Friday, June 7, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 20

20. மஹாதீர்



மலேசிய சுதந்திரம் பற்றியும் துங்கு அப்துல் ரஹ்மான் பற்றியும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1957க்கு முந்தைய சில ஆரசியல் நிகழ்வுகளையும் துங்கு அப்துல் ரஹ்மான் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி அமைந்த அரசியல் விஷயங்களையும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் மலேசியாவின் வளர்ச்சி மிக துரிதமாக அமைந்தது. அதில் முக்கியப் பங்கு வகித்த ஒருபிரதம மந்திரியாக டாக்டர்.மஹாதீர் முகமது அவர்களே  விளங்குகின்றார்கள். இந்தப் பதிவு துன் டாக்டர்.மஹாதீர் முகமது பற்றியதாக அமைகின்றது. அதற்குச் சிறப்புக் காரணம் இவரும் கெடா மானிலத்தின் மண்ணின் மைந்தர் என்பதே.


சுதந்திர மலேசியாவில் 22 வருடங்கள் தொடர்ந்து பிரதம மந்திரி பதவியைத்  தக்க வைத்துக் கொண்ட பெருமை இவரையே சேரும். 1981 தொடங்கி 2003ம் ஆண்டு வரை இவர் மலேசியாவின் பிரதம மந்திரியாகப் பதிவி  வகித்தார். அதற்குப் பின்னரும் தொடர்ந்து அம்னோவில் அங்கத்தினராக  இருந்து வருகின்றார். உலக அரங்கில் பல்வேறு அரசியல் விஷயங்களைத் தயக்கமின்றி பேசி புகழ்பெற்றவர் இவர் என்பது மலேசிய மக்கள் அறிந்த விஷயமே.

கெடாவின் தலைநகரான அலோர் ஸ்டாரில் 1925ம் ஆண்டு  ஜூலை 10ம் தேதி பிறந்தவர் இவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது தந்தையார்  இந்திய மலையாள, மலாய் இனக்கலப்பு; தாயார் மலாய் இனத்துப் பெண். இப்படிப்பட்ட  இனக்கலப்புக்களை மலேசிய சூழலில் அடிக்கடி காணலாம். நல்ல முறையில் ஆங்கிலமும் கற்று பின்னர் சிங்கப்பூரில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவராகப் பணியாற்றியவர் இவர்.



இவரது துணைவியார் சித்தி ஹஸ்மா முகமது அலி அவர்கள் அழகும் அறிவும் நிறைந்தவர். மஹாதீர் படித்த அதே பல்கலைக்கழகத்தில் படித்து  பட்டம் பெற்று மருத்துவராகப் பணிபுரிந்தவர் இவர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. இவரது மூத்த மகள் மரீனா மஹாதீர் சமூக நல எழுத்தாளர்.  மலேசியாவில் பல தன்னார்வல சங்கங்களில் குறிப்பாக எய்ட்ஸ் ஒழிப்பு நிறுவனத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவர்.

துன் டாக்டர் மஹாதீர் முகமது அவர்கள் ஜப்பானிய படைகள் தோல்வி கண்டு அன்றைய மலாயாவிலிருந்து வெளியேறிய சமயம் தொடங்கி அரசியலில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். 1964 முதல் அம்னோ கட்சியில் தீவிர அங்கத்துவம் வகித்து படிப்படியாக வளர்ந்து 1981ம் ஆண்டு நாட்டின் முதலமைச்சர் பதவியைப் பெற்றார். ஐந்து முறை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராகப் பதிவி வகித்தவர் இவர்.

ஒரு வகையில் மலாய் இனத்து மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் இவர் என்று சொன்னால்  அது மிகையாகாது. இது மற்ற இனமக்களுக்குப் பாதிப்பினைத் தரத்தவறவில்லை. சுதந்திர மலேசியாவில் பல்வேறு வேலை வாய்ப்புக்களும் சலுகைகளும் தொடர்ந்து மலாய் இன மக்களுக்கே என்ற  வகையில் அமைந்திருக்கும் நிலை அன்று தொடங்கி இன்று வரை இருப்பது. கல்விக்கூடங்களில் இடமாகட்டும், அரசாங்கப் பணியாகட்டும், சொத்துக்கள் வாங்குவதில் முன்னுரிமையாகட்டும்; அனைத்திலும் மலாய் இனத்து மக்களுக்குச் சலுகைகள் என்பதை சட்ட ரீதியில் வலுவாக்கி தொடர்ந்து இவரது ஆட்சியில் செயல்முறைப்படுத்தப்பட்டு வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.

மஹாதீரின் அதிரடி  நடவடிக்கைகள் என்றால் பொருளாதாரக் கொள்கைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மலேசிய மக்களுக்கு உள்ளூர் தயாரிப்பாக  சொந்தக் கார் உற்பத்தி இடம்பெற வேண்டும் என முடிவெடுத்து ஜப்பானின் மிட்ஷுபிஷி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளூர் தயாரிப்பாக ப்ரோட்டோன் காரை உள்ளூரிலேயே உருவாக்கி உற்பத்தி செய்யும் திட்டம் இவரது ஆட்சி காலத்தில் அறிமுகத்திற்கு வந்தது.  உள்ளூர் கார் தயாரிப்பு ஆரம்பத்தில் புகழ் பெறவில்லையென்றாலும் சில ஆண்டுகளில் மிகப் பிரபலமடைந்தது. இப்போதும் ப்ரோட்டோன் சாகா, வீரா, ஈஸ்வரா என் வெவ்வேறு தயாரிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



இது மட்டுமன்றி free trade zone  எனும் திறந்த மய பொருளாதார வர்த்தக முயற்சிகளை   அறிமுகப்படுத்தி அதன்  வழி சர்வதேச தொழில் நிறுவனங்கள்  மலேசியாவில் நிறுவனங்கள் அமைத்து தொழில் நடத்த அனுமதி வழங்கியதோடு மிக கவர்ச்சிகரமான வருமானவரி  சலுகைகளையும் இந்த நிறுவனங்களுக்கு வழங்கி ஊக்குவித்ததும்  இவரது முயற்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று  எனலாம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பை பெற்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கிராமப்புறத்து ஆண்களும் பெண்களும் சர்வதேச தொழிற்சாலைகளில் பல்வேறு வகை தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பும் இதனால் அமைந்தது.

அதோடு மலேசியாவில் சாலை போக்குவரத்து , நெடுஞ்சாலை என அடிப்படை தேவைகளை இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தியவர் இவர். மலேசிய இந்தியர் காங்கிரசின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த டத்தோ சாமிவேலு அவர்கள்  மஹாதீர் ஆட்சிகாலத்தில் பல ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அ[ப்போது இவர்கள்  இருவர் திட்டத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் தாம் இப்போது பயன்பாட்டில் இருப்பவை. உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் இவை. கொரிய தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி  நெடுஞ்சாலைகள் மலேசியா முழுமைக்கும் அமைக்கப்பட்டன. இது மிகப் பாராட்டப்பட வேண்டிய  ஒரு செயல் என்பதில் ஐயமில்லை.



மஹாதீரின் அரசியல் ஆளுமையை எளிதாக விவரித்து விட முடியாது. அவர் ஒரு கைதேர்ந்த அரசியல் தலைவர். சில  உடல் நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட தொடர்ந்து இவர் அரசியல் ஆலோசகராக அம்னோவில் இன்றும்  செயல்பட்டு வருகின்றார்.

மஹாதீர் கெடா மானிலத்திற்கு மட்டுமல்லாமல்  மலேசியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒருவர் இவர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment