Thursday, November 27, 2003

பினாங்கு தமிழ் சினிமா திரையரங்குகள்

பினாங்கில் உள்ள சுற்றுலா தளங்களைப் பற்றி எனது முந்தைய குறிப்புக்களில் கொஞ்சம் சொல்லியிருந்தேன். கலாச்சார மையங்களாக இருந்தாலும் சரி, ஓய்வாக பொழுதைக் கழிப்பதாக இருந்தாலும் சரி, பினாங்கு மிகச் சிறந்த ஒரு ஊர் என்றே சொல்ல வேண்டும். பினாங்கில் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருப்பது போல அடிக்கடி தமிழ் படங்களை திரையிடும் 2 திரையரங்குகள் இருந்தன. ஒன்றின் பெயர் Rex; மற்றொன்று Paramound. இந்த இரண்டு திரையரங்குகளிலும் குடும்பத்தோடு சென்று சில படங்களைப் பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கின்றது. (ஆட்டுக்கார அலமேலு என்ற சிவகுமார்-ஸ்ரீபிரியா நடித்த ஒரு படம் தான் அப்போது கடைசியாக நான் பார்த்த படம்)

அதற்குப் பிறகு இடையில் சில ஆண்டுகள் தமிழ் படங்களே திரையிடப்படாமல் இருந்தன. ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்கள் வர ஆரம்பித்தவுடன் பினாங்கிலும் சில திரையரங்குகள் தமிழ் படங்களைத் திரையிடுவதில் மீண்டும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன. ரஜினியின் படத்தைப்பார்ப்பதற்காகத் திரையரங்கில் கூடிய மக்கள் கூட்டத்தையும் அதிலுள்ள ஆர்வத்தையும் பார்த்த சீன திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். அந்த வகையில் ஓடியன் திரயரங்கு இதில்முன்னோடி. படிப்படியாக இப்போது பினாங்கு முழுவதும் இருக்கின்ற மொத்த திரயரங்குகளில் ஏறக்குறைய நான்கில் தமிழ் படங்கள் காட்டப்படுகின்றன.

பொதுவாகவே மலேசியாவில் இருக்கும் மலாய் இனத்தவர்களுக்கு ஹிந்திப் படங்கள் என்றால் கொள்ளைப் பைத்தியம். இளம் வயதுப் மலாய் பெண்களில் பலர் ஷாருக்கான் மற்றும் கமலஹாசன் பைத்தியங்களாகவே இருக்கின்றனர் இப்போது. மலாய் ஆண்களோ ஐஸ்வர்யாராயின் மேல் தீரா காதல் கொண்டிருக்கின்றனர். ஆக இந்தியக் கலாச்சாரம் என்பது அன்னியமான ஒன்றல்ல மலாய்க்காரர்களுக்கு. அதனால் மலாய் இனத்தவர்களும் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக தமிழ் படங்கள் ஆகிவிட்டன.

No comments:

Post a Comment