Sunday, June 23, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 23

கெடா மானிலம்

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசியல் செய்திகளைக் கடந்த இரண்டு பதிவுகள் வழங்குவதாக அமைந்திருந்தன. இந்தப் பதிவில் சுதந்திரத்திற்குப் பின் இந்த மானிலம்  எவ்வகையில்அமைக்கப்பட்டது, அதன் தற்போதைய அரசியல் பொருளாதார நிலை போன்ற விஷயங்களை  வழங்கலாம் என  நினைக்கின்றேன்.

மலேசிய சுதந்திரத்திற்கு முன்னரே பினாங்கு கெடாவின் ஒரு பகுதி என்ற நிலையிலிருந்து பிரிந்து தனி மானிலமாகி விட்டது. கெடாவை சார்ந்து அமைந்ததாக பெர்லிஸ் மானிலம் வடக்குப் பகுதியில் உள்ளது. கிழக்குப் பகுதியில் பெருமளவு தாய்லாந்து நாட்டினை எல்லையாக இந்த மானிலம் கொண்டுள்ளது. தெற்குப் பகுதியில் பேராக் மானிலமும் பினாங்கு மானிலமும் எல்லையாக அமைந்திருக்கின்றன.

சுற்றுலா பயணிகளுக்குச் சுவர்க்கபுரியாகத் திகழும் லங்காவித் தீவும் அதனை ஒட்டி அமைந்திருக்கும் 99 தீவுகளும் கெடா மானிலத்தைச் சேர்ந்தவையே.



கெடா மானிலக் கொடி மிக எளிமையான அமைப்பில் சிவப்பு நிறத்தில் அமைந்தது. சிவப்பு நிறம் இம்மானிலத்தின் பாரம்பரிய வர்ணம். அத்துடன் வளத்தையும் செழிப்பையும் குறிக்கும் வர்ணம் என்பதாக அமைவதால் இந்த வர்ணமே கொடியின் நிறமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மன்னரின் அதிகாரத்தைக் காட்டும் மஞ்சள் நிற பட்டயமும்,  இஸ்லாமிய மதமே அதிகாரப்பூர்வ மதம் என்பதைக் குறிக்கும் பச்சை நிறத்திலமைந்த இளம் பிறையும், நெல் பயிர் இம்மானிலத்தின் பிரதான பொருளாதாரச் சின்னமாக இருப்பதால் நெல்கதிர்களும் கொடியின் சின்னத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் தொகையைப் பொருத்த அளவில் மலேசிய மானிலங்களில்   1,890,098 மக்கள் எண்ணிக்கையுடன்   எட்டாவதாக இம்மானிலம் இடம்பிடிக்கின்றது. மலாம், சீன, இந்திய, தாய்லாந்து  எனப் பல இன மக்கள் கலந்து வாழும் ஒரு மானிலம் இது. 2010ம் ஆண்டின் கணக்கின் படி 77.2% இஸ்லாமியர்களும், 14.2% புத்த மதத்தினரும், 6.7% இந்து மதத்தினரும், 0.8% கிறிஸ்துவ மதத்தினரும் என்ற வகையில் மக்கள் மதச் சார்பு அமைந்திருக்கின்றது.

மன்னராட்சி என்பது மானிலத்தின் தலைவர் என்ற வகையிலும் மானிலத்தின் இஸ்லாமிய மதத் தலைவர் என்ற வகையிலும்  மட்டுமே அமைகின்றது. மானில அரசு என்று தனியாக அமைந்து மானில முதலமைச்சர் அவரைச் சார்ந்த அமைச்சு என மக்களாட்சி சட்டப்பூர்வமாக 1950ம் ஆண்டே நிர்ணயிக்கப்பட்டு சுதந்திரத்தின் போது அதாவது 1957ல் இது வழக்கில் அமைந்தது.மானிலத்தின் ஆட்சி முறையாக நடைபெறும் பொருட்டு 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 12 வட்டாரங்களாவன பாலிங், பண்டார் பஹாரு, கோதா  ஸ்டார், குவாலா மூடா, கூபாங் பாசு, கூலிம், லங்காவித்தீவு, பாடாங் தெராப், பெண்டாங், பொக்கோக் செனா, சிக், யான் ஆகிய வட்டாரங்களாகும்.

இம்மானிலத்தின் பொருளாதாரம் எனப் பார்க்கும் போது நெற்பயிரிடுதலே பிரதான வருவாய் தரும் பொருளாதாரக் காரணியாக அமைகின்றது. இம்மானிலத்திற்கு என்று இல்லாமல் மலேசியா முழுமைக்குமே இம்மானிலத்தில் விளைகின்ற அரிசி, வினியோகம் செய்யபப்டுகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்து அமைந்திருப்பதால் கெடா  மலேசியாவின் அரிசிப்பாத்திரம் (Jelapang Padi - Rice Bowl)  என்றும் குறிப்பிடப்படுகின்றது.



இதற்கு அடுத்ததாக சுற்றுலா துறையைக் குறிப்பிடலாம். உலகம் முழுமையிலிருந்தும்  பிரத்தியேகமாக லங்காவித்தீவிற்குச்  சுற்றுலா நிமித்தம் வந்து கூடும் மக்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது. இதனைத் தவிர்த்து தொழிற்சாலைகள், வணிகம் என்ற வகையிலும் இம்மானிலத்தின் பொருளாதார நிலை அமைந்திருக்கின்றது.

கெடா மானிலத்தில் உலகத் தரம் வாய்ந்த சில பல்கலைக்கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றோடு போலி டெக்னிக், தனியார் பள்ளிகள் என்பனவும் இங்கு அமைந்திருக்கின்றன. அரசாங்கப் பள்ளிகள் இங்கு ஆரம்பப்பள்ளி,  தொடக்கப்பள்ளி என்ற நிலையில் அமைந்திருக்கின்றன. மலேசியாவைப் பொருத்த வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி என்ற நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மலாய், சீன அல்லது தமிழ் ஆரம்பப்பள்ளிகளுக்கு 6 ஆண்டுகால அடிப்படைக் கல்விக்கு தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு அனுப்ப சுதந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்று பின்னர் இடைநிலைப்பள்ளிக்குச் செல்கையில் மலாய் மொழியில் முழுதும் அமைந்த கல்விக்குச் செல்கின்றனர்.

பொதுப் போக்குவரத்து எனும் போது வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை இந்த மானிலத்திற்கு வருவதற்கான சிறந்த சாலை வசதியை வழங்குகின்றது. மானிலம் முழுமைக்குமே தரமான சாலைகள் அமைந்திருக்கின்றன.  இந்த மானிலத்திற்கென்று பிரத்தியேகமாக ஒரு விமான நிலையம் இல்லை. பினாங்கு மானிலத்தில் அமைந்திருக்கும் அனைத்துலக விமான நிலையமே இந்த  மானிலத்திற்கான விமான போக்குவரத்திற்கான பயன்பாட்டிற்கும் அமைகின்றது.


தொடரும்...
சுபா

No comments:

Post a Comment