Thursday, November 20, 2003

என் இசை ஆசிரியர் - 1

என் அம்மா தமிழகத்திலிருந்து வந்தவர். கர்நாடக இசையையயும் ஓரளவுக்குக் கற்றவர்; அதனால் எனக்கும் ஒரு வயதே மூத்தவளான என் அக்காவிற்கும் சங்கீத ஞானம் கொஞ்சமாவது வர வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுப்பார். அதோடு தமிழில் அமைந்த தேவாரப் பாடல்களையும் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் பாடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமானது. கர்நாடக இசையை முறையாகப் படிக்க வேண்டும் என்பது அவருக்கு ஆசை. ஆக எங்களுக்காக ஆசிரியரைத் தேட ஆரம்பித்தார். தமிழகத்தில் இருப்பது போல மிகச் சுலபமாக இசை ஆசிரியரை மலேசியாவில் கண்டு பிடிக்க முடியாது. முறையான இசை ஆசிரியர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் கிடைப்பார்கள்.

என் அம்மாவின் தேடுதல் வீண் போகவில்லை. பேராக் மாநிலத்தில் பல இடங்களில் இசை வகுப்புக்களை நடத்தி வந்த திரு சிவ சுப்ரமணியத்தைப் பற்றி நண்பர்கள் வழியாக கேள்விப்பட்டு அவரை பினாங்கு மாநிலத்திற்கும் வரவழைக்க வேண்டும் என முடிவெடுத்தார். திரு சிவசுப்ரமணியம் அவர்கள் தமிழகத்தில் மிகப் பிரபலமான நாகசாமி பாகவதரின் இளைய சகோதரர். இவர் மலேசியாவிலேயே பல ஆண்டுகளாக தங்கி விட்டவர். இங்கேயே திருமணமாகி குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் வந்து விட்டனர்.


என் அம்மா தீவிர முயற்சி செய்து அவரை பினாங்கு மாநிலத்திலும் இசை வகுப்புகளை ஆரம்பிக்க வைத்து விட்டார். ஒவ்வொரு வாரமும் எங்கள் இல்லத்திலேயே செவ்வாய் கிழமைகளில் இசை வகுப்பு நடைபெறும். எங்கள் இருவரோடு மேலும் பலர் இந்த வகுப்புக்களில் கலந்து பயிற்சி எடுத்து வந்தனர். அதில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் அடங்குவார். முதலில் அவ்வளவாக ஈட்டுபாடு வரவில்லையென்றாலும் போகப் போக கர்நாடக இசை எனது வாழ்க்கையில் மிக முக்கிய அங்கத்தை வகிக்கும் அளவுக்கு எனக்கு நெருங்கியது. ஆசிரியர் சிவசுப்ரமணியம் அவர்களோடு எப்போதும் அவரது மனைவியும் கூடவே வருவார்கள். இவர் பாடம் நடத்தும் நேரத்தில் கையில் துணியை வைத்து தைத்துக் கொண்டோ பின்னல் செய்து கொண்டோ இருப்பார். இவரோடு சேர்ந்து பாடுவது இல்லை (சிந்து பைரவியில் வரும் பைரவி போல்..:-) ).

மலேசியாவில் இருந்த வரையில் இவரிடம் பல ஆண்டுகளாக இசை பயின்றிருக்கின்றேன். ஆசிரியருக்குப் பிடித்த மாணவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும். அவரோடு சேர்ந்து 'சபாபதிக்கு வேறு தெய்வம்' என்ற கீர்த்தனையை ஒரு முறை மேடையில் கச்சேரியில் பாடியது எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. இவர் மூலமாக எங்களுக்குக் கிடைத்த ஹார்மோனியப் பெட்டியைப் பற்றிய ஒரு கதை உண்டு. அதனை வேறொரு முறை சொல்கிறேன்.

No comments:

Post a Comment