Wednesday, August 6, 2025

மலாயா ஆவணங்கள் – 20: "கூலிகள் பாடக் கூடாதா?"

 







முனைவர் க.சுபாஷிணி

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதுதான் பெரும்பாலும் நீதிக்கு முன் அடங்கிப் போய் விடுகிறது. ஜனநாயகமும் சமூக நீதியும் பெருமளவில் கடைபிடிக்கப்படுகின்ற இந்தக் காலகட்டத்திலேயே எத்தனையோ சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகங்களின் வழி பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கே இப்படி இருக்கின்றது என்றால் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஓரளவு நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆவணங்களின் வழி தான் அது நமக்குச் சாத்தியமாகும். அந்த வகையில் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவை இப்படி சில செய்திகளை நமக்கு வழங்குகின்றன. வரலாற்றை திரும்பிப் பார்க்க இத்தகைய ஆவணங்கள் நமக்கு இன்று தேவைப்படுகின்றன.


மலாயாவின் பினாங்கு மாநிலத்தில் இருந்து வெளிவந்த தொடக்க கால பத்திரிகைகளில் "பினாங்கு ஞானசாரியன்" முக்கியமான ஒரு பத்திரிக்கை. 3.5.1912 வெள்ளிக்கிழமை எனத் தேதி இடப்பட்ட இப்பத்திரிக்கை தமிழ்நாட்டில் இருந்து சென்ற தோட்டக்கூலிகள் பெற்ற தண்டனையைப் பற்றி குறிப்பிடுகிறது.

கோலாலம்பூருக்கு பக்கத்தில் "காசில்பீல்ட்" என்று பெயர் கொண்ட ஒரு ரப்பர் தோட்டம். அதன் மேலாளர் மிஸ்டர் ஆர். ஆலன்.

அத்தோட்டத்தில் ஒரு புதன்கிழமை இரவு 9 மணிக்கு 10 பேர், தமிழ் தோட்டக்கூலிகள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடல் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மிஸ்டர் ஆலன் தனது வேலைக்காரப் பையனை அனுப்பி இந்தப் பாட்டு கச்சேரியை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் பாடிக்கொண்டிருந்த அந்த பத்து பேரும் பாடல் கச்சேரியை நிறுத்தவில்லையாம். அவர்கள் 10 மணி வரை பாடிக் கொண்டிருக்கலாம் என தோட்டத்தின் மேனேஜர் அனுமதி கொடுத்து இருந்ததால் தாங்கள் பாடலை நிறுத்த மாட்டோம் என்று சொல்லி விட்டு தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

கோபமடைந்த மிஸ்டர் ஆலன் இந்த தமிழ் கூலிகள் பாடிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து ஒரு பிரம்பை எடுத்து ஒரு கூலியை அடித்தாராம். இதனைப் பார்த்த மற்ற கூலிகள் அவர் மேல் பாய்ந்து தடிகளால் அவரை அடித்திருக்கின்றார்கள். இதனால் மிஸ்டர் ஆலனின் வலது கை சுண்டு விரல் உடைந்து போனது. அது மட்டுமல்ல. அவர் உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டதாம். அவர் தரையில் விழுந்த பிறகும் அவரை நன்கு அடித்து புடைத்து இருக்கின்றார்கள். பின்னர் டாக்டர் அங்கு சென்று அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டாராம்.

மறுநாள் மாலினிக்ஸ்ம் என்று பெயர் கொண்ட  ஓர் காவல் அதிகாரி அங்கு சென்று 9 தமிழ் ஆண் கூலிகளையும் ஒரு பெண் கூலியையும் பிடித்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் மிஸ்டர் டொனால்ட்சன் அவர்கள் முன் இந்தக் குற்றம் விசாரணைக்கு வந்து இவர்கள் குற்றவாளிகள் என்று காவலில் வைக்கப்பட்டனராம். இச்செய்தி பினாங்கு கெஸட்டில் எழுதப்பட்டிருக்கின்றது.

மேல் குறிப்பிட்ட செய்தியை இப்பத்திரிக்கை வெளியிட்டு கருத்துப் பதிகிறது.

மிஸ்டர் ஆலன் முதலில் அங்கு வந்து பிரம்பால் அக்கூலிகளை அடிக்காமல் இருந்தால் இந்தக் குற்றம் நடந்திருக்காது ஆகவே அவர் மீது குற்றம் இல்லையோ? என இப்பத்திரிக்கை கேட்கிறது.

இப்பத்திரிகை கேட்பதும் நியாயம் தானே? கூலிகள் அவர்கள் வேலையை செய்து விட்டு மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்தால் அதனால் யாருக்கு என்ன துன்பம் வரப்போகிறது? கூலியாக பணி செய்ய வந்த மக்கள் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கடுமையான, மனிதாபிமானமற்ற போக்கை எல்லோரும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தங்களைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் தாக்குவது உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள இயல்பு. இதனைத் தான் 1919 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மலாயாவின் தோட்டக் காடுகளுக்கு உழைக்கச் சென்ற தமிழ் கூலிகளில் சிலரும் செய்திருக்கின்றார்கள்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 296ல் இன்று வெளியிடப்பட்டது.)

Wednesday, July 30, 2025

மலாயா ஆவணங்கள் – 19: "தஞ்சாவூரில் சாதிக் கொடுமை"

 




முனைவர் க.சுபாஷிணி


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் ”சத்தியவான்” வாரப்பத்திரிக்கை சமூக சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாக மிளிர்கிறது. அதில் 12.5.1919 அன்று வெளிவந்த பத்திரிக்கையில் தஞ்சாவூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனுபவித்த கொடூரங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கின்றது.

இச்செய்தி தஞ்சாவூர் ஜில்லாவில் சாதி வேறுபாடுகளும் பண்ணையார்கள் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யும் முறை பற்றியும் பேசுகின்றது. பண்ணை சாகுபடி முறை மிகக் கொடூரமாக இருக்கின்றது என்பதை இச்செய்தி பதிகின்றது.

”பண்ணை சாகுபடி என்ற மகா பெரிய தேர் சக்கரத்தில் கழுத்தை கொடுத்துக் கொண்டு கஷ்டப்படுகிறவர்கள் பஞ்சமர்களே. அவர்கள் குடியிருப்பதற்கு வசதியே கிடையாது. இவ்விஷயத்தில் அவர்களுக்கு மிராசுதார்களால் உண்டாகும் இம்சை மிகவும் அதிகம். சொற்ப குற்றத்திற்கெல்லாம் பண்ணை ஆட்களின் குடிசைகளைப் பிரிப்பதும் அல்லது அக்கினி பகவானுக்கு இரையாக்குவதுமே சகஜமான தண்டனை. ஏனெனில் அந்தக் குச்சி வீடுகள் இருப்பது மேற்படி மிராசுதார்களின் மனைக்கட்டு என்று தர்க்கம் செய்கிறார்கள்” என்று இச்செய்தி குறிப்பிடுகிறது.

பண்ணையார்கள் தங்கள் நிலங்களில் பஞ்சமர்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவர்களின் வீட்டை எரிப்பது அல்லது அவர்களின் குடிசை வீட்டை பிரித்து போட்டு அவர்களை நிற்கதியாக நிற்க வைப்பது என்ற வகையில் கொடுமை செய்திருக்கின்றார்கள். உண்மையில் இப்பத்திரிகை செய்தி சொல்கின்ற கொடுமைகளை விட இன்னும் அதிகமாக கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் இதில் விரிவாக அவை விளக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இது பற்றி பேசும் இப்பத்திரிகை செய்தி, ”இது சம்பந்தமாக கவர்னருக்குப் பலமுறை மனு செய்யப்பட்டது. தென்னிந்தியா ஒடுக்கப்பட்டவர்கள் சங்கத்தாரும் சென்ற 10 வருஷமாக பண்ணையாட்களின் மனைக்கட்டு விஷயமாகப் பரிகாரம் செய்யும்படி சென்னை கவர்ன்மெண்டாருக்கு மனு செய்தார்கள். ரங்கூன், சென்னப்பட்டணம், திருச்சினாப்பள்ளி முதலான பிரபல தலங்களில் உள்ள ஆதிதிராவிட சபைகளால் கவுரவம் பொருந்திய இந்தியா தேச மந்திரி அவர்கள் திவ்ய சமூகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும் இம்மனைக்கட்டு விஷயம் குறிக்கப்பட்டிருந்தது. சென்ற மாதம் சிதம்பரம் நந்தனார் சபையின் ஆதரவில் நடந்த பஞ்சமர் கான்பரென்சில் மனைக்கட்டு விஷயமாயும் ஒரு தீர்மானம் ஏற்படுத்தப்பட்டு மேற்படி மந்திரி அவர்களுக்கும் நமது பிரதிநிதி சென்னை கவர்னர் முதலான அரசாங்க தலைவர்களுக்கும் தந்தி மூலமாய் அனுப்பப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.

இதிலிருந்து மூன்று செய்திகளை முக்கியமாகக் காணலாம்.


1. 1919 வாக்கிலேயே தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் சங்கம் என்ற ஒன்று இயங்கி வந்தது என்பதையும் அது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இந்த கொடுமைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

2. ரங்கூன், அதாவது இன்றைய மியான்மார் தலைநகர் ரங்கூன், சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட சபை ஏற்படுத்தப்பட்டு அவை மக்களின் நலனுக்காக போராடி இருக்கின்றன.

3. இந்த நிகழ்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் சபை என்ற ஓர் அமைப்பு இருந்தது பற்றியும், அங்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பஞ்சம நலன்களைக் கவனத்தில் கொண்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டு அதில் பண்ணையார்களின் மனைக்கட்டு மற்றும் அதனால் ஏற்படுகின்ற கொடூரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.


19 ஆம் நூற்றாண்டும் 20 ஆம் நூற்றாண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொடூரங்களை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கொண்டு சென்று சேர்த்து தங்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்துகின்ற காலங்களாக அமைந்தன. அடிமைகளாக பண்ணையார்களிடம் எந்த எதிர் கேள்விகளும் கேட்க முடியாமல் துன்பத்தில் உழன்று கொண்டிருந்த ஏராளமான ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட அல்லது பஞ்சம சமூகத்து மக்கள் பட்ட இன்னல்கள் அதிகம். தமிழ் மக்கள் பலர் இக்காலகட்டங்களில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கூலிகளாகவும் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்து சென்ற வரலாறும் இதனோடு தொடர்புடையது தான்.

ஆக இப்பத்திரிகை செய்தி சொல்வதன் அடிப்படையில் தஞ்சாவூர் பகுதியில் பண்ணையார்களின் கொடுமைகளை அரசுக்குத் தெரிவிக்கும் ஒரு முயற்சியாக இதனைக் காண்கிறோம்.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் மனைக்கட்டு விஷயமாக எல்லா விபரங்களையும் விசாரிக்கும்படி ஸ்ரீமான் ஸ்ரீநிவாச்சாரி என்ற ஒருவரை துணை உதவி ஆட்சியராக பிரித்தானிய அரசாங்கம் நியமித்திருக்கின்றது என்பதை இச்செய்தி குறிப்பிடுகின்றது. இந்த சீநிவாச்சாரி என்பவர் பஞ்சமர்களின் பரிதாப நிலையைக் கண்டு அனுதாபம் அடைந்து தீர விசாரித்து பிரித்தானிய அரசுக்கு அறிக்கை கொடுத்ததாகவும் அதற்காக பஞ்சமர்கள் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்துவதாகவும் இப்பத்திரிக்கை செய்தி மேலும் குறிப்பிடுகிறது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் 295ல் இன்று வெளியிடப்பட்டது)


Wednesday, July 23, 2025

மலாயா ஆவணங்கள் – 18: கப்பல் டிக்கெட்

 




முனைவர் க.சுபாஷிணி

தமிழ்நாட்டில் பஞ்சகாலத்தில் தாம் வாழ்ந்த ஊரையும், கிராமத்தையும், நிலத்தையும் விட்டு புதிய வாழ்க்கையைத் தேடி பயணித்த எண்ணற்ற தமிழ் நிலத்து மக்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் வசிக்கின்றார்கள். அவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் சொல்லொனா துயரத்தை அவர்கள் அனுபவித்தாலும் இன்று அம்மக்களது சந்ததியினர் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை சூழல் ஆகியவற்றில் உயர்ந்து நல்ல வாழ்க்கையைப் பெற்று அந்தந்த நாடுகளில் சட்டப்படி குடியுரிமை பெற்ற மக்களாக வாழ்கின்றார்கள்.

பஞ்சம் என்றால் அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தது என்பது நம் பொதுவான கருத்து என்றாலும், கிபி 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் நிலத்தில் பஞ்சம் குறித்த ஆவணக் குறிப்புகளை நாம் காண்கின்றோம் (காண்க: நூல் "தமிழர் புலப்பெயர்வு - உலகளாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு - ஆசிரியர் க.சுபாஷிணி)

மலாயாவிற்குத் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது பல்வேறு காலகட்டங்களில், குறிப்பாக பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் நிகழ்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பஞ்சத்தின் காரணத்தால் தமிழ் மக்கள் மலாயா வந்திருக்கின்றனர். அவர்கள் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் மலாயாவிற்கு வரும்போது பெரும்பாலும் அவர்கள் இறங்கிக் கொள்வது பினாங்குத் தீவில். சிலர் கிள்ளான், இறுதியாக சிங்கப்பூர் என்று இறங்கினர்.

இப்படி வந்த மக்கள் மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் தோட்டக்காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான பல ஆவணக் குறிப்புகள் இன்று நமக்கு கிடைக்கின்றன. அத்தகைய பயணத்தைப் பற்றிய ஒரு செய்தியை மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த சத்தியவான் என்ற பத்திரிக்கை நமக்கு வழங்குகின்றது.

12.5.1919 என்று தேதி இடப்பட்ட ஒரு இதழ் இச்செய்தியை குறிப்பிடுகிறது.

பஞ்சத்தால் சீர் அழிந்த தமிழ் மக்கள் தரகர்களிடம் காசு கொடுத்து பயணம் செய்வது என்பது ஒரு புறம். சிலரோ மெட்ராஸில் இருந்து புறப்படும் கப்பல் எந்த தேதியில் எத்தனை மணிக்கு புறப்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டு தாங்களே கூட டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்து மலாயா வந்திருக்கின்றனர். அப்படி பயணச் சீட்டு பெறுகின்ற அலுவலகத்தில் அவர்கள் பணம் கட்டி பயணச்சீட்டு வாங்கும் போது அவர்கள் படுகின்ற கஷ்டம் மிகப் பெரிது என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஏமாற்றுக்காரர்களாக அதாவது டம்பவேடம் பூண்டு உலவிக் கொண்டிருக்கும் சிலர் உபகாரமாய் நான் வாங்கித் தருகிறேன் என்றும், அதற்கு தனக்கு அன்றைய மலாயா ரிங்கிட் இரண்டு கொடுக்க வேண்டும் என்றும் ஏமாற்றி அவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு மறைந்து விடுகின்றார்கள்.  

சில ஏமாற்றுக்காரர்கள் மொத்தமாக 10 அல்லது 20 டிக்கெட்களை முன் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதால் பயணச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் வரும்போது பயணச் சீட்டு கிடைப்பதில்லை. அத்தகைய சூழலில் மெட்ராஸ் நகரில் அவர்கள் அடுத்த கப்பல் வரும் வரை காத்திருக்கும் போது உணவுக்கு வழியில்லாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளான நிலையையும் இப்பத்திரிக்கை செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஏமாந்து போவதாலும், அடுத்த கப்பல் வரும் வரை காத்திருப்பதற்கு ஏற்ற செலவுகளை கவனிக்க முடியாமல் சிக்கித் தவிப்பதாலும் கட்டண அலுவலகங்களில் பணிபுரியும் மேலதிகாரிகள் இதனை கவனிக்க வேண்டும் என்பதை இப்பத்திரிகை கூறுகிறது.

இதற்கு நிவாரணமாக,  இத்தனை பயணச்சீட்டுகள் தான் ஒரு பயணத்திற்கு என்பதை பினாங்கிலேயே அலுவலகம் தீர்மானித்து பினாங்குக்கு எவ்வளவு,  கிள்ளான் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு எவ்வளவு என்பதையும் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற ஏழை மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கின்ற சிரமம் குறையும் என்று இப்பத்திரிக்கை ஆலோசனையை முன் வைக்கின்றது.

இச்செய்தியின் வழி பினாங்கிலிருந்து வெளிவந்த “சத்தியவான்” வாரப் பத்திரிக்கை மக்கள் நலனில் அக்கறையோடு அக்காலகட்டத்தில் செயல்பட்டது என்பதையும், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பஞ்சத்தில் வாடி வேலை தேடி மலாயா வருகின்ற மக்கள் சிரமம் இல்லாமல் மலாயா வந்து சேரும் வகையில் அவர்களது பயணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பத்திரிக்கை தர்மத்தை செயல்படுத்தி இருக்கின்றது என்பதையும் இச்செய்தியின் வழி காண்கிறோம்.

செய்தி ஊடகங்கள் கடைக்கோடி எளிய மனிதர்களுக்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை மற்றும் இதழியல் முயற்சிகளுக்கு அடிப்படை காரணமாகவும் நோக்கமாகவும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகைகள் இத்தகைய நோக்கத்தோடு செயல்படுகின்றனவா என்பதை பத்திரிக்கை நிர்வாகத்தினர் ஒவ்வொருவரும் தங்களை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டியதும் அவசியம் தான் அல்லவா!

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 294ல் இன்று வெளியிடப்பட்டது)

Wednesday, July 16, 2025

மலாயா ஆவணங்கள் – 17: இலங்கை “ஆதி திராவிடன்”

 







முனைவர் க.சுபாஷிணி


தமிழ் இதழியல் முயற்சிகள் சீரிய வகையில் தொடங்கப்பட்ட காலமாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் கூறலாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட தமிழ் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள் மேலும் பலருக்கு இத்துறையில் ஈடுபாட்டை உருவாக்கியதன் விளைவாக புதிய பத்திரிக்கைகளின் வரவுகளும் அமைந்தன. அவ்வகையில் தமிழ்நாடு மட்டுமன்றி, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய தமிழர் வசிக்கும் பகுதிகளில் புதிய பத்திரிக்கைகள் தொடங்கப்பட்டன.

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மலாயாவின் பினாங்கிலிருந்து வெளியிடப்பட்ட சத்தியவான் வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. அதில் அச்சமயத்தில் இலங்கையிலிருந்து ஒரு புதிய பத்திரிக்கை வெளிவரத் தொடங்கியிருக்கும் செய்தியை அறிகின்றோம். இப்பத்திரிக்கையின் பெயர் ”ஆதி திராவிடன்”. இந்த விளம்பரச் செய்தியைக் காண்போம்.


“ஆதி திராவிடன்”

இப் பெயர் வாய்ந்த ஒரு மாதாந்தப் பத்திரிகை இலங்கை தென்னிந்திய ஐக்கிய சங்கத்தாரால் ஆதிதிராவிடன் முன்னேற்றத்தைக் கருதி 16 பக்கங்களடங்கி மிக அழகாக அச்சிடப்பட்டிருக்கின்றது. பத்திரிக்கையின் போக்கை நோக்க அது தன்சந்தாதாரர்களுக்கு மிகவும் உபயோகமான விஷயங்களையே எடுத்து போதிக்கு மென்று நம்புகின்றோம். அப்பத்திரிக்கைக்கு வருஷ சந்தா ரூபா 1.25. சந்தாதரராக சேர விரும்புவோர் ஆதிதிராவிடன் பத்திராதிபர், தென்னிந்திய ஐக்கிய சங்கம், 221, சர்மாவிலா, கொள்ளுப்பட்டி,கொழும்பு என்னும் விசாலத்திற்கு எழுதிக்கொள்ளலாம். – திராவிடன் “


இந்த விளம்பரத்துடன் மேலும் சத்தியவான் பத்திரிக்கை ஆசிரியர் கீழ்க்காணும் வாழ்த்தையும் பதிகின்றார்.

[ஆதிதிராவிடர்கள் முன்னேற்றத்திற்குப் பத்திரிக்கை மிக அவசியம். திராவிடன் பத்திராதிபதியோடு இப்பத்திரிக்கையும் வாழும்படி ஆசி கூறுகிறோம்]

இலங்கையில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடன் இலங்கையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பத்திரிக்கையாகத் திகழ்ந்திருக்கின்றது.  இந்த ஆதிதிராவிடன் என்ற பத்திரிக்கை இலங்கையின் முதலாவது தலித் இதழ் மட்டுமல்ல, மலையகத்தின் முதலாவது பத்திரிக்கையுமாகும் என்பதை நோர்வேயின் வசிக்கும் இலங்கை ஆய்வாளர் சரவணன் குறிப்பிடுகின்றார். (https://www.namathumalayagam.com/2023/04/AdiDraviden.html)

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இதழியல் செயல்பாடுகளில் அயோத்திதாசப் பண்டிதர் மிக முக்கியமானவர். அக்காலத்தில் இவரது ஆதிதிராவிடர்கள் நலன் சார்ந்த முயற்சிகளின் தாக்கத்தை தமிழ்நாடு மட்டுமன்றி மலாயா, இந்தோனீசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் காணமுடியும். எடுத்துக்காட்டாக அயோத்திதாசப் பண்டிதரின் தாக்கத்தாலும் உதவியுடனும் இந்தோனிசியாவின் மேடான் நகரில் ஆதிதிராவிடர் அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கம் கண்டு செயல்பட்டது (நூல்: தமிழர் புலப்பெயர்வு – க.சுபாஷிணி)  அதே வகையில் இலங்கைக்கான அயோத்திதாசப் பண்டிதரின் வருகை எழுச்சியை ஏற்படுத்தியது என்பதும் மறுப்பதற்கில்லை.

இந்த ஆதி திராவிடன் பத்திரிக்கை 1919ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம், சாதிப் பிரிவினை எதிர்ப்பு ஆகிய பொருளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சமூக மாற்றத்தை முன்வைத்து 20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இதழியல் முயற்சிகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த இந்த ஆதி திராவிடன் என்ற மாதப் பத்திரிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றது.  


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 293 இல் இன்று வெளியிடப்பட்டது)

Wednesday, July 9, 2025

மலாயா ஆவணங்கள் – 16: சேலை வாங்கலையோ? சேலை!

