Friday, July 19, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 26

26. லங்காவி தீவு

ஐரோப்பாவில் மலேசியாவைத் தெரிகின்றதோ இல்லையோ.. சுற்றுலாப்பயண விரும்பிகளுக்கு லங்காவித் தீவை மிக நன்கு தெரியும். தமிழகத்து சினிமா துறையினர் பலரும் சினிமா காட்சிகளைப் படமாக்க லங்காவித்தீவிற்குச் சென்று இத்தீவின் இயற்கை அழகை பாடலோடு சேர்த்து இணைத்துக் கொடுத்திருக்கின்றார்கள்.  மலேசியா முழுமைக்குமே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலா மையமாகத் திகழும் இத்தீவும் இதனைச் சுற்றி அமைந்திருக்கும் 99 குட்டித் தீவுகளும் கெடா மானிலத்துக்குச் சொந்தமானவையே. வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்தத் தீவில் பார்க்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுகின்றேன். இந்தப் பதிவு லங்காவி தீவு பற்றிய அறிமுகமாக மட்டும் அமைகின்றது.




மேலுள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள லங்காவி, பூலாவ் தூபா இரண்டையும் தவிர ஏனையவை அனைத்துமே மிகச் சிறிய தீவுகள். இவ்விரண்டு தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். ஏனையவை மக்கள் வசிப்பிற்கு ஏற்ற நிலையில் இல்லையென்றாலும் சுற்றுலா நோக்கில் பயணிகள் படகில் சுற்றி வரும் வகையிலும் இறங்கி மணலில் விளையாடி கண்ணாடி போல காட்சியளிக்கும் கடற்கரையில் ஓரம் வரை வந்து செல்லும் சிறு மீன்களையும் பார்த்து மகிழ ரசிக்கச் செல்லலாம்.

லங்காவித் தீவிற்கு அலுவலக விஷயமாக 2 முறையும் சுற்றுலா நிமித்தம் மூன்று முறையும் சென்று வந்துள்ளேன். ஏறக்குறைய தீவின் எல்லா பகுதிகளையும் வாகனத்திலேயே சுற்றிப் பார்த்து ரசித்திருக்கின்றேன். சுற்றுலா துறை விரிவடைந்து விட்ட போதிலும் வயல் வெளிகளுக்கும் பசுமைக்கும் இயற்கைக்கும் இந்தத் தீவில் குறைவு கிடையாது.



லங்காவித்தீவிற்கு இப்பெயர் வர இரண்டு காரணங்களைக் குறிப்பிடுவது வழக்கம். இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பிரசித்தி பெற்றிருந்த லங்காசுக்கா பேரரசின் பெயரின் அடிப்படையில் இப்பெயர் அமைந்திருக்கின்றது என்பது ஒரு காரணம். மற்றொன்று, helang + Kawi  என்ற இரண்டு மலாய் சொற்களின் கூட்டாக அமைந்த பெயர்  என்பது. helang என்பது கழுகைக் குறிப்பது.  Kawi  என்பது காவி நிறத்தைக் குறிப்பது. ஆக பழுப்பு/காவி நிறத்திலான கழுகு என்ற பொருள் கொள்வது.

லங்காவித் தீவின் சின்னமும் கழுகுதான்.

1987ம் ஆண்டு வரி இல்லா சலுகை இத்தீவிற்கு வழங்கப்பட அதுவரை உலகம் அறியாத வரைபடத்தில் மட்டும் தெரிந்ததாக இருந்த  இத்தீவு இப்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.  பல 5 நட்சத்திர ஹோட்டல்கள் கடற்கறையை ஆக்கிரமித்திருந்தாலும் பற்பல விலைகளிலும் தரங்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகளைக் காணமுடியும். மலேசிய அரசாங்க நிகழ்வுகள் பல லங்காவித் தீவுகளில் உள்ள ஏதாகினும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுவது மிக சகஜம்.

மலேசிய மக்கள் லங்காவியின் பெயரைக் கேட்கும் போது மசூரியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இந்தத் தீவிற்கு ஒரு கதாநாயகி உண்டு என்றால் அது மசூரிதான். மசூரி பற்றிய தகவல்கள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன.  உங்கள் வாசிப்பிற்காக சுருக்கமாக இங்கே தருகிறேன்.

