Thursday, November 6, 2003

மலாய் உடைகள்

மலேசியர்கள் பல வித வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்ள விரும்புவர். மலாய்க்காரர்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி விதம் விதமான வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்வர். பெண்களைப் பொறுத்தவரையில் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று சிறப்பான ஆடைகள் உண்டு. ஆனால் ஆண்களுக்கு ஒரே விதம் தான்.



ஆண்கள் அணியும் ஆடையை Baju Melayu (உச்சரிக்கும் போது பாஜு மெலாயூ என்று சொல்ல வேண்டும்) என்பர். பெண்களின் உடைகளுக்குப் பல பெயர்கள் உண்டு, அதன் விதத்தைப் பொறுத்து. பொதுவாகவே சிறப்பு நாட்களில் விலையுயர்ந்த பட்டுத் துணியால் செய்யப்பட்ட ஆடைகளையே மலாய்க்காரர்கள் அணிவார்கள். விழாக்காலங்களிலும், சிறப்பு விருந்துகளுக்கும், திருமண வைபவங்களுக்கும் பட்டாடைகளில் வருவதை கடைபிடிப்பார்கள்.


இந்த வகை உடை பாஜு கெடா என அழைக்கப்படும். மிக எளிமையான முறையில் தைக்கப்பட்ட ஆடை இது. கெடா என்பது ஒரு மாநிலத்தின் பெயர். இந்த மாநிலத்தில் நெல் வயல் அதிகம். வயலில் வேலை செய்யும் பெண்கள் அணிவதற்கு ஏதுவாக அமைந்த ஆடை இது. ஆனால் நாளடைவில் எல்லா பெண்களும் (நானும் தான்) அணியும் நவநாகரிக ஆடையாக இது மாறிவிட்டிருக்கின்றது.


இந்த வகை ஆடை தான் பெரும்பாலான மலேசியப் பெண்கள் விரும்பி அணியும் ஆடை. இதை பாஜு கெபாயா என்று சொல்வோம். Batik வகை துணியால் அமைக்கப்படும் இவ்வகை ஆடைகள் மலேசியாவில் மிகப் பிரபலம். Malaysian Airlines பணியாளர்கள் அணிந்திருக்கும் ஆடையும் இந்த வகைதான்.




பாஜு கூரோங் என்று அழைக்கப்படும் இந்த வகை ஆடைதான் பல மலாய் பெண்களால் அணியப்படும் ஆடை. மலேசியாவின் எல்லா மூலைகளிலும் இந்த வகை ஆடைகள் கிடைக்கும். மிகச் சாதாரணமாக மலேசிய ரிங்கிட் 40 லிருந்து இந்த வகை ஆடைகளை வாங்க முடியும். அலுவலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்கள் பரவலாக அணியும் ஆடை இதுதான்.

உங்களுக்கும் இந்த ஆடைகளை அணிந்து கொள்ள ஆசையாக இருக்கின்றதா? இன்றே கிளம்புங்கள், மலேசியாவுக்கு!

2 comments:

பவள சங்கரி said...

REALLY NICE SUBHA. THANKS FOR SHARING. EXPECT MORE FROM YOU.

rasikai said...

மிக நல்ல பதிவும் தகவல்களும்! நன்றி, சுபா! அப்படியே ... சுபாவின் படமும் பார்க்க ஆவல்!

அன்புடன்,
ராஜம்

Post a Comment