 




முனைவர் க.சுபாஷிணி

இன்று சிங்கப்பூர் தனி நாடாக உள்ளது. ஆனால் மலேசியா பண்டைய மலாயா என்ற அடையாளத்திலிருந்து பிரிந்து, பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.

1959 ஜூன் மூன்றாம் தேதி முதல் சிங்கப்பூர் தனி ஆட்சியுடன் உருவாகத் தொடங்கியது. அதன் பின்னர் அதிகாரப்பூர்வ மலேசிய புரிந்துணர்வின் வழி 1963 செப்டம்பர் 16ஆம் தேதி முதல் சுதந்திர நாடாக படிப்படியாக பிரிட்டனிடம் இருந்தும் மலேசியாவிடமிருந்தும் பிரிந்து தனி நாடாக மாறியது.

இந்தப் பின்னணியோடு நாம் பார்க்கும் போது 1963 க்கு முன்னர் சிங்கப்பூர் மலாயாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.

வரலாற்று காலத்தில் பண்டைய ஸ்ரீவிஜயா பேரரசு, அதன் பின்னர் மலாய் பேரரசு ஆட்சி காலத்தில் எல்லாம் மலாயா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மூன்றும் பெரும் பேரரசின் ஆட்சிகளுக்குள் இருந்தன. பின்னர் படிப்படியாக பல்வேறு ஆதிக்கங்கள் இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்களால் இவை தனித்தனி நாடுகளாக இன்று பிரிந்திருக்கின்றன.

19 ஆம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் பத்திரிகைகள் முயற்சிகள் என்று நோக்கும் போது பினாங்கு பகுதியில் எப்படி தமிழ் பத்திரிகை வெளியீட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டதோ, அதேபோல சமகாலத்தில் சிங்கையிலும் தமிழ் பத்திரிகை முயற்சிகள் வெளிவரத் தொடங்கின. அத்தகைய ஒரு பத்திரிக்கை தான் ”சிங்கைநேசன்”.

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை தோறும் வெளியிடப்படும் பத்திரிக்கையாக ஒரு வாரப் பத்திரிக்கையாக சிங்கைநேசன் அன்று வெளிவந்து கொண்டிருந்தது.

1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளிவந்த சிங்கைநேசன் இதழ் கூறும் ஒரு செய்தியைக் காண்போம். இது புடவைகள் பற்றிய ஒரு விளம்பரம்.

இன்றைக்கு மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பல புடவைக் கடைகள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து புடவைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வோர் உள்ளூர் வியாபாரிகளுடன் வணிகத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழி பொருட்களை அனுப்பி வைப்பது என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற ஒவ்வொரு கப்பலிலும் புடவைகளும், வேஷ்டிகளும், துண்டுகளும், கைலிகளும் மற்ற மற்ற பொருட்களும் வந்து சேர்வதும் மிக இயல்பாக நடந்து கொண்டிருந்தது. அத்தகைய,  புடவைகள் விற்கும் ஒருவர் கொடுத்த விளம்பரத்தை இப்பத்திரிகையில் கீழ்காணும் செய்தி விளக்குகின்றது.

”மதுரை வெள்ளிக்கெண்டை வேஷ்டிகளும்,  உருமால்களும், சேலைகளும், காசி பேட்டு மாதிரி துப்பட்டிகளும், சிறுபிள்ளை வேஷ்டிகளும், சிற்றாடைகளும், சீர்மைக்கெண்டையில் மேற்கண்ட ஜவுளித் தினுசுகளும், சென்ன பட்டண மாதிரி ஜோடி லேஞ்சிகளும், பல்லாரி கடப்பை கர்நூல் முதலிய இடங்களில் இருந்து வருவித்த விரிப்புக்கடுத்த மேலான கம்பள திணிசுகளும், மல், காசா காரிக்கன் புடவைகளும், கொறநாடு, கும்பகோணம், சிதம்பரம் முதலில் இடங்களில் இருந்து பல மாதிரி பட்டு பளுக்கா சேலைகளும், சென்னப்பட்டின மாதிரி கைலி சாரம் தினுசுகளும் மற்றும் பலவித ஜவுளி தினசக்களும் வந்திருக்கின்றன. பலவித புஸ்தகங்களும் இருக்கின்றன. வேண்டியவர்கள் பால்கடை சைட்டியில் 49 ஆம் நம்பர் புடவை கடையில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.

இப்படிக்கு

திவான்முக்கியித்தீன்சாகி, சிங்கப்பூர், 3/8/87”


மேற்கண்ட செய்தியில் ”லேஞ்சி” என்ற சொல் கைத்துண்டுகளைக் குறிக்கின்றது. மலேசிய தமிழ்மக்கள் புழக்கத்தில் உள்ள ஒரு சொல் இது. அதே போல “சாரம்” எனும் சொல் கைலியை குறிப்பது. Sarong எனும் மலாய் மொழிச் சொல்லின் தமிழாக்கம். மலேசியாவிலும் இலங்கையிலும் தமிழ் மொழி பயன்பாட்டில் உள்வாங்கப்பட்ட ஒரு சொல் எனலாம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 292ல் இன்று வெளியிடப்பட்டது

Friday, July 4, 2025

மலாயா ஆவணங்கள் – 15: சத்தியவான்

 






முனைவர் க.சுபாஷிணி


கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய மலாயாவின் பினாங்குத் தீவிலிருந்து குறிப்பிடத்தக்க தமிழ் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அத்தகைய முயற்சிகளில் ஒன்று சத்தியவான் என்ற பெயர் கொண்ட, வாரம் ஒரு முறை திங்கட்கிழமைகளில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை.

இதன் தலைப்பில் சத்தியவான் என தமிழிலும் ஆங்கிலத்தில் The Sathiawan என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிக்கையில் இது 1919 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக வெளிவந்திருப்பதைக் காண முடிகின்றது. ஆக, ஏறக்குறைய 1919 அல்லது இதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது மாதங்களுக்கு முன்னர் இப்பத்திரிக்கை முயற்சி தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கு இது இடம் அளிக்கிறது.

14 ஏப்ரல் 1919 அன்று வெளியிடப்பட்ட சத்தியவான் பத்திரிகையில் உள்ள தகவல்களை ஆராய்வோம்.

நான்கு பக்கங்களைக் கொண்ட வகையில் இது அமைந்திருக்கின்றது. இப்பத்திரிகை பினாங்குத் தீவில் உள்ள பினாங்கு ஸ்ட்ரீட் சாலையில் அமைந்திருந்த விக்டோரியா பிரஸ் என்ற அச்சகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் டாக்டர். பாலகந்தக சிவம் என்பவர். பினாங்கு ஸ்ட்ரீட் என்பது தமிழர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வணிகம் செய்கின்ற ஒரு பகுதி என்பதை இன்றும் காண்கிறோம்.

ஏனைய பத்திரிகைகளைப் போலவே இந்த பத்திரிகைக்கும் சந்தாதாரர்கள் தேவை என்பதைக் குறிப்பிட்டு பத்திரிகை நிர்வாகத்தார் விளம்பரங்கள் செய்துள்ளார்கள்.

தங்கள் பத்திரிகை பற்றிய நல்ல கருத்துக்களையும் எண்ணங்களையும் வாசகர்களிடையே விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது பத்திரிக்கை பற்றி கீழ்காணும் வகையில் இதில் செய்தி இணைத்துள்ளார்கள்.


”உலகத்துக்குச் சிறப்புப் பொருள்.

பரலோகத்துக்குச் சிறப்பு அருள் அல்லது அன்பு.

மனிதன் தேர்ந்த பிறகு பிறருக்குப் போதிப்பது கல்வி.

