Thursday, October 30, 2003

People's Hero

இன்னைக்கு ஒரு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன்...

வீரபாண்டிய கட்டபொம்மனை எப்படி தமிழ் நாட்டிலே எல்லோரும் மகாவீரராக நினைக்கின்றனரோ அதேமாதிரி எங்க மலேசியாவிற்கும் ஒரு சில மகா வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் மலாக்கா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒரவர் இருந்தார். அவர் பெயர் ஹங் துவா. இவர் வாழ்ந்த காலம் 16ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அப்போது மலேசியா இஸ்லாமிய நாடாக மாறியிருந்தது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மலாக்காவை ஆண்ட அரசன் பரமேஸ்வரன் இஸ்லாமிய பெண்ணை மணந்து தானும் மதம் மாறி மலேசிய நாட்டையே இஸ்லாமிய நாடாகவும் மாற்றி விட்டிருந்தான். அவனது பரம்பரையில் வந்த ஒரு ராஜாவின் அரண்மனையில் மிக முக்கிய பொருப்பில் இருந்தான் வீரன் ஹங் துவா.

இவனுக்கு 4 நண்பர்கள்; ஹங் ஜெபாட், ஹங் கஸ்தூரி, ஹங் லெக்கியூ, ஹங் லெக்கீர். இதில் ஹங் ஜெபாட் இவனது மிக மிக நெருங்கிய நண்பன். இருவரும் நகமும் சதையும் போல அவ்வளவு நெருக்கம். ஹங் துவா கத்திச் சண்டையில் வல்லவன்.

இந்த வகைக் கத்தியை 'கெரிஸ்' என்று சொல்வார்கள். இந்த கெரிஸ் சண்டையில் ஹங் துவா வல்லவன். இவனது வீரத்தை நாடே புகழ்ந்தது.

ஒரு முறை மன்னருக்கு சில அமைச்சர்கள் ஹங் துவாவைப்பற்றிய தவறான தகவல்களைத் தரவே, அரசன் ஹங் துவாவை தேடிக் கண்டுபிடித்து கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்து விட்டார். இதைக் கேட்ட ஹங் துவா தலைமறைவாகி விட்டான். அரச கட்டளையைக் கேட்ட நண்பர்கள் நால்வரும் மிகுந்த கோபம் அடைந்தனர். ஹங் துவா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்த ஹங் ஜெபாட் இந்த கட்டளையைக் கேட்டு கொதித்து எழுந்தான். நாட்டிற்காக உயிரையே கொடுக்கவும் தயங்காத ஹங் துவாவின் மேல் ஏற்பட்ட பழிக்காக அரசரைக் கொல்ல முடிவெடுத்தான். அரசரின் அரண்மனைக்குச் சென்று அனைவரையும் பயமுறுத்தி விரட்டினான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசர் செய்வது அறியாது திகைத்தார். அமைச்சர்கள் உடனே, இந்த ஆபத்திலிருந்து அரசர் தப்பிக்க ஹங் துவா ஒருவனால் தான் முடியும் எனக் கூறவே அரசனும் ஹங் துவாவைத் தேட ஆட்களை அனுப்பினான். அரசர் ஆபத்தில் மாட்டிக் கொண்டதை அறிந்த ஹங் துவா உடனே நாட்டுப் பற்றின் காரணமாக அரசரைக் காப்பாற்ற விரைந்தான்.

அரசரை எதிர்ப்பவன் தனது உயிர் தோழன் ஹங் ஜெபாட் தான் என்பதை அறிந்ததும் திகைத்தான். நண்பனா அரசரா என்ற குழப்பத்தில் செய்வதறியாது திகைத்தான். இறுதியில் நாட்டின் நண்மைக்காக தனது நண்பனையே தனது கூரிய கெரிஸ் கத்தியால் குத்திக் கொன்று அரசரைக் காப்பாற்றினான். இந்த குழப்பம் மிகுந்த சண்டை 3 பகல் 3 இரவுகள் நடந்ததாம். பக்கத்தில் இருப்பதுதான் மலாக்காவில் இன்றளவும் இருக்கும் ஹங் ஜெபாட்டின் கல்லறை.
அரசர் இந்த நிகழ்வுக்குப் பின் ஹங் துவாவை (மன்னித்து??) ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றளவும் இந்த நிகழ்வு ஒரு சர்ச்சையை கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் அரசர் செய்தது தவறு தானே! ஹங் ஜெபாட் தனது நண்பனுக்காகத் தானே போராடினான். ஆனால் ஹங் துவா செய்தது சரியா..? எனப் பல விவாதங்கள் இன்றளவும் மலேசியாவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. [கற்பில் சிறந்தவள் கண்ணகியா மதாவியா என தமிழகத்தில் விவாதம் நடப்பது போல..:-) ]

No comments:

Post a Comment