Saturday, June 15, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 21

21. பூஜாங் பள்ளத்தாக்கு

தென் தாய்லாந்து தொடங்கி கீழே தெற்கில் ஜாவா சுமத்ரா என அனைத்து இந்தோனீசிய தீவுகளையும் ஸ்ரீவிஜய பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. புத்த  மதமும் ஹிந்து மதமும் பிரதான மதங்களாக அமைந்து இந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே புத்த விகாரைகளும் சிவ விஷ்ணு தெய்வங்களின் ஆலயங்களும் பரவி இருந்தன. தென்னிந்தியாவில் ராஜராஜ சோழனின் ஆட்சி செழிப்புடன் இருக்க, பல போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சோழ ராஜ்யத்தின் பரப்பு விரிந்து வளர்ந்து கொண்டே வந்த சமயம் அது.

ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசுக்கும் ராஜராஜசோழனின் சோழப் பேரரசிற்கும் நல்ல இணக்கமான உறவு இருந்து வந்தது. ராஜராஜனின்  நோக்கமானது பிற நாடுகளை கைப்பற்றி தம் ஆளுமைக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக மட்டும் அமைந்து விடவில்லை. மாறாக தென்கிழக்கு ஆசியாவில் இருந்த  ஏனைய நாடுகளின் அரசுகளோடு நல்ல இணக்கமான நட்புறவையும் வளர்த்து வர வேண்டும் என்ற வகையில் இந்த அரசியல் நிலைத்தன்மை அமைந்திருந்தது.இதற்கு ஒரு நல்ல சான்றாக ஆனைமங்கலம் பகுதியில் ராஜராஜன் ஸ்ரீ விஜய பேரரசின்  மன்னனுக்கு பரிசாக அமைத்த  புத்த விகாரையைக் குறிப்பிடலாம்.

ஆனால் இந்த நட்பு நிலை அப்படியே தொடரவில்லை. ராஜராஜன் காலத்திலேயே  கி.பி1007ல் சோழர்களின் போர்க்கப்பல் கடாரத்திற்கு வந்தமையை வரலாற்று நூல்களில் காண்கின்றோம். (Paul Michel Munoz - Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula) இது போர்செய்து கடாரத்தைக் கைப்பற்ற நிகழ்த்திய முயற்சியா என்பது வரலாற்றாசிரியர்களிடம் இன்னமும் தெளிவு பெறாத ஒரு தகவல் தான் என்றாலும் போர்க்கப்பல் கடாரத்திற்கு வந்ததற்கான சான்றுகள் ராஜராஜேஸ்வரத்தில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

நன்றி - விக்கிபீடியா

ராஜராஜனுக்குப் பிறகு முடிசூட்டப்பெற்ற ராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என்ற பெயருடனே அழைக்கும் தகுதி பெற்றவன். ராஜராஜேச்சுரத்தில் உள்ள கல்வெட்டில் கிபி1025ம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் ஸ்ரீவிஜய பேரரசின் முக்கியப் பகுதிகள் சோழ மன்னனின் ஆட்சிக்கு வந்தமைப் பற்றிய குறிப்புக்கள்  உள்ளன. அந்த வகையில் ஸ்ரீவிஜய பேரரசின் வடக்கு பெரும் நகரமாகத் திகழ்ந்த கடாரம், தெற்கில் பலேம்பாங், லங்காசுக்கா, ஜாம்பி, பானல் ஆகிய நகரங்கள் இந்த முழு ராஜ்ஜியமும் ராஜேந்திர சோழன் ஆளுமைக்குக் கீழ் வந்தமையைச் சான்று கூறி நிற்கின்றன.

நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கின்றது. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு மாபெரும் படையை வைத்துக் கொண்டு கிழக்காசிய பெரும் வணிகப் போக்குவரத்துப் பகுதியை ஆக்ரமித்து தம் ஆளுமைக்குக் கீழ்படுத்தி வைக்கும் அளவிற்கு பலம் பொருந்திய ஒரு பேரரசாக ராஜேந்திர சோழனின் அரசு திகழ்ந்தது.  அது இன்னமும் தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழர் ஆட்சி, தமிழ் பேசும் மக்கள், ஹிந்து பௌத்த ஆலயங்கள்  என மனம் கற்பனை செய்து பார்க்கவும் தவிரவில்லை. ஆனால் வரலாறு எப்போதும் எல்லாம் ஒரே வகையில் அமைந்திருக்காது என்பதை அவ்வப்போது நமக்கு நினைவுருத்திக் கொண்டுதானே இருக்கின்றது. ராஜேந்திர சோழன்  காலத்திலும் அவனுக்கு முந்திய கால கட்டத்திலும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியமும் இப்பகுதி மக்களும் ஹிந்து மத பௌத்த மதத்தை பின்பற்றி இருந்தவர்கள் என்பதால் இங்கே ஆங்காங்கே பல கோயில்கள் இருந்தமையை இன்றும் காணமுடிகின்றது. ஆனால் இந்தோனீசியாவில் இன்றளவும் பரவலாக தென்படும் ஆலயங்கள் போல மலேசிய நாட்டில் இப்பழங்  கோயில்கள் பாதுகாக்கப்படவில்லை என்பது உண்மை.

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்காசிய பகுதிகளுக்குக் குறிப்பாக கடாரப் பகுதிக்கு அரேபிய இஸ்லாமிய வருகை அதன் பின்னர் படிப்படியாக இப்பகுதி முழுமையும் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டு ஏனைய கலாச்சார பண்பாட்டு விஷயங்கள் படிப்படியாக குறைந்து மறைந்து போய் விட்ட நிலையை காண்கின்றோம்.

கடாரம் என்ற பெயர்கொண்டிருந்த நகரம் படிப்படியாக கெடா என்ற பெயர் மாற்றமும் பெற்றமையும் இந்த மாற்றங்களில் ஒன்றாகவே அமைகின்றது. ஆனால் கடாரத்தை நினைவு படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக கெடா மானிலத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு அமைகின்றது. இந்த பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை மரபுவிக்கியில் இங்கே உள்ளது.

பினாங்கு எனக்கு எவ்வளவு பரிச்சயமோ அதே அளவிற்கு கெடாவும் எனச் சொல்லலாம். பலமுறை கெடாவில் உள்ள பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கின்றேன். எனது ஒவ்வொரு முறை மலேசியாவிற்கான பயணங்களிலும் கெடாவிற்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாகிவிட்டது.

பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியில் கெடாவின் ஆற்றங்கரைப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கோயில்களை பெயர்த்துஎடுத்து மிக ழகாக அதனைத் தனித்தனியாக அமைத்து பார்வைக்கு வைத்திருக்கின்றார்கள். இப்பகுதியில் முதலில் வருவது ஒரு அருங்காட்சியகம். மிகச் சிறப்பாக ஆங்கிலேயர் காலத்திலேயே அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. சுற்றுச் சூழலே மனதைக் கவரும் வகையில் மிக ரம்மியமாக மைந்த ஒரு மலைப்பகுதியில் பூஜாங் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. ஜெராய் மலைப்பகுதி இதற்குமிக அருகாமையில் இருப்பதால் பசுமைக்குக் குறைவேதும் இல்லை.

மலேசியா செல்பவர்கள் அதிலும் கெடா செல்பவர்கள் தவிர்க்காமல் இப்பகுதிக்குச் சென்று வரவேண்டியது அவசியம்.














தொடரும்...
சுபா

1 comment:

NO said...

தமிழனின் பெருமையை உலகறியச்செய்த சோழர்களிபுகழ் என்றும் மறையாது"

சுபா சகோதரிக்கும்,அவரது குடும்பத்திற்கும் மிக்க நன்றி..!

Post a Comment