Friday, July 12, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 24

25. கெடா - கோயில் உள்ள ஊர்

சென்ற பதிவில் கெடா மானில ஆண்கள் பெண்களின் உடைகளைப் பற்றி விவரித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தில் உள்ள சில இந்துக் கோயில்களைப் பற்றிய சில தகவல்கள் தரலாமே என நினைக்கின்றேன்.

கெடா மானிலத்தை எடுத்துக் கொண்டால் மலேசியா முழுமைக்கும் அறியப்படுவதும் மிகப் பிரசித்தி பெற்றதுமாக அமைந்திருப்பது இம்மானிலத்தின் சுங்கை பெட்டானி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம். இந்த ஆலயம் முதன் முதலில் 1914ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் முதல் கும்பாபிஷேகம் 1924ம் ஆண்டு இந்த மானிலத்து இந்து மக்களால் செய்யப்பட்டது.  ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகக்கடவுளே இவ்வாலயத்தின் பிரகார தெய்வம்.


இது தவிர பல ஹிந்து தெய்வங்களுக்கானக் கோயில்கள் இந்த மானிலத்தில் அமைந்திருக்கின்றன. விக்கிப்பீடியாவில் கெடா மானிலக் கோயில்களைத் தொகுத்து ஒரு பட்டியலிட்டிருக்கின்றனர். அதில் உள்ள ஒரு பட்டியல் இங்கு 23 ஹிந்து ஆலயங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. http://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Malaysia


இப்பட்டியலைப் பார்ப்பவர்களுக்குக் கோயில் வகைகளில் மானில வாரியாக ஒரு ஒற்றுமை இருப்பது தென்படலாம்.  பொதுவாக மலேசியாவின் எல்லா மானிலங்களிலும் மாரியம்மனுக்கும், முருகக் கடவுளுக்கும், விநாயகக் கடவுளுக்கும், முனீஸ்வரருக்கும் என்றே அதிகமான கோயில்கள் அமைந்திருக்கும். இந்தியாவில் மிகப் புகழ்பெற்றும் பழம் பெறுமைகளைக் கொண்டும் விளங்கும் சிவன் மஹாவிஷ்ணு போன்ற தெய்வங்களின் ஆலயங்கள் இங்கு மிகக் குறைவு. 27 வெவ்வேறு அம்மன் கோயில்கள் உள்ள பினாங்கு மானிலத்தில் 1 சிவன் கோயில் மட்டுமே இருக்கின்றது. சிவன் விஷ்ணு போன்ற தெய்வங்களின் முக்கியத்துவத்தை வீரபத்திரர், முனீஸ்வரர்  போன்ற தெய்வங்கள் எடுத்துக் கொண்டனர் என்பது தெளிவு.

12ம் நூற்றாண்டு வரை மலேசிய தீபகற்பத்திற்கு வந்து சென்றவர்கள் ஹிந்து சமயத்தையும் புத்த சமயத்தையும் சார்ந்தவர்கள். இவர்கள் கட்டிய கோயில்கள் மலேசிய தீபகற்பத்தில் இன்றைக்கு முழுமையாக இல்லை. ஆனால் இறைவடிவச் சிலைகளும் கோயில்களின் சில பகுதிகளும் சிவன் விஷ்ணு துர்க்கை அம்மன் சிலைகளும் நாடு முழுமைக்கும் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பழம் பெருமைகள் மலேசியாவைப் பொருத்தவரை அங்கு வாழும் மக்களுக்கும் தெரிவதில்லை. அதனைத் தெரிந்து கொண்டு வரலாற்றை ஆராய்வதில் நாட்டமும் பெரிதாக இருப்பதில்லை. 12ம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்து சேர்ந்து முழுமையாக ஆக்ரமித்துக் கொண்ட இஸ்லாமிய மத சம்பந்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் மலேசிய வரலாற்றைப் புரிந்து கொள்ளவே பலர் விரும்புகின்றனர். இது வரலாற்று ஆய்விற்கு முற்றிலும் எதிரான ஒரு கொள்கை என்பதை உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

