.

மேலும் சில படங்கள்..









சுபா

Sunday, November 24, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 8


குவாலாலம்பூரில் உள்ள ப்ரிக் ஃபீல்ட்ஸ் பகுதி இது.

இதற்கு லிட்டல் இந்தியா என்ற பெயரும் உள்ளது. சென்னை ரங்கநாதன்ஸ்ட்ரீட் போல தமிழர்களின் ஆடை அணிகலன்கள், உணவுக் கடைகள் என் நிறைந்திருக்கும் பகுதி இது. இப்பகுதியில் உள்ள ஒரு சாலையில் வரிசையாக கோயில்கள் உள்ளன. கோட்டூர்சாலை முருகன் கோயில் பிரதானமாக இருக்க ஹனுமார் கோயில், முனீஸ்வரர் கோயில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் என வரிசையாக 3 கோயில்களும் இங்கேயே அமைந்திருக்கின்றன. ஒரு கோயிலுக்கு வருபவர்கள் அடுத்தடுத்து ஏனைய ஆலயங்களுக்கும் சென்று வரும் வகையில் இப்படி ஒரு அமைப்பு உருவாக்கியிருக்கின்றனர். தற்சமயம் முனீஸ்வரர் கோயில், கிருஷ்ணர் கோயில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கோயிலில் மக்கள் நின்று வழிபாடு செய்து கொண்டிருப்பதை இந்தப் படத்தில் காணலாம்.

சுபா

Friday, November 22, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 7



அறுவடை நடந்து கொண்டிருக்கும் நேரம். மழை பெய்து  நெல் வயல்களில் நீர் தேங்கிக் கிடக்கின்றது. அறுவடை செய்ய உழவர்கள் பயன்படுத்திய ட்ராக்டர், நெல் அறுவடை செய்ததில் வயலில் போட்டு வைத்த கோலம் தெரிகின்றது.

நான் நவம்பர்  மாதம் முதல் வாரம் பினாங்கின் புக்கிட் மெர்த்தாஜம் பகுதியில் இருந்த வேளையில் பதிவாக்கிய புகைப்படம் இது.

சுபா

Wednesday, November 20, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 6

இயற்கை காட்சிகளை மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தால் மலேசிய உணவுகளை மறந்து விடுவோம். இன்று மலேசிய உணவு ஒன்றின் படத்தை பகிர்ந்து கொள்கிறேன்.



இதன் பெயர் கெத்துப்பாட்.  மலேசியாவின் அனைத்து மானிலங்களிலும் கிடைக்கும் ஒரு பலகார வகை இது. காலை உணவுக்கும் சரி மாலை நேர தேனீர் உணவுக்கும் சரி, இந்த கெத்துப்பாட் மக்கள் உணவு பழக்கத்தில் இடம்பெறும் ஒன்றாக இருக்கின்றது.

தென்னை ஓலைக்குள் சமைத்த சாதத்தை வைத்து அதில் வெவ்வேறு விதமான கலவைகளை இணைத்து வைப்பது வழக்கம். இந்தக் கெத்துபபட்டில் இனிப்பு கெத்துப்பாட்டும் உண்டு. காரமாண கெத்துப்பாட்டும் உண்டு. இனிப்பான கெத்துப்பாட் தேங்காய் ஏலக்காய் சக்கரை சேர்த்து கலந்து வைத்து தயாரிப்பது. காரமானவை அசைவமாகவே இருக்கும். கடல் உணவு, இறைச்சி வகைகள் என்ற வித்தியாசத்தில் இது இருக்கும்.