தாய்லாந்தின் புக்கெட் பகுதியில் வசித்து வந்த மலாய் பெண்ணான மசூரி தன் பெற்றோருடன் பிழைப்புத் தேடி இந்தத் தீவிற்கு வருகின்றார். லங்காவித் தீவில் மசூரியின் அழகுக்கு இணையான வேறு பெண்களே இல்லையெனும் அளவிற்கு அவர் அழகுடன் திகழ்கின்றார். அங்கே போர் வீரன் வான் டாரூஸை சந்திக்க திருமணமும் நடக்கின்றது. கணவன் போர் வீரன் என்பதால் போருக்குச் செல்ல அச்சமயத்தில் மசூரியின் மாமனாரே மசூரியைத் திருமணம் செய்ய விரும்புகின்றார். இதனைக் கண்ட மாமியார் தன் கணவன் மேல் கோபம் கொள்வதை விடுத்து மசூரியின் மேல் கோபம் கொண்டு பண்பு குறைந்தவர் என்ற பெயர் சேர்த்து அவமானப் படுத்தி அவளை தண்டனைக்கு உள்ளாக்குகின்றார்.

அச்சமயம் மசூரி ஒரு குழந்தைக்குத் தாயாகவும் இருக்கின்றார். வேறொரு நபருடன் நட்பில் இருக்க அதனைக் கண்டு கோபப்படும் மாமனார் மசூரிக்கு தண்டனை தர வேண்டும் என முடிவு செய்கின்றார். தன்னை ஒதுக்கி விட்டு வேறொருவருடன் நட்பு கொண்டிருக்கின்றார் என்ற ஆதங்கம் மாமனாருக்கு; மாமியாருக்கோ கணவனின் கவனத்தை மசூரி கவர்ந்து விட்டாரே என்ற வருத்தம். இரண்டும் சேர மசூரி குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்.



தண்டனையாக ஒரு மரத்தில் கட்டிப் போட்டு கத்தியால் குத்திக் கொல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் மசூரி இறக்கவில்லை. மசூரி தனது குடும்ப கெரிஸ் (வாள்) பயன்படுத்தி கொன்றால் மட்டுமே தன் உயிர் போகும் என்று சொல்ல அதனைக் கொண்டு வந்து அதனால் குத்தி கொலை செய்கின்றனர்.   மசூரியைக் குத்திக் கொலை செய்த போது வெள்ளை இரத்தம் அவர் உடம்பிலிருந்து வழிந்ததாகவும் பறவைகள் கூட்டம் அலைமோதியதாகவும், வெள்ளை மேகங்கள் சூழ்ந்ததாகவும் கதைகள் குறிப்பிடுகின்றன. மசூரி இறக்கும் தருவாயில் இந்தக் கொடுமைக்குக் காரணமாக அமைந்த இந்தத் தீவில் 7 தலைமுறைக்கு வளம் இருக்காது  என சாபம் கொடுத்து இறந்தார் என்பதாகவும் அதனால் கெடா அரச பரம்பரையில் 7 தலைமுறை காலத்திற்கு லங்காவித் தீவு வெறிச்சோடிக் கிடந்ததாகவும் கதை சொல்வார்கள்.

பல முறை சியாம் (அன்றைய தாய்லாந்து) நாட்டின் தாக்கத்திற்குள்ளாகி பல உயிர் இழப்பையும் இத்தீவு கண்டது.  7 தலைமுறைக்குப் பின்னர் சென்ற நூற்றாண்டில் தான் லங்காவித் தீவு சிறிது சிறிதாக அமைதியான நிலையடைந்து தற்சமயம் வளர்ந்து பிரசித்து பெற்று விளங்குகின்றது. மசூரியின் சாபத்தை உள்ளூர் மக்கள் ஒதுக்குவதில்லை. அவரது சாபமே இத்தீவின் புகழ்மங்கியிருந்த நிலைக்குக் காரணம் எனப் பலர் நம்புகின்றனர்.

இன்றைய லங்காவி எழில் நிறைந்த  ஒரு தீவு. அடுத்த பதிவில் எனது தொகுப்பில் இருக்கும் பல படங்களை வழங்க நினைத்திருக்கின்றேன். மலேசியா செல்ல நினைப்பவர்கள் குறைந்தது இங்கு ஐந்து நாட்களாவது தங்கி இயற்கை எழிலில் தன்னை மறக்கச் செல்ல வேண்டிய  இடம் லங்காவித் தீவு.



தொடரும்..

சுபா

படங்கள்: இணையத்தில் எடுத்தவை.
குறிப்புக்கள்:
http://en.wikipedia.org/wiki/Mahsuri
http://www.neosentuhan.com.my/langkawi/support/le001.htm

No comments:

Post a Comment