Friday, June 28, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 24

24. கெடா உடைகள் - பாஜு மெலாயு கெடா

பெண்களுக்கான உடைகள் அது எந்த நாடாக இருந்தாலும் சரி அழகிய வர்ணங்களில்  அமைந்து கண்களைக் கவரும் வகையில் அமைந்திருப்பது பெண்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். அழகு என்றாலே பெண்கள்; அந்த  அழகுக்கு அழகு சேர்க்கும் உடைகளை  அமைக்க கற்பனைகளைச் செலுத்தி விதம் விதமாக  அமைத்து மகிழ  ஒவ்வொரு சமூகமும் மறப்பதில்லை.

இந்தியப் பெண்கள் அணியும் சேலைகளை எடுத்துக் கொண்டால் கைத்தறி சேலைகளிலேயே எந்தனை எத்தனை வகை? பட்டுச் சேலைகளில் பல வகை.. சிண்டேட்டிக் வகை சேலைகள்  என்றால் அவற்றிலும்  பல வகை. ஒவ்வொரு மானிலத்துக்கும் சிறப்பு சேர்க்கும் வகை சேலைகள்.. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல விதங்கள்.. சுங்குடி சேலை, செட்டி நாட்டு கைத்தறி, என விதம் விதமாகப் பெண்கள் ரசித்து வாங்கி அணிந்து மகிழ கிடைக்கின்றன.

மலாய் சமூகத்திலும் இம்மக்களின் உடை விஷயத்தில் இப்படி வேறுபாடுகளைப் பார்க்க முடியும். கிழக்கு மாகணங்களான திரெங்கானு, கிளந்தான் போன்ற வகை உடையிலிருந்து தெற்கு மாகாண உடைகளில் வேறு பாடு உண்டு. வடக்கு மாகாணங்களில் தனிச்சிறப்புடன் உடை அலங்காரம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உண்டு. அந்த  வகையில் கெடா மானிலத்தின்  பெண்களுக்கான பாஜு மெலாயு தனி அழகு கொண்ட வடிவத்தில் அமைக்கப்படுவது.



பெண்களுக்கான பாஜு மெலாயு  இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். மேல் பகுதியில் அணியப்படும் பகுதியானது பாரம்பரிய மலாய் உடையிலிருந்து மாறுபட்டு சற்றே குட்டையாக அமைவது. பாரம்பரிய மலாய் உடையின் மேல் பகுதியானது சற்று இருக்கமான அமைப்பு கொண்ட வகையிலோ அல்லது தொள தொளவென்ற வகையிலோ அமைந்தாலும் அதன் நீளம் முட்டிக் கால் பகுதிக்கும் கீழே வரை செல்வதாக அமைந்திருக்கும்.

ஆனால் பாஜு மெலாயு கெடா  மேல்பகுதி குட்டையாக அடிப்படையில் சற்றே தென் தாய்லாந்து உடைபோல   அமைந்திருக்கும் . கழுத்துப் பகுதி வட்டமான அமைப்பிலும் கைப் பகுதி நீளமாக ஆனால் படத்தில் இருப்பது போல கைப்பகுதி வரை நீளாமல் அமைந்திருக்கும். இதனை கைத்தறி வகை, பாத்தேக் வகை, பட்டுத்துணி, சிந்தேட்டிக் வகை துணிகளைக் கொண்டு அமைப்பது வழக்கம். நெல் வயல்களில் பணிபுரியும் பெண்கள் பாத்தேக்கில் அமைந்த இந்த ஆடைகளை அணிந்து வயல்களில் பணி புரிவார்கள். அவர்கள் மேல் பகுதியில் குட்டையான இவ்வகையான  மேல்பகுதி ஆடை அணிந்து  கீழ்பகுதிக்குப் பாத்தேக்கில் அமைந்த சாரோங்கை அணிந்திருப்பார்கள். வெயில் காலத்தில் இவ்வகை துணிகளால் செய்யப்பட்ட ஆடை உடலுக்கு மிக சௌகரியமாக அமைந்திருக்கும்.

பாத்தேக் சாரோங் வகை வகையாக (கைலிகள்)

பாஜு மெலாயு கெடா தற்காலத்தில் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் விரும்பி அணியும் வகையிலும் அமைக்கின்றனர். நான் மலேசியாவில் இருந்த காலங்களிலும் இவ்வகையில் ஆடைகள் தைக்கச் செய்து அணிந்து அலுவலகம் செல்வதுண்டு.

ஆண்களுக்கான உடையோ பொதுவான மலாய் ஆடையை ஒத்ததாக இருக்கும். ஆண்களின் மலாய் ஆடைகள் மூன்று பகுதிகளில் அமைந்திருப்பவை. மேல் பகுதியில் மெல்லிய பருத்தித் துணியால் அமைந்த குர்தா போன்ற தொள தொள என்ற அமைப்பில் அமைந்த சட்டை, ஒரு கால்சட்டை என அமைந்து இடுப்பில் சாரோங் அல்லது ஒரு துண்டு போன்ற ஒரு துணியைக் கட்டிக் கொள்வார்கள்.


மலாய் பாரம்பரிய உடையில் ஒரு ஆண் குழந்தை

ஆனால் திருமணம் அல்லது ஏதேனும் சிறப்பு வைபவங்கள் என வரும் போது பட்டுத் துணிகளில் இவ்வகையான ஆடைகளைத் தயாரித்து உடுத்துவதே வழக்கம். இப்போதெல்லாம் மணிகள் இணைத்து விதம் விதமாக அழகு செய்து இந்த  உடைகளைத் தயாரிக்கின்றார்கள். ஆண்கள் பிரத்தியேகமாக கோட் போன்ற ஒன்றினை வெல்வெட் துணியில் தங்க நிறத்திலான மலர் வடிவங்களை கழுத்துப் பகுதி கை பகுதிகளில் இணைத்துத் தைத்து இந்த ஆடைக்கு மேலே போட்டுக் கொள்வர். கீழ்காணும் படத்தில் ஒரு இளைஞன் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மலாய் பாரம்பரிய உடையை அணிந்திருப்பதையும் ஒரு இளம்பெண் கெடா மானிலத்திற்கானப் பிரத்தியேகமான பாஜு மலாயு அணிந்திருப்பதையும் காணலாம்.




ஆண்கள் இவ்வகை ஆடைகளைப் பணிபுரியும் இடங்களுக்கு அணிந்து செல்வதில்லை. இல்லங்களில் ஓய்வாக இருக்கும் போதும், சமய விழாக்களின் போதும், தொழுகை செல்லும் போதும் குடும்ப விழாக்களின் போதும் பாஜு மெலாயு அணிகின்றனர். காலம் மாறிக் கொண்டிருந்தாலும் கூட மலாய் ஆண்களும் பெண்களும் ஆடை விஷயத்தில் தங்கள் உடைகளை மறக்கவில்லை. தங்களின் பாரம்பரிய உடைகளை அவர்கள் தவறாமல் அணிகின்றார்கள். ஆனால் அவை முன்பிருந்த  வகை மாடல்களிலிருந்து மாறி காலத்தின் தேவைக்கேற்ப அழகியல் விஷயங்களை உள்ளடக்கியதாக அமைந்து இருக்கின்றன.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment