Monday, November 3, 2003

Penang - 2



பினாங்கில் உள்ள Botanical Garden பற்றி சில குறிப்பூக்களை முந்தைய குறிப்பில் கொடுத்திருந்தேன் அல்லவா. இன்று மேலும் சில அழகிய இடங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்.


பினாங்கில் Air Itam (உச்சரிக்கும் போது ஆயர் ஈத்தாம் என்று சொல்ல வேண்டும்) என்ற ஒரு பகுதி இருக்கின்றது. வணிகர்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்று கூட இதனைச் சொல்லலாம். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் சீனர்கள். வாகனங்களில் இங்கு மதிய வேளைகளில் செல்வது என்பது ஒரு கஷ்டமான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு ஜன நெரிசல்; மற்றும் வாகன நெரிசல் உள்ள ஒரு பகுதி இது.


இதன் ஒரு பகுதியில் தான் Penang Hill என்று சொல்லப்படும் கொடிமலை இருக்கின்றது. இந்த மலை மிக மிக ரம்மியமான ஒரு பிரதேசம். மலையின் உச்சிக்குச் செல்வதற்கு cable train இருக்கின்றது. 2 ரயில்களில் ஏறித்தான் மலை உச்சிக்குச் செல்ல முடியும். மலையின் மேல் ரயில் பெட்டி ஏறும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். இதே போன்ற இரயில் சுவிஸர்லாந்தில் Jungfrau மலைப் பகுதியிலும் இருக்கின்றது. வித்தியாசம் என்னவென்றால் இங்கே சுவிஸர்லாந்தில் மலை பனியால் முற்றாக மூடப்பட்டிருக்கும். ஆனால் பினாங்கில் அப்படியில்லை. குளிர்ச்சியாக இருந்தாலும் பச்சை பசேலென எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும். இந்த மலையின் உயரம் 830 மீட்டர் நீளமாகும். மலை உச்சியில் மதிய நேரம் கூட மிகக் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். மலைக்கு மேல் அழகான பூங்காக்கள், உணவு விடுதிகள் விளையாட்டு மையங்கள் ஆகியவற்றோடு அழகான முருகன் கோவில் ஒன்றும் இருக்கின்றது. இலங்கையில் கண்டி எனும் ஊரில் இதே போன்ற ஒரு கோவிலை நான் பார்த்திருக்கின்றேன். அதை குறிஞ்சிக் குமரன் கோயில் என்று சொல்வார்கள். பினாங்கிலேயே இரண்டு மலைகளில் முருகன் ஆலயத்தைக் காணமுடியும். தண்ணிர்மலையில் ஒன்று மற்றொன்று இந்தக் கொடிமலையில் இருக்கும் கோவில்.


கொடி மலையின் அடிவாரத்திலேயே மிகப் பெரிய புத்தர் ஆலயம் ஒன்று இருக்கின்றது. Kek Lok Si ஆலயம் என்று இது அழைக்கப்படுகின்றது. இந்த புத்தர் ஆலயத்தில் பர்மா, தாய்லாந்து மற்றும் சீன வகை புத்த வழிபாட்டு வகையிலான பூஜைகள் தினமும் நடந்து கொண்டிருக்கும். தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புத்த பீடத்தை தினமும் பார்க்க முடியும். பல பூஜை மண்டபங்கள், தியான அறைகள் இங்கு உள்ளன. இந்த புத்த ஆலயத்தை அடைவதற்கு நீளமான செங்குத்தான படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிகளில் சிறிய சிறிய கடைகளில் நினைவுச் சின்னங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். இவற்றை பார்த்துக் கொண்டே படியேறி விடலாம். நடந்த களைப்பே தெரியாது. இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கிருக்கும் ஆமை குளம் தான். நூற்றுக்கனக்கான ஆமைகளை இங்கு குளங்களில் வைத்து வளர்க்கிறார்கள். பெரிய பெரிய ஆமைகள் இங்கும் அங்குமாக நகர்ந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். தொடரும்..

No comments:

Post a Comment