Sunday, October 20, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 28

இத்தொடரிற்கு நீண்ட இடைவெளியாகிவிட்டது.

அடுத்த வாரம் மலேசியா செல்கின்றேன்.

அந்த இனிய சிந்தனை மனதை ஆக்கிரமித்திருப்பதில் இந்தத் தொடர் பற்றிய சிந்தனை நினைவில் வந்து எட்டிப் பார்த்ததில் லங்காவியில் என்னைக் கவர்ந்த விஷயங்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற யோசனையில் இப்பதிவு.

மலாய் இன மக்களும் தாய்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களும் மட்டுமே என இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த லங்காவி இப்போது உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா தலமாக ஆகி விட்டது. ஐரோப்பியர்கள் சிலர் இங்கேயே தங்கி ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் என நடத்துகின்றனர். ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் தேவையறிந்து, அதே சமயம் எளிமையான இயற்கை சூழல் நிரம்பிய வகையில் ஓய்வு நாட்களை கழிக்க விரும்புவோருக்கு தகுந்த ஏற்பாட்டினை இவர்களால் அமைத்து தரமுடிகின்றது. ஒரு சில இத்தகைய ஐரோப்பியர்கள் உள்ளூர் பெண்களை மணந்து இங்கே குடியும் குடித்தனமுமாக ஆகிவிட்டனர். இப்படிப்பட்ட ஒரு டச்சு இனத்தவர் நடத்தும் ஒரு உணவகத்தில் ஒரு நாளைக் கழித்த போது அவருடன் பேசி சில விவரங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.

மசூரியைப் பற்றி முன்னர் இதே இழையில் குறிப்பிட்டிருந்தேன். மசூரி வாழ்ந்து மடிந்த இடங்கள் இங்கு சுற்றுலா நிமித்தம் வருபவர்கள் பார்த்துச் செல்ல வேண்டிய ஒரு பகுதி.  மசூரி நினைவு இல்லம் மிக நேர்த்தியாக அமைக்கபப்ட்டுள்ளது. பசுமையான தோட்டத்தின் இடையே  மலாய் பாரம்பரிய இல்லம் ஒன்று தான் இங்கே நினைவகமாக இருக்கின்றது. இங்கே மசூரி வாழ்ந்த காலத்தில் அவரது வீட்டுச் சூழல் எப்படி இருந்திருக்கும் எனக் காட்டும் வகையில் வரவேற்பறை அலங்காரம், குழந்தை தூங்கும் கயிற்றுத்தொட்டில், சமையலறை படுக்கயறைகள் என அமைக்கப்பட்டிருக்கின்றன. வாசலிலேயே அக்காலத்து ரிக்‌ஷா வண்டி ஒன்றும் இருக்கின்றது.  



வீட்டினுள்ளே தூளி


இந்த நினைவு இல்லத்திற்கு வருவதற்கு முன்னர் கண்காட்சிப் பகுதி உள்ளது. மலாய் பாரம்பரிய இசை பின்னனியில் இசைக்க மசூரி கதை மலாய் மொழியில் பின்னனி இசையோடு கலந்து சொல்லப்படுவை கேட்டுக் கொண்டே இங்கே கண்காட்சியைப் பார்த்துக் கொண்டு சுற்றி வரலாம். லங்காவித் தீவின் ஓர் அங்கமாக மசூரி நினைத்துப் பார்க்கப்படுகின்றார் என்றால் அது மிகையில்லை.

துரித வளர்ச்சி பெற்றூ இத்தீவு பொருளாதார மேண்மையைக் கண்டு வரும் போதும் இயற்கையின் எழில் இன்னமும் குறையவில்லை என்பது உண்மை. பசுமை.. பசுமை.. கிராமத்து அழகு.. இவை லங்காவியில் இன்னமும் இருக்கவே செய்கின்றன.




வாகனத்தை ஓட்டிக் கொண்டு லங்காவித்தீவை சுற்றி வரப் புறப்பட்டால் கண்கொள்ளா இயற்கை எழில் காட்சிகளைக் கண்டு மகிழலாம். தீவு முழுமைக்கும் பிரமாதமான தரம் வாய்ந்த சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் வாகனப் பயணம் என்பது தடையின்றி விரைவில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்ல உதவுவதாகவே உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்கள் கார் வாடகைக்கு எடுத்துக் கொள்வது நல்லது.  நாள் வாடகை என்ற வகையில் குவா துறைமுகப் பகுதியிலேயே வாடகைக்கு வாகனங்கள் பெற்றுக் கொள்ளலாம். விலையில் பல வேறுபாடுகள் உண்டு. இங்கே பஸ் பொதுப் பேருந்து வசதி அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற காரணத்தினால் நமது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வாகனத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு எல்லா முக்கிய இடங்களையும் சென்று பார்த்து வருவது சிறப்பு.

தீவில் உள்ளே பயணிக்க ஆரம்பித்தால் சாலையின் இரண்டு பக்கங்களிலும் நீண்ட வயல் வெளிகளும்.. புதர்களும் எங்கனும் காட்சியளிக்கும். ஓடைகள்.. சிறு குளங்கள்.. குளங்களில் நிரம்பிய தாமரையும் அல்லியும் என மலர் பூங்கா இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம் லங்காவி.



வயலின் பசுமை நம்மைக் கவர்வதைப் போலவே அந்த வயலில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் பசு மாடுகள், எருதுகள் ஆகியவையும் நம் கண்களுக்கு விருந்துதான். இங்கே படத்தில் பார்ப்பது போல எருமை மாடுகளுடன் இணைந்து உணவு தேடிக் கொண்டிருக்கும் நாரைகளும் இத்தீவில் ஏராளம். தரையில் நின்று உணவு தேடும் நாரைகள்,  எருமை மாடுகளின் முதுகில் ஏறிக் கொண்டும் பயணம் செய்யும். மீன்களைக் கொத்திக் கொண்டு வேகமாகப் பறக்கும் பறவைகளும் ஆங்காங்கே தென்படும்.  இவற்றையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது. ஆனால் மதிய வெயில் கொளுத்தினால் இதையெல்லாம் நிச்சயமாக ரசிக்க முடியாது. காலையிலும்  மாலையிலும் இது சுவர்க்கபுரிதான்.

லங்காவித் தீவுக்கு மக்கள் விரும்பி வருவதற்கு முக்கிய காரணம் இங்குள்ள கடற்கரை என்றும் சொல்லலாம். பளிங்கு போன்ற கடல்,  நண்டுகள் ஒடும்  கடற்கரை , கரையோரம் ஒதுங்கிக் கொடக்கும் சிப்பிகள் .. இவற்றைப் பார்க்க வரும் பயணிகள் கடலில் குளித்து மகிழவே பெரும்பாலும் இங்கு வருகின்றனர்.



நண்பர்களே... மாலைப் பொழுது மனதை மயக்க இங்கே அமர்ந்து இந்த  ரம்மியமான காட்சியை ரசிக்க வேண்டுமென்றால் ஒரு முறையேனும் மலேசியா செல்லுங்கள்.. அப்படியே மலேசியா சென்றாலும் .. மறக்காமல் லங்காவி செல்லுங்கள் ..:-)

அன்புடன்
சுபா

4 comments:

முனைவர் ஆ.மணி said...

பார்க்கத் துண்டும் நல்லதொரு பயணக்கட்டுரை.

மாதேவி said...

வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

லங்காவி கண்டு களித்தோம்.

Dr.K.Subashini said...

என் இல்லத்திற்கு வருகை தந்தமைக்கு என் நல்வரவு.

anbuajithkumar said...

அருமையான கட்டுரை

Post a Comment