Thursday, June 20, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 22

கெடா - மன்னராட்சி காலத்தில்

பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி குறிப்பிட்டு கடாரத்தில் சோழர்களின் ஆட்சி பற்றியும் சில குறிப்புக்களை முந்தைய பதிவில் அளித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தைப் பற்றிய பொதுவான சில தகவல்களை வழங்குவதும் அவசியம் எனக் கருதுகின்றேன்.

கெடா மானிலத்தைப் பற்றிய குறிப்புக்களைப்  பதிய ஆரம்பித்த முதல் பதிவில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக முடிசூடிக்கொண்டிருப்பவர் கெடா மானிலத்தின் சுல்தான் என்ற விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். மலேசிய மன்னர்கள் தேர்வு பற்றி  பலர் அறியாதிருக்கலாம்.

மலேசியாவில் உள்ள மொத்தம் 13 மானிலங்களில் 9 மானிலங்களில் மட்டுமே சுல்தான்கள் ஆட்சி இருக்கின்றது. மலாயாவிற்கு 15ம் நூற்றாண்டு அதன் பின்னர் போர்த்துக்கீஸியர்கள், ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னர், அதாவது 14ம் நூற்றாண்டு வரை  இந்த ஒன்பது மானிலங்களிலும் மன்னர் ஆட்சியே இருந்தது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் மன்னராட்சி தான் என்றாலும் கூட ஐரோப்பியர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய பின்னர் மன்னராட்சியின் ஆதிக்கம் குறைந்து வந்தது. அச்சமயத்தில் இப்போது தனி மானிலமாக இருக்கும் பினாங்கு கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது. இப்படி ஒன்பது மன்னர்கள் ஆட்சி செய்து வந்த மானிலங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து ஒரே மலேசியா என்ற ஒரு குடைக்குள் வைப்பது என முடிவான போது இந்த  ஒன்பது சுல்தான்களும் 5 ஆண்டு தவணை என்ற வகையில் சுற்றின் அடிப்படையில் மலேசியாவின் மன்னராக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அரசியல் சாசனம் எழுதி வைத்தனர். அந்த வகையில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக இருப்பவர் கெடா மானிலத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்த சுல்தானே.

இம்மானிலத்தின் தற்போதைய அரச பரம்பரைச் செய்திகளைச் சொல்வது மெரோங் மஹாவம்சா காவியம். (Hikayat Merong Mahawangsa). இக்காவியத்தின் குறிப்புக்களின் படி கி.பி.1146ம் வருடம் இந்த அரச பரம்பரையைத் தோற்றுவித்தவர் ஒரு ஹிந்து மன்னரான மெரோங் மஹாவம்சா. இந்த மன்னரின் முழுப் பெயர் ப்ரா ஓங் மஹாவங்சா. பின்னர் இவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவி தன் பெயரை சுல்தான் முஸாபர் ஷா என மாற்றிக் கொண்டார்.


ராஜேந்திர சோழனின் படைத்தலைவன் பீமசேனனின் படைகள் கடாரத்தின் கோட்டையைத் தாக்கி கைப்பற்றி சோழ ஆட்சியை இங்கு தொடக்கினர். அப்போர் காட்சி ஓவியமாக.

சோழ மன்னர்களின் ஆட்சி ராஜேந்திர சோழன் கடாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலம் தொடங்கி ஏறக்குறைய 90 ஆண்டுகள் இப்பகுதியில் நீடித்திருந்தது. ஆக அவ்வாட்சியின் இறுதி காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் விளைவாக உருவான ஒரு புது மன்னராட்சியில் அதன் தலைவரான ப்ரா ஓங் மஹாவங்சா தனது ஆட்சியை நிறுவியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ப்ரா ஓங் மஹாராஜா மன்னராக மூடிசூடிக் கொண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் இந்திய தாக்கம் கொண்ட பெயர்களாகவே அமைந்திருக்கும். கெடா அரசர்களின் பெயர்களை விளக்கும் விக்கி பகுதியில் உள்ள தகவலின் படி இந்த கீழ்க்காணும் பட்டியல்  அமைகின்றது.


  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 1(கி.பி 630 வாக்கில்)
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டிராஜா புட்ரா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 1
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா கர்ணாதிராஜா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா  கர்மா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 2
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா தர்மராஜா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாஜீவா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 2 (இவருக்குப் பின்னர் ப்ரா ஓங் மஹாராஜா பரம்பரையினர் ஆட்சி தொடங்குகின்றது) இந்த மன்னர் காலம் வரை கடாரம் ஒரு ஹிந்து புத்த மதத்தை முதன்மையாகக் கொண்டிருந்த ஒரு பகுதியே என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: http://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment