Wednesday, November 12, 2003

My friend - Seok Hwa

பல நாட்களுக்குப் பிறகு எனது மலேசியத் தோழி சியோக் ஹூவா மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். எனது மலேசிய நண்பர்களில் பலர் சீனர்கள் தான். மலேசியாவில் சீன மலாய் இனத்தவருடன் பழக வேண்டிய சூழல் ஆரம்பப் பள்ளியிலேயே தொடங்கி விடுவதால் எந்த பாகுபாடும் இல்லாமல் நல்ல நட்போடு பழகும் வாய்ப்பு அமைந்து விடுகின்றது. சியோக் ஹூவா ஒரு சீனப் பெண். என்னோடு பல்கலைக்கழகத்திலிருந்து ஒன்றாகப் படித்தவள். சீனர்களில் ஹொக்கியான் எனச் சொல்லப்படும் மொழியைப் பேசுபவள். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு விடாமல் தொடர்ந்து வருவது ஒரு வகையில் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையிலேயே சாந்த குணம் படைத்தவள் சியோக் ஹூவா. எங்கள் நண்பர்கள் கூட்டத்திலேயே மிக மிக அமைதியானவள். சத்தமாகக் கூட பேச மாட்டாள். பெரிய குடும்பத்தில் கடைசிப் பெண்ணாகப் பிறந்தவள்.

முன்பெல்லாம் வாரம் ஒரு முறையாவது எங்கள் நண்பர்கள் எல்லோரும் சந்தித்துக் கொள்வோம். பொதுவாக எங்கள்பேச்சு பொருளாதாரம் மற்றும் கணினித் துறை சார்ந்ததாகவே இருக்கும். சீனர்கள் கடமையில் கண்ணானவர்கள் என்பது ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் தெரிந்த ஒரு மறுக்க முடியாத உண்மை. அதை மெய்ப்பிக்கும் வகையில் எங்களது பேச்சும் அமைந்து விடும். இந்த நண்பர்கள் குழுவில் இவள் கொஞ்சம் வித்தியாசமானவள். இவளுக்கு உலகியல் விஷயங்களுக்கும் மேலாக சமுதாய சிந்தனை, இறை வழிபாடு என்பதெல்லாம் கொஞ்சம் முக்கியம்.

சியோக் ஹூவா புத்த மதத்தைச் சேர்ந்தவள். ஒரு முறை விசாக தினத்தன்று என்னையும் அவள் குடும்பத்தாரோடு பினாங்கில் மிக முக்கிய புத்த விகாரமான Sleeping Buddha ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். புத்த மதத்தினருக்கு இது மிக முக்கிய சமயத் திருவிழா என்பதால் சாலைகளை எல்லாம் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் கூட்டம் அமைந்திருக்கும். பூஜைக்கு வருபவர்களுக்கெல்லாம் புத்தபிக்கு சுவாமி மந்திரம் ஜெபித்த அருள் நூலை கையில் கட்டிவிடுவார். அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டாலும் இறுதியில் புத்தபிக்குவிடமிருந்து நூலை, வாங்கி கையில் எனக்கு கட்டி விட்ட பிறகு தான் அவளுக்கு நிம்மதியே தோன்றியது. நண்பர்களின் அன்பான வார்த்தைகள் மனதிற்கு இன்பமளிக்கக் கூடியவை அல்லவா? விடுமுறைக்கு மலேசியா திரும்பும் போது நிச்சயம் அவளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்போதே உறுதி செய்து கொண்டு விட்டேன்.

No comments:

Post a Comment