மனிதன் ஞானத்தை அடைந்த பிறகு பிறருக்குப் போதிப்பது மார்க்கம் அல்லது மதம்.

பினாங்கு மலாயா தீபகற்பங்களில் பிரசுரமாகும் செந்தமிழ் பத்திரிகைகளில் இது ஒன்றே மிகச்சிறந்தது.”

செந்தமிழ் பத்திரிக்கை என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டாலும் கூட மணிப்பிரவாள நடையும் ஆங்கிலக் கலப்பும் இப்பத்திரிக்கையில் நிறைந்து காணப்படுகின்றது.

பினாங்கு மாநில செய்திகள் தான் இந்தப் பத்திரிக்கையை முழுமையாக நிறைத்திருக்கின்றன. பினாங்கு அறநிலையத்துறை தொடர்பான செய்திகள், பினாங்கு முத்துமாரியம்மன் கோயிலின் செய்திகள், உள்ளூர் செய்திகள் ஆகியன அன்றைய சூழலை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மலாயாவில் தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியீட்டில் பினாங்குத் தீவில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதற்கு இந்த சத்தியவான் வாரப்பத்திரிக்கையும் சான்றாக அமைகிறது.

 [குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 291இல் இன்று வெளியிடப்பட்டது.)

Tuesday, June 24, 2025

மலாயா ஆவணங்கள் – 14: ஊர்க்கப்பல்

 





முனைவர் க.சுபாஷிணி

இளம் வயதில் மலேசியாவில் வசித்த காலங்களில் விமானம் சென்னையிலிருந்து வந்து அதில் உறவினர்களோ நண்பர்களோ வந்திருந்தால் ‚ஊர்க்கப்பல்’  வந்திருக்கு என்று எங்கள் சுற்றத்தில் சொல்லி உரையாடுவது இயல்பு. கடலில் பயணம் செய்யும் கப்பலைப் போலவே விமானத்தையும் “கப்ப” என்று பேச்சு வழக்கில் அழைப்பது மலேசியத் தமிழர்களிடையே உள்ள வழக்கம்.

தமிழ் நாட்டிலிருந்து யார் வந்திருந்தாலும் பொருட்கள் வந்திருந்தாலும்  ”ஊரிலிருந்து வந்திருக்கின்றார்கள்” என்று சொல்வதும், ”ஊர் சாமான்” வந்திருக்கின்றது எனச் சொல்வதும் மிக இயல்பான ஒன்று. தமிழ்நாட்டு மக்களையே மலேசியத் தமிழர்கள் ”ஊர்க்காரர்கள்” என்று சொல்வது வழக்கம். தமிழ்நாட்டுக்குச் செல்வதென்றால் அதனையும் ”ஊருக்குப் பயணமா?” என்று கேட்பதும் வழக்கம்.

ஆக மொத்தம் தமிழ்நாட்டை “ஊர்” என்று தான் மலேசியத் தமிழர்கள் அடையாளப்படுத்தி பேசுகின்றனர். அது இன்றும் தொடர்கின்றது.

1897ஆம் ஆண்டு மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த வார இதழ்களில் பினாங்கு வர்த்தமானி பத்திரிக்கையும் ஒன்று. இது 2 பக்கங்களில்  வெளிவந்த பத்திரிக்கை. உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் செய்திகள் இதில் அடங்கும்.

அதில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி புதிதாக அச்சமயத்தில் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கிய ஒரு புதிய கப்பலைப் பற்றி பேசுகிறது,

இந்தப் புதிய “ஊர்க்கப்பல்” ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கியிருக்கிறது.  ஏற்கனவே அச்சமயத்தில் வேறு சில கப்பல்களும் ஆட்களையும் பொருட்களையும் ஏற்றி வரும் சேவை இருந்ததால் இப்புதிய கப்பல் வந்த பின்னர் போட்டியில் பயணக் கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதை இப்பதிவு சுட்டிக்காட்டுகிறது.

போட்டிக்குப் புதிய கப்பல் வந்திருப்பதால் ஏற்கனவே பயணிக்கும் கப்பல்களில் சிறிய குறையைக் கண்டுபிடித்தாலும் உடனே புதிய கப்பலுக்கு வணிகர்கள் சென்று விடுவார்கள்.  ”வேண்டாப் பெண்டிர் கைப்படக் குற்றம் கால்படக் குற்றம்” என்பது போல என்கிறது இச்செய்தி.

இப்புதிய கப்பலைப் பற்றி உள்ளூரில் மக்கள் புகழ்ந்து பேசி மகிழ்வதைக் கேலி பேசும் வகையில் இப்புதிய கப்பலை இயக்குபவர்களை உள்ளூர் மக்கள் புகழ்ந்து பேசுவதை இச்செய்தி குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.

இதற்கு முன்னால் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கப்பலில் தொற்று நோய்க்காரணமாக மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு வருவது தடைபட்டிருந்தது போலும். அதனால் மாட்டிறைச்சியின் விலை கட்டி ஒன்று (அளவை) 30 காசு விலையேற்றம் கண்டிருந்தது. ஆட்டிறைச்சி விலையேற்றம் கண்டால் கூட பரவாயில்லை; மாட்டிறைச்சி விலையேற்றம் காணக் கூடாது என்கிறது இச்செய்தி.

 [குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 290இல்  வெளியிடப்பட்டது.)

Tuesday, June 17, 2025

மலாயா ஆவணங்கள் – 13: முதல் தரமான சாப்பாட்டுக் கடை

 






முனைவர் க.சுபாஷிணி

1912ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி வெளிவந்த பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில்  ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அது ஒரு உணவகம் பற்றிய விளம்பரம்.  

இந்த விளம்பரம் சொல்லும் செய்தியைக் காண்போம்.

எஸ்.எஸ் என்ற ஒருவரது   பெயரில் வணிக உரிமம்  பெற்று பினாங்கிலுள்ள குவின்ஸ்ட்ரீட் சாலையில் மாரியம்மன் கோயில் இருக்கும் சாலையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

 மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவருடைய இந்தப் புகழ்பெற்ற சாப்பாட்டுக் கடையில் தூய்மையான ருசியான உணவு விற்கப்படுகிறது.  அங்கேயே தங்கிக் கொள்ளவும் அறைகள் உள்ளன. இந்தியாவிலிருந்து, அக்கரை ஊர்களிலிருந்து வருபவர்களும் பினாங்கிலிருந்து இந்தியாவிற்கு செல்பவர்களும் இந்த சாப்பாட்டுக் கடையைத் தேடி வருகிறார்கள். ஒருமுறை இங்குச் சாப்பிட்டவர்கள் பின்னர் வேறெங்கும் செல்ல மாட்டார்கள். இங்குதான் உணவு உண்பார்கள்.  

இந்த விளம்பரத்தை வழங்கியவர் ”திருப்பத்தூருக்கு அடுத்த ஆத்திரம்பட்டி எனும் ஊரைச் சார்ந்த மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவரின் கணக்கு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பினாங்கில் குவின்ஸ்ட்ரீர் எனப்படும் சாலை பிரசித்தி பெற்றது. இங்கு இன்று ஏராளமான தமிழர்கள் வணிகம் செய்கின்றார்கள். பினாங்கின் தமிழ் வணிகர்கள் மட்டுமே கோலோச்சும் பகுதி இது.  கடைவீதி என்றும் சொல்லலாம்.

