Saturday, November 15, 2003

நவராத்திரி - சீனர்களுக்கும்..??


இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்த சமையத் திருவிழா நவராத்திரி. இதனை சீனர்களும் வேறு வகையில் கொண்டாடுகின்றார்கள் என்பது தெரியுமா.?


மலேசியாவில் குறிப்பாக நவராத்திரி வருகின்ற செப்டம்பர் அக்டோ பர் மாதங்களில் சீனர்களும் தொடர்ச்சியாக 9 நாட்கள் தங்களின் தெய்வத்திற்காக சிறப்பான வழிபாடுகளில் ஈடுபடுவர். சில வேளைகளில் இந்தத் திருநாள் நமது நவராத்திரி நாளோடு சேர்ந்தே வரும். முக்கிய வழிபாட்டு தெய்வமாக ஒரு பெண் தெய்வமே வடிக்கப்பட்டிருக்கும். சீனர்களின் ஆலயங்களில் பெரிய 2 மீட்டர் நீளம் கொண்ட ஊதுபத்திகள் நாள் முழுக்க எரிந்து கொண்டே இருக்கும். அந்த 9 நாட்களும் சீனர்கள் சுத்த சைவ உணவு பழக்கத்தையே கடைபிடிப்பார்கள்.



தெருக்களில் சீனர்களின் விதம் விதமான சைவ உணவு வகைகள் விற்கப்படும். இந்த சமயத்தில் பினாங்கில் சாலை மூலைகளிலெல்லாம் தற்காலிக உணவுக் கடைகள் புதிதாக முளைத்திருக்கும். நமக்கும் இந்த நாள் திருநாள் தான். நமது நவராத்திரி வழிபாட்டிற்கும் இந்த பூஜைக்கும் நிச்சயம் தொடர்பிருக்கின்றது. ஆனால் அதன் தொடர்பு இப்போது ஞாபகத்திற்கு வரவில்லை.

பொதுவாகவே மலேசியாவில் உள்ள சீனர்கள் அதிலும் குறிப்பாக புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இந்துக்களின் கோவிலுக்கு வருவது சர்வ சாதாரணமான ஒரு விஷயம். வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் பார்த்தால் ஒரு சீனராவது பக்தர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருப்பார். தைப்பூசத்திருவிழாவில் சொல்லவே வேண்டியதில்லை. பால்காவடி, நீண்ட அலகுக் காவடி போன்றவற்றை இந்துக்களைப் போலவே விரதமிருந்து எடுப்பார்கள்.

No comments:

Post a Comment