19ம், 20ம்  நூற்றாண்டில் தென் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்த தமிழகத்தினர் பெரும்பான்மையோர் ரப்பர் செம்பனைத்தோட்டங்களில் உழைப்பதற்காகவும், சிறைக் கைதிகளாக வந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காகவும், ரயில் பாதைகள் அமைப்பதற்காகவும் அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள். ஒரு சிலர் வணிகம் செய்வதற்காக வந்தவர்கள். குறிப்பிடத்தக்கவகையில் தமிழக செட்டியார் சமூகத்தினரைக் கூறலாம். இச்சமூகத்தினர் வணிகம் செய்யும் பொருட்டு மலேசியா வந்து ஏராளமாக பொருள் சேர்த்து இந்தியாவிற்கு கொண்டு போவது என்பது ஒரு புறமிருக்க தாங்கள் வாழ்கின்ற இந்த மலாயாவிலேயே இறைவனுக்கும் கோயில்கட்டி மகிழ வேண்டும் என நினைத்து ஆங்காங்கே பல கோயில்களைக் கட்டினர். இவர்கள் கட்டிய கோயில்கள் பெரும்பாலும் முருகன் கோயிலாக இருக்கும் அல்லது சிவன் கோயிலாக இருக்கும். உதாரணமாக பினாங்கில் இருக்கும் சிவன் ஆலயம் செட்டியார் சமூகத்தினர் கட்டிய பழம் கோயில்களில் ஒன்று.

மலேசியக் காடுகளை அழித்து சீராக்கி ரப்பர் தோட்டங்களாகவும் செம்பனைத் தோட்டங்களாகவும் பரிமளிக்கச் செய்ய அழைத்து வந்த தென்தமிழக மக்கள் தங்கள் ஆன்மீகத் தேவைக்காகவும் கோயில் கட்டி குலதெய்வ வழிபாடும், திருவிழாக்களும் கொண்டாடி மகிழ மறக்கவில்லை. இவர்களைக் கவர்ந்த தெய்வமாக அமைந்தது காளியம்மனும் மாரியம்மனும் வீரபத்திரனும் முனீஸ்வரனும். இது ஒரு தனித்துவம் என்றே நான் கருதுகின்றேன். அல்லல்களும் துயர்களும் மிக நிறைந்த தங்கள் வாழ்வில் துன்பத்தைப் போக்கி இறைவன் கருணையில் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்பும் மக்கள் ஆக்ரோஷமாக பல ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் இவ்வகை தெய்வ உருவங்களை மிக விரும்பி அதற்குக் கோயில்கட்டி பாதுகாத்து கும்பாபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருவதை இன்னமும் காணலாம். இவ்வகைக் கோயில்களில் வேதம் பயின்ற குருக்களும் பட்டர்களும் இருப்பதில்லை. மாறாக அம்மக்கள் கூட்டத்தில் ஒருவர், ஆலய பணிகளில் ஆர்வம் கொண்டிருந்தால் அவரே கோயில் பூசாரியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். உதவிக்கு ஒரிருவர் உடன் இருப்பர்.  மக்களே தங்கள் சொந்தச் செலவில் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்களையும் பூஜைக்கு சந்தனம் குங்குமம், ஊதுபத்தி பால், தயிர், பூக்கள், பழங்கள் என்றும் வாங்கித் தருவார்கள். ஆக மொத்தம் இது அந்தச் சிறிய தோட்டத்து மக்களின் கோயில். இப்படி சிறிதாக ஏற்படுத்தப்பட்ட பல நூறு மாரியம்மன், முனீஸ்வரன், காளியம்மன் கோயில்கள் தற்சமயம் பெரிதாக்கப்பட்டு கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டு பெரிய கோயில்களின் பட்டியலில் இடம்பெறும் நிகழ்வும் அவ்வப்போது மலேசியாவில் நிகழும் ஒன்றே.

18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கெடா மானிலத்தில் ஆயிரக்கனக்கானத்  தமிழர்கள் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கப்பல்களில் கொண்டுவரப்பட்டனர். கூலிம், பாடாங் செராய், லூனாஸ், அலோர்ஸ்டார், போன்ற நகரங்களில் இப்படி வந்து குடியேறிய தமிழர்கள் படிப்படியாக தங்கள் தொழில் வாழ்க்கை என்பதை தோட்டங்களில் மட்டுமே என முடக்கிக் கொள்ளாமல் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து  பலவகைத் தொழில்களில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்திக் கொண்டனர். பொருளாதார ரீதியில் தங்கள் வாழ்க்கையைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டனர் இம்மக்கள். கூலி வேலைக்காக வந்து சேர்ந்த இம்மக்கள் பலரின் சந்ததியினர் தற்சமயம் பல்வேறு அரசாங்கப் பணிகளிலும், வணிகர்களாகவும், கல்விகற்று உயர் பதவிகள் வகிப்பவர்களாகவும் அமைந்திருப்பது தமிழர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் தானே.

தொடரும்..


சுபா

No comments:

Post a Comment