தென்னை ஓலைக்குள் உணவுக் கலவையை  வைத்து பின்னி  அதனைக் கரி அடுப்பு ஏற்றி அதில் வாட்டி எடுப்பார்கள்.  சுவை.. ஒவ்வொருவரும் சுவைத்துப் பார்த்துத் தான் சொல்ல வேண்டும். :-)

சுபா

Saturday, November 16, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 5



ஹோர்ன்பில் (Hornbill) பறவை.  மலேசியாவின்  தீவுகள் பலவற்றில் இவை நிறைந்து காணப்படும். இவற்றைக் காண பறவைகள் பூங்காவிற்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. மலேசியாவில் மரங்களும் காடுகளும் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இப்பறவைகள் காணப்படும். சென்ற முறை மலேசியா பயணம் சென்றிருந்த போது வீடியோ பதிவு ஒன்றும் செய்திருந்தேன்.
அதை யூடியூபில் இங்கே காணலாம்.
http://www.youtube.com/watch?v=0_P2F5SXicg

சுபா

Thursday, November 14, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 4



பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  கோயில் அடிவாரப் பகுதி. கீழே விநாயகர் கோயில், நாகர், இடும்பன் கோயில்கள் இருக்கின்றன. புதிதாக பிரமாண்டமான சிவபெருமான் சிலையை வடித்திருக்கின்றார்கள். 18ம் நூற்றாண்டிலேயே இங்கு முருகன் கோயில் அமைந்திருந்தமைக்கான தடயங்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய 250 வருடங்கள் பழமை வாய்ந்த, சிறிய வேல் ஏந்தி நிற்கும் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு பொதுமக்கள் சாதாரணமாகச் செல்ல முடியாது. அனுமதி பெற்று மட்டுமே செல்ல முடியும். பின்னர் 19ம் நூற்றாண்டு வாக்கில் சற்று இடம் மாற்றி தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஆங்கிலேய அரசு கொடுத்த நிலத்தில் கோயிலைக் கட்டினார்கள் இங்குள்ள தமிழ் மக்கள். சென்ற ஆண்டு மலையின் மேலே பிரமாண்டமான கோயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 512 படிகளைக் கடந்து மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் பாலதண்டாயுதபாணியைத் தரிசிக்க!

சுபா

Wednesday, November 13, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 3



கால் நடை வளர்ப்பு மலேசியாவின் பெரிய நகரங்கள் தவிர்த்து ஏனைய எல்லா பகுதிகளிலும் உண்டு. கோழிகள், வான்கோழிகள் வளர்ப்பதை மலேசிய கிராமப்புறங்களில் பரவலாகக் காணலாம். இளம் வயதில் வான் கோழிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பயமாக இருக்கும். கடித்து விடும் என்று யாரோ சொல்ல அதுவே அப்போது மனதில் பதிந்து  இருந்தது.  கோழிகளைப் போலவே வான்கோழிகளுக்கும் மலேசியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில்.

இந்தப் படத்தை கேரித் தீவில் ஒரு கிராமத்தில் புகைப்படமாக்கினேன்.

Tuesday, November 12, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 2



மலேசிய தலைநகர் குவாலாலம்பூர் - ஒரு கட்டிடத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். வர்த்தக நிறுவனங்களின் வானை எட்டித் தொட்டு நிற்கும் கட்டிடங்களுக்கிடையே வெள்ளி  நிறத்திலே காட்சியளிக்கும் கண்ணாடிகளாலும் இரும்பினாலும் கட்டப்பட்ட ட்வின் டவர் ப்ரமாண்டமாக நிற்பதைக் காணலாம். பகலில் ஓர் அழகாகவும் இரவில் வேறொரு காட்சியாகவும் தென்படுவதை நேரில் பார்த்து தான் ரசிக்க வேண்டும்.

Monday, November 11, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 1



இப்படத்தில் Kampung Tan Sri Manickavasagam  என்று ஒரு பெயர் குறிப்பு உள்ளதைக் காணலாம். கேரித் தீவில் எடுக்கப்பட்ட படம் இது.   Kampung (Kg)  என்பது கிராமம் என்பதைக் குறிக்கும். டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் (MIC) மலேசிய இந்தியர் காங்கிரஸின் 6 வது தலைவராக இருந்தவர்; தமிழர்.  இவரது பெயரில் கேரித் தீவில் ஒரு கிராமம் அமைந்திருக்கின்றது. இவர் பெயரில் மலேசியாவின் சில மானிலங்களில் சாலைகளும் உள்ளன. செம்பனைத் தோட்டம் நிறைந்த இத்தீவு பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறமாகத் திகழ்கின்றது.

சுபா