இன்று “லிட்டல் இந்தியா” என அழைக்கப்படும் பகுதியில் இச்சாலையும் அடங்கும். இங்குதான் பிரமாண்டமான மாரியம்மன் கோயில் உள்ளது. இன்றும் கூட தைப்பூசத் திருவிழா இக்கோயிலில் தொடங்கி பின்னர் தண்ணீர்மலை முருகன் கோயில் வரை செல்வது வழக்கம்.

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”அக்கரை” என்ற சொல் மலேசிய தமிழர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் எனலாம். தமிழ்நாட்டை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் என்றும் பினாங்கு தீவைக் கடந்த நிலப்பகுதி என்றும் இரு வேறு பொருளில் இது பயன்பாட்டில் உள்ளது.

இன்று இப்பகுதியில் ஏராளமான தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களின் உணவகங்கள் செயல்படுகின்றன. “ஊர்க்காரர்கள்” தெரு என்றும் இப்பகுதி இன்று உள்ளூர் தமிழ்   மக்களால் அழைக்கப்படுகிறது. “ஊர்” என்ற சொல் தமிழ்நாட்டைக் குரிப்பதுதான். “ஊர்” என்றாலே மலேசியத் தமிழர்களுக்கு அது தாய் தமிழ்நாடுதான். இது மிக இயல்பாக மக்களின் பேச்சுப் பயன்பாட்டில் இடம்பெற்று விட்டது.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலக தமிழ் இதழ் 289ல் இன்று வெளியிடப்பட்டது.

Wednesday, June 11, 2025

மலாயா ஆவணங்கள் – 12: பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்

 





முனைவர் க.சுபாஷிணி


இன்று ஒரு பத்திரிக்கையின் பல பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் செய்திகள் யாவை என ஆராய்ந்தால் ஆங்காங்கே நடைபெற்ற விபத்து, மரணம், தாக்குதல், அதிர்ச்சிகரமான செய்தி போன்றவைதான் நமக்குத் தென்படுகின்றன.  இவற்றோடு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு அரசியல் நிகழ்ச்சிகளும் இணைந்து கொள்கின்றன. இன்று மட்டுமல்ல. மலாயாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தமிழ்ப்பத்திரிக்கைகளின் உள்ளடக்கமும் இப்படித்தான் இருந்திருக்கின்றது.

1912ஆம் ஆண்டு பினாங்கு ஞானாசாரியன் தமிழ் வாரப்பத்திரிக்கையில் உள்ள உள்ளூர் செய்திகள் சிலவற்றைக் காண்போம்.

ஒரு செய்தி, பெப்ரவரி மாதம் 28ஆம் தேதி பினாங்கு அட்டன்லேன் சாலையில் ஒரு சீனரான சுவாகாங் என்பவரை வியாக் ஆ ஈ என்ற ஒரு சீனர் கொலை செய்ததை அறிவிக்கிறது. விசாரணையில் திட்டமிடாத ஒரு கொலை இது என நீதிபதிகள் முடிவு செய்ததாகவும் குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது என்றும் அக்குற்றவாளியைப் பிடித்த சுல்தான் என்று பெயர் கொண்ட ஒரு மலாய்காரருக்குப் பரிசாக மலேசிய ரிங்கிட் பத்து வெள்ளி வழங்கப்பட்டது என்றும் செய்தி பதிகிறது.

மற்றொரு செய்தி பினாங்கில் கஸ்டாவ் வெஸ்ஸ்ன்ஸ் என்று பெயர் கொண்ட வைர வியாபாரி ஒருவர் 25900 டாலர் பெருமானமுள்ள வைரங்களை ஏமாற்றி திருடிவிட்டார் என்பதையும், இக்குற்றத்திற்கு வில்லியம் டி சல்வா என்னும் ஒரு வைர வியாபாரி உடந்தையாய் இருந்தார் என்பதையும் பதிகிறது. இக்குற்றம் பல நாட்கள் விசாரணையில் இருந்திருக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதிகள் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை என தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.  வாதியான மெஸர்ஸ்பெர் அண்ட் கம்பெனியார் எழுப்பிய சந்தேகம் உறுதி செய்யப்படவில்லை என்று அறிவித்து குற்றவாளைகளை விடுதலை செய்த செய்தியைப் பதிகிறது.

மற்றொரு செய்தி பாம்பாட்டி ஒருவரின் மரனத்தைப் பற்றியது. ”பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்” என்ற பழமொழியைக் கூறி இலங்கையின் கொழும்பில் வசித்து வந்த பம்பாய் ராமசாமி என்று பெயர் கொண்ட ஒருவர் ஒரு பாம்பை வித்தை காட்ட வளர்த்து வந்ததாகவும், அதனை வைத்து வித்தைகாட்டி பணம் சம்பாரிக்க துறைமுகத்தில் இருந்த டச்சு கப்பல்  ஒன்றிற்குச் சென்றதாகவும், வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கையில் அங்கு திடீரென்று ஒரு சத்தம் ஏற்பட அதில் பயந்த பாம்பு சீறிக்கொண்டு வந்து பாம்பாட்டி பம்பாய் ராமசாமியின் வலது கரத்தைக் கொத்தி விட்டு பெட்டிக்குள் புகுந்து கொண்டது என்றும் குறிப்பிடுகிறது.

அப்பாம்பின் விஷப்பற்களை முன்னரே பிடுங்கியிருந்தாலும் அது மீண்டும் முளைத்திருந்ததைப் பாம்பாட்டி ராமசாமி  கவனிக்கவில்லை போலும்.  அங்கேயே மயக்கமடைந்து விழுந்து விட்டார்.  அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமணை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். உடனே அரசாங்கத்தினர் அந்தப் பாம்பை சுட்டுக் கொன்று அதனைப் புதைத்திருக்கின்றனர் என்ற செய்தியை இப்பத்திரிக்கையில் காண்கிறோம்.


மக்களுக்கு பேசுபொருளாக சில சுவாரசியமான தகவல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய அசம்பாவித சம்பவங்களைப் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. வாசிக்கின்ற மக்கள் அவற்றை பற்றி ஏனையோருடன் பேசி கலந்துரையாட விரும்புவார்கள், அவர்களது கவனத்தை இத்தகைய செய்திகள் ஈர்க்கும் என்ற உத்தியை அறிந்தே பத்திரிக்கை ஆசிரியர்கள் இயங்கி வந்திருக்கின்றனர். அத்தகைய போக்கை இந்த ஆரம்பகால பத்திரிக்கைகளிலும் காண்கின்றோம்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் 288ஆம் இதழில் இன்று வெளிவந்தது)

Wednesday, June 4, 2025

மலாயா ஆவணங்கள் – 11: ரெக்கார்டு இசை – இசைவட்டு

 






முனைவர் க.சுபாஷிணி

ஆங்கிலத்தில் phonograph record (அல்லது gramophone record) என அழைக்கப்படும் ரெக்கார்டு இசைக்கருவி தமிழ் மக்களின் சூழலிலும் பரவத் தொடங்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எனலாம். 1857ஆம் ஆண்டில்   Édouard-Léon Scott de Martinville  என்ற பிரெஞ்சுக்காரர்  phonautograph என்ற இதன் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தார்.    

1877இல் அமெரிக்கரான தோமஸ் எடிசன் வட்டுகளில் சேர்க்கப்படும் வகையில் முதல் phonograph  கருவியைக் கண்டுபிடிக்கின்றார். பின்னர் படிப்படியாக இதன் தொழில்நுட்பம் மேம்பாடு காணத் தொடங்கியது.  1880இல் ஜெர்மானியரான Emile Berliner என்பவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான இசைவட்டுக்களைக் கண்டுபிடிக்கின்றார். அதன் பின்னர் பெர்லினர் தனது வணிகக்கூட்டாளியான அமெரிக்கரான ஜோன்சனுடன் இணைந்து கேம்டன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் 1901இல் விக்டர் டால்கிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கி அது உலகப் பிரபலம் அடைகின்றது.

அமெரிக்க பயன்பாட்டில் பெரும்பாலும் phonograph record  என்றும் இங்கிலாந்தில் gramophone record  என்றும் இது அழைக்கப்பட்டது. அதன் பின்னர் gramophone record எனும் இசைவட்டு 1910 வாக்கில் மக்கள் புழக்கத்திற்கு வரத்தொடங்குகிறது.

பொதுவாக இசைவட்டின் சுற்றளவை வைத்து இது குறிப்பிடப்படும். உதாரணமாக 12, 10, 7 அங்குலத்தில் இவை தயாரிக்கப்பட்டன.

என்ன ஆச்சரியம் என்றால் மேற்கத்திய உலகில் அறிமுகமாகும் இந்த க்ராமஃப்போன் இசைவட்டுக்கருவி அதே 1912 வாக்கில் மலாயாவிலும் தமிழ் மக்களின் பொழுது போக்கு சாதனமாக புழக்கத்தில் வந்தது என்பதுதான்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாரப் பத்திரிக்கையான பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில் இடம்பெறுகின்ற ஒரு விளம்பரம் இதற்குச் சான்றாகின்றது.

இந்த விளம்பரத்தில் 1912 வாக்கில் தமிழிசை அல்லது உரைகளைக் கொண்ட இசைவட்டுக்களின் தகவல்கள் சில நமக்கு இப்பத்திரிக்கையின் வழி கிடைக்கின்றன. அவற்றுள் சில:

* இன்னும் என்மீதில் (கதிரையாத்திரை விளக்கம் – பண்: நாதனாமக்கிரியை –தாளம்: ரூபகம்.

* மயினமிசைவரும் – பண்: தன்னியாசி – தாளம்: ஆதி

* அங்கிங்கெனாதபடி – தாயுமானவர்

* தாயைவிட்டு: அரிச்சந்திரநாடகம் – மயான காண்டம்

* பரமேஸ்வரி – ராகம்:  கல்யாணி

* சண்டாளன் – ராகம்: ஆனந்தபைரவி

* எக்காலத்திலும் மறவேனே – ராகம்: நாட்டைக்குறிஞ்சி – தாளம்: ஆதி

* நான் படும்பாடு (அருட்பா) – ராகம்: பைரவி


மலாயாவின் கிள்ளான் நகரில் 38 ரெம்பாவ் சாலையில் அமைந்திருந்த கிள்ளான் அச்சு ஆலையில் திரு சி.கந்தையா பிள்ளை என்பவரது கடையில் இவை விற்கப்பட்டன என்ற தகவலும் இந்த விளம்பரத்தில் அடங்குகிறது.

மாலாயா வாழ் தமிழ் மக்களின் இசை ஆர்வத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் தமிழ் இசைவட்டுக்கள் உருவாக்கப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புழக்கத்தில் இருந்தன என்பதும், தமிழ்நாட்டிலிருந்து அவை மலாயாவிற்குத் தருவிக்கப்பட்டு விற்பனை நிகழ்ந்திருக்கின்றது என்பதையும் பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையின் வழி நாம் அறிகின்றோம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 287 இதழில் இன்று வெளிவந்தது.)

Wednesday, May 28, 2025

மலாயா ஆவணங்கள் – 10: 1898இல் பினாங்கில் கல்வி

 





முனைவர் க.சுபாஷிணி


1886இல் முதலில் வெளிவந்து பின்னர் 1888 வாக்கில் ஆங்கில பெயரையும் உள்ளடக்கியவாறு வெளிவந்த  ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையின் 1898ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் அக்காலகட்டத்தில் பினாங்கில் தமிழ் மக்களின் குழந்தைகளின் கல்வி நிலை பற்றி சில தகவல்களைப் பதிகின்றது.    இதில் இடம்பெறுகின்ற ஆசிரியர் தலையங்கம் போன்ற முதற்பகுதி கல்வி, தமிழ்ச்சமூக நிலைகளைத் தொட்டு கருத்து பதிகிறது.

தற்காலத்தில் பினாங்கில் வந்து வசிக்கும் தமிழ்நாட்டினர் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதாகவும் குழந்தைகளைப் பல்வேறு வேலைகளைச் செய்ய அனுப்புவதாகவும் குற்றம் சுமத்துகிறது. மேலும் கடைத்தெருக்களில் உள்ள திண்ணைப்பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, எண்கள் போன்றவற்றை ஆழ்ந்த அக்கறையின்றி ஆசிரியர்கள்  கற்றுத் தருகின்றனர் என்றும் சாடுகிறது.

இந்த அவல நிலைக்கு மாற்றாக ஆங்கிலேய முகம்மதிய பள்ளிக்கூடம் ஒன்று பினாங்கில் சூலியா ஸ்ட்ரீட் சாலையில் எண் 130இல் உள்ள கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆறு மாதங்களாக  இங்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருவதையும் இப்பத்திரிக்கை பதிந்திருக்கின்றது.

இந்த அடிப்படை பள்ளியில் ஆங்கிலேய அரசு ஏற்படுத்தியுள்ளபடி ஆங்கிலம், வாசிப்பு, எழுத்து, கணிதம், பூகோளம், இலக்கணம், சொற்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிப்பு, எண்கணிதம், ஆத்திச்சூடி, அவ்வையார் இயற்றிய செய்யுட்கள், உரையுடன் பயிற்சி பெறும் வகையில் நடத்தப்பட்டன.

இப்பள்ளியில்  கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் கற்பார்கள்.  இங்கு ஆங்கிலத்தில் மூன்றாம் நான்காம் வகுப்பில் தேறிய மாணவர்களைப் பினாங்கின் முதல் பள்ளிக்கூடம் என அழைக்கப்படும் புகழ்மிக்க “பினாங்கு ஃப்ரீ ஸ்கூல்” பள்ளிக்கு அடுத்த கட்ட உயர் கல்விக்கு இணைத்துக் கொள்வார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது.

இத்தகைய பல்வேறு பயன்களை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழங்கக்கூடிய கல்வியை வழங்குகின்ற  இந்த ”ஆங்கிலேய முகம்மதிய”  பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகளை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கின்றது 1898 அக்டோபர் மாத பினாங்கு விஜய கேதனன்.

இப்பள்ளியில் படிப்பதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.  அவ்வகையில், ஒவ்வொரு மாதமும் கீழ்க்காணும் வகையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

முதலாம் வகுப்பு – 50 காசு

இரண்டாம் வகுப்பு - 50 காசு

மூன்றாம் வகுப்பு - 75 காசு

நான்காம் வகுப்பு – 1 வெள்ளி (மலாயா)

பள்ளியில் சேர்க்கப்ப்டும் மாணாக்கர்களை இடையிலே நிறுத்தக்கூடாது என்றும் குறைந்தது ஒரு வருடமாவது அவர்களைப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றும் இப்பத்திரிக்கை அறிவுரை கூறுகிறது.

ஆக, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயல்பாட்டில் இருந்த திண்ணைப்பள்ளிகள் தரமான கல்வியை வழங்கவில்லை என்பதும் அதற்கு மாற்றாக பினாங்கில் அரசு தமிழ் இஸ்லாமியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட முயற்சிகளின் பலனாக ஒரு தமிழ்ப்பள்ளி ஒன்று 1898இல் தொடங்கப்பட்டதை இந்த ஆவணத்தின் வழி அறிகின்றோம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 286இல் வெளிவந்த கட்டுரை இது.)

Wednesday, May 21, 2025

மலாயா ஆவணங்கள் – 9: சிங்கை நேசன் பற்றிய கடிதம்

 




முனைவர் க.சுபாஷிணி

1888ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நாம் அறிகின்ற ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையில் பல்வேறு செய்திகளுக்கிடையே வாசகர்களின் கடிதங்களும் இடம்பெறுகின்றன.

பத்திரிக்கைகளைச் சந்தா செலுத்தியும் பினாங்கு, கிள்ளான், சிங்கை போன்ற நகர்களில் முகவர்களிடமிருந்து பெற்று வாசிக்கின்ற வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பதிவதற்காக கடிதம் எழுதி பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது இந்த 1888ஆம் ஆண்டு வாக்கிலேயே நிகழ்ந்திருக்கின்றது. அப்படி ஒரு கடிதம்  1888 ஜூலை மாத பத்திரிக்கையில் இடம்பெறுகின்றது. இதில் உள்ள சுவாரசியமான தகவல் என்னவென்றால், அதே காலகட்டத்தில் சிங்கை நேசன் என்ற ஒரு பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது என்பது  தான்.  

ஒரு சர்ச்சை தொடர்பான கடிதம் இது.  இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் நடை சற்றே கடினமானதானதாகவும் சூசகமான பொருளைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதால் இக்கடிதத்தின் பின்னனியை முழுமையாகப் புரிந்து கொள்வது சவாலாக உள்ளது.  இதே கடிதத்தில்  “மஹாவிகடதூதன்” என கடிதம் எழுதியவர் குறிப்பிடுவதும் ஒரு பத்திரிக்கையாகவே இருக்க வேண்டும். இந்த மஹாவிகடதூதனையும் சிங்கை நேசனையும் இவை இரண்டுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனைக்காக பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை நடுநிலை எடுத்து கருத்து பதிந்திருப்பதையொட்டி எழுதப்பட்ட ஒரு கடிதம் என்றே கருத வாய்ப்புண்டு.

இரு சொற்கள் பிரியும் போது அவை முழுமையாகத் தொடராமல் தொடர்ச்சியாகத் தொடரும் வகையில் எழுந்த கடித எழுத்து நடையையே முழுதாகக் காண்கிறோம்.  அதோடு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கும் முயற்சியையும் இதில் கான்கிறோம்.

எடுத்துக்காட்டாக ”எடிட்டோரியல்” அதாவது தலையங்கம் என குறிப்பிட வேண்டிய சொல்லை வாக்கியத்தினுள்ளே “அவ்வெடிற்றோரியலை”  என்று பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம்.

சிங்கப்பூரிலிருந்து இக்கடிதத்தை வாசகர் ஒருவர் எழுதியிருக்கின்றார். பெயர் குறிப்பிடப்படாத கடிதம் இது.

இக்காலகட்டத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை பினாங்குத் தீவிலிருந்துதான் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. எஸ்.பி.எஸ்.கே காதர் சாஹீபு அச்சமயத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கையின்  மேலாளராகவும் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்.  பினாங்கு ஹெரால்டு ப்ரஸ் அச்சகத்திலிருந்து அச்சிடப்பட்டு இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் "உலகத் தமிழ்" இதழ் 285ல் இன்று வெளியிடப்பட்டது.)

Tuesday, May 20, 2025

என் மாணவி உஷாராணி

 



பள்ளிக்கல்வியை முடித்து ஒரு ஆசிரியராக எனது பணியை மலேசியாவில் பினாங்கில் சில மாதங்கள் நான் தொடங்கிய போது பள்ளியில் முதலாம் ஆண்டு என்னிடம் படித்த உஷாராணி தான் படத்தில் இருக்கின்றார்.
குட்டி குழந்தை பெண்ணாக இருந்த உஷாராணி இன்றைக்கு உயர்கல்வி முடித்து மலேசிய பிரதமர் அலுவலகத்தில் செய்தி தொடர்பு பிரிவின் அதிகாரியாக பணிபுரிகின்றார்.
ஆச்சரியமாக இருக்கும்.. ஒவ்வொரு முறையும் உஷாராணியைப் பார்க்கும்போது. ஆசிரியர் பணியை விட்டு கணினி துறைக்கு மாறி மலேசியாவை விட்டு வெளிவந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனது தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீட்டு விழாவிற்கு உஷாராணி என்னைத் தேடிக் கொண்டு வந்துவிட்டார். எப்போதும் என் மேல் மிகுந்த அன்பும் பாசமும் இவருக்கு உண்டு. டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களிடம் எனது மாணவி என அறிமுகப்படுத்தி வைத்த போது அவருக்கு ஆச்சரியம், எனக்கு பெருமை.
மலேசியா பினாங்கில் ஒரு அரசு தமிழ் பள்ளியில் படித்த குழந்தை இன்று நல்லதொரு பணியில் உயர் அதிகாரியாக பணிபுரிவது எனக்கு மட்டுமல்ல தமிழுக்கும் கிடைத்த பெருமை.
நல்வாழ்த்துக்கள் உஷாராணி
-சுபா

Monday, May 19, 2025

மக்கள் ஓசை பத்திரிக்கையில் தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீட்டு விழா செய்தி

 


மலேசிய நாளிதழ் மக்கள் ஓசை பத்திரிக்கையில் தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீட்டு விழா செய்தி.

Sunday, May 18, 2025

காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல்

 



காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் விளங்கும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்


https://nambikkai.com.my/detail/35840?fbclid=IwY2xjawNdiVhleHRuA2FlbQIxMQABHvCnXMBv-0weOm1jlIZyoFTTm-bVuHZKbxtReGLXWeampYVyH2PellNa-j01_aem_LwWKvFvoowY_z-nU_4T1ig

காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் விளங்கும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன் கோலாலம்பூர்: உலகத் தமிழர்களின் புலப்பெயர்வு குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டு அதனைத் தொகுத்து 'தமிழர் புலப்பெயர்வு' நூலாக வழங்கியுள்ள முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார். புலம்பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் தங்களோடு மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, சமயம் இப்படி எல்லாவற்றையும் பேணிக்காத்து வந்தனர். அதனாலேயே மலேசியத் தோட்டங்களில் ஆலயங்களும், தமிழ்ப்பள்ளிகளும் நீங்கா இடம்பெற்றன. அப்படி உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர் வரலாற்றைத் தகுந்த சான்றுகளுடன் நிலைப்படுத்துவது அவசியமான ஒன்று. அதை வெற்றிகரமாகச் செய்து முடித்த முனைவர் சுபாஷினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக இந்த நூல் விளங்கும் என்று அவர் கூறினார். - மவித்ரன்


Saturday, May 17, 2025

தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீடு

 


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீடு நடந்தேறியது.




















பழைய மாடல் வின்டேஜ் வாகனங்கள்

 


மலேசியா ஷா ஆலாம் பகுதியில்..
வார இறுதி சனிக்கிழமை காலை என்பதால் தீயணைப்பு படையினர் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். சிலாங்கூர் மாநில பேரரசி நிகழ்ச்சியைத் திறந்து வைத்து வந்தோருக்கு வாழ்த்து சொல்லி நடந்து சென்றார்.
பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்களும் வைத்திருந்தார்கள்.
புதிய வகை எலக்ட்ரிக் சைக்கிள், பழைய மாடல் வின்டேஜ் வாகனங்கள், பூனை, பாம்பு கண்காட்சி என பொதுமக்களை கவரும் பல விஷயங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. காலையில் மராத்தான் ஓட